பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
11:07
ஈரோடு: தேங்காய் சுடும் நிகழ்ச்சிகாக, ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள், விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வாழ்வியலில், ஆடி மாதம் முழுவதும் விழாவாக கொண்டாடப்படுகிறது. மாத பிறப்பை திருமணமான புதிய தம்பதியர், தலையாடியாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் உறவினர், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து, தேங்காய் சுட்டு கொண்டாடுவதும், தொன்று தொட்டு தொடர்கிறது. தேங்காய் சுட்டு எடுப்பதே ஒரு கலை. தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும். ஒன்றில் துளையிட்டு, தண்ணீரை வெளியேற்றுவர். பின், வெல்லம், கருப்பட்டி, பருப்பு, கடலை, அவல் உள்ளிட்ட சிறு தானியங்களை நிரப்புவர். துளை போட்ட பகுதியில், அழிஞ்சி குச்சியை செருகி, நெருப்பில் சுடுவர். அதை அருகில் உள்ள கோயிலில் உடைத்து வழிபடுவர். இதற்கு தேவைப்படும் அழிஞ்சி குச்சி, கிராமங்களில் மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் ஆடி மாத பிறப்பு நாளை வருகிறது. தேங்காய் சுடும் பண்டிகைக்காக, அழிஞ்சி குச்சியை வெட்டி, தோதாக சீவி, மஞ்சள் தடவி ஈரோட்டில் விற்பனைக்கு குவித்துள்ளனர். ஒரு குச்சி, எட்டு முதல் பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. மங்களகரமான குச்சிகளின் வரவு, ஆடி மாத பிறப்பை, முன்கூட்டியே அறிவிப்பதாக அமைந்துள்ளது.