பதிவு செய்த நாள்
14
ஜூலை
2018
01:07
அந்தியூர்: அந்தியூரில் பழமை வாய்ந்த கோவில் சிலைகளை, பாதுகாக்கும் பொருட்டு, பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தமிழக கோவில்களில், பழமை வாய்ந்த சிலைகள் மாற்றப்படுவதாகவும், திருடப்படுவதாகவும், புகார் எழுந்துள்ளது. எனவே, சிலைகளை பாதுகாக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தியூரில், திப்பு சுல்தான் காலத்தை சேர்ந்த பழமை வாய்ந்த, 16 ஐம்பொன் சுவாமி சிலைகள், அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள், பெருந்துறை சோழீஸ்வரர் கோவில் பாதுகாப்பு மையத்துக்கு, நேற்று எடுத்துச் செல்லப் பட்டன. கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் தலைமையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். ஐம்பொன் சிலைகளின் விபரங்கள்: அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா கோவிலுக்கு உட்பட்ட, விநாயகர், ஆதி நடராஜர், திருநீலகண்டர், நீலாயதாட்சி அம்மன், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி என, 10 சிலைகள்; சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உட்பட்ட விநாயகர், தண்டாயுதபாணி, சண்முகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆறு சிலைகள் உள்பட, 16 சிலைகள்.