பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
12:07
கரூர்: கரூர் வந்த தாமிரபரணி அம்மன் சிலைக்கு, பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். தாமிரபரணி ஆற்றின் பெருமைகளை விளக்கும் வகையில், வரும் அக்., 11 முதல், 22 வரை, மகாபுஷ்கரம் விழா நடக்கிறது. அதற்காக, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு தாமிரபரணி அம்மன் சிலை கொண்டு செல்லப்படுகிறது. அந்த சிலை நேற்று மாலை, கரூர் சத்குரு சம்ஹார மூர்த்தி கோவிலுக்கு, அகில பாரத துறவியர் சங்கத்தினர் கொண்டு வந்தனர். பக்தர்கள் சிலைக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்றனர்.
* தாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவை, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், என, துறவியர் சங்க செயலாளர் ராமானந்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தாமிரபரணி ஆற்றை போற்றும் வகையில் மகாபுஷ்கரம் விழா நடக்கிறது. அதில், ஒரு கோடி பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். மகா புஷ்கர விழாவை, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அதற்கு, அமைச்சர் தலைமையில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீர், கடலில் கலந்து வீணாகிறது. வருங்காலத்தில் காவிரியாற்றில், பல தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். மேலும், நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும், என்றார். பிறகு, கோவிலில் பூஜை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, துறவியர் சங்கத்தினர், தாமிரபரணி சிலையுடன் திண்டுக்கல்லுக்கு சென்றனர்.