பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
12:07
காஞ்சிபுரம்: வரசக்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கங்கையம்மன் திருவிழா நடந்தது. சின்ன காஞ்சிபுரம், வரத ராஜபுரம் தெருவில், வரசக்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், கங்கையம்மன் திருவிழா, மூன்று நாட்கள் நடத்தப்படும். இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி திருப்பணிகள் நடந்து வருவதால், ஆனி மாத இறுதியில் விழா நடத்தப்பட்டது. விழாவையொட்டி, கடந்த சனிக்கிழமையன்று, சின்ன வேப்பங்குளத்தில், ஜலம் திரட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம், காலையில், அம்மன் வீதி யுலாவும், பகலில் கூழ்வார்த்தலும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, கும்பம் போடுதல் நிகழ்வு நடந்தது. மூன்றாம் நாளான நேற்று, பகல், 12:00 மணிக்கு, சீர்கஞ்சி வார்த்தலுடன் விழா நிறைவு பெற்றது.