பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
05:07
ஆடி மாதம் என்றவுடன், நினைவுக்கு வருவது, பலமான காற்றும், தள்ளுபடியும் என்பது மட்டுமல்ல. அம்மனுக்கு உகந்த மாதம், விவசாயிகளுக்கு உகந்த மாதம், பருவமழை தாலாட்டும் மாதம், என பல்வேறு சிறப்புகளை இந்த ஆடி மாதம் பெற்றுள்ளது. ’ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதற்கு தக்கபடி விவசாய வேலைகளைத் துரிதப்படுத்த விவசாயிகள் களமிறங்குவர். ஆடிப்பெருக்கு நாளான, 18ம் தேதி, நீர் நிலைகளில், நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது தொன்று தொட்டு தமிழகத்தில் நடந்து வருகிறது.
அறிவியல் விளக்கம்: சூரியனை பூமி சுற்றி வரும் 360 டிகிரி வட்டப் பாதையில், பூமி சூரியனைக் கடக்கும் ஒவ்வொரு 30 டிகிரியும் ஒவ்வொரு மாதமாகின்றன. இந்த 12 மாதங்களும் உத்தராயணம், தட்சிணாயணம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆடி மாதம் தட்சிணாயணத்தின் தொடக்க மாதமாக அமைகின்றது. வெயில் கொடுமையில் இருந்து பூமி விடுபடுகிறது. எனவே ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன், அம்மனுக்கு உகந்த மாதமாகவும் வழிபடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, பூமியின் வடகிழக்குப் பகுதி கன்னி வீடாக அமைகின்றது. பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள தொடர்பில் கன்னியிலிருந்துதான் காஸ்மிக் அலைகள் மீனத்தை நோக்கி வருகின்றன. ஆனால், காந்தப் புயலோ கும்பம், மகரத்திலிருந்து கடகம், சிம்மம் நோக்கி பாய்கின்றது. இந்த வகையில், வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் காந்தப் புயல் கடக வீட்டில் அதாவது ஆடிமாதத்துக்கு அதிக ஆற்றலுடன் வருகின்றது. இதனையே, கடகம் ஆடி முதல் மேல் வரிசையாக ஆனி, வைகாசி, சித்திரை, பங்குனி, மாசி ஆகிய மாதங்கள் சக்தியான பராசக்தியாகவும், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் சிவன் எனும் பரமேஸ்வரராகவும் கொள்ளப்படுகிறது.