ஆண்டின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச்சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள் வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இதுதான். இந்த நேரத்தில், ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால் தான் விவசாயத்தில் விதை தெளிப்புக்கு ஏற்ற மாதமாக கருதப்பட்டு ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி வந்தது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் அதன்படி பார்த்தால் ஆடி மாதத்தில் தேவர்களின் மாலை நேரம் தொடங்குகிறது. அதனாலும் பூஜைகள் ஆராதனைகள் மிகுந்திருப்பது இயல்புதானே? ஒரு கல்ப காலத்தில் ஆடி மாதம் ஒன்றில் தான் பார்வதி தேவி. மலையரசன் மகளாக பிறந்தால் என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மை அவதரித்தது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் கோவில்கள் குறிப்பாக மாரியம்மன் கோவில்கள் அனைத்தும் புத்துணர்வு பெற்று காணப்படும் கூழ் வார்த்தலும், பூக்குழி இறங்குதலுமாக களை கட்டி விடும். விளக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகளுக்கும் ஏற்ற மாதம் இது. இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பக்திபூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது.