மயிலாடுதுறை: அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், நேற்று (ஜூலை 12)ல், அமாவாசையை முன்னிட்டு நடந்த நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில், பழமை வாய்ந்த மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு, அமாவாசைதோறும் மிளகாய் வற்றலால் நடத்தப்படும் நிகும்பலா யாகத்தில் பங்கேற்று அம்பாளை வணங்கினால் சகல ஐஸ்வர் யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசையான நேற்று (ஜூலை 12)ல், கோவில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் ஓத, யாக குண்டத்தில் பழங்கள், ஹோம பொருட்கள், இறுதியாக மிளகாய் வற்றல் சேர்த்து, நிகும்பலா யாகத்தை நடத்தினர். மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதினம் கட்டளை ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை பிரார்த்தனை செய்தனர்.