பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
12:07
திருச்சி : திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது. மொகலாய மன்னர்கள் படையெடுப்பின் போது, தமிழகத்தில் கோவில் சிலைகள், அங்கிருந்த நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிலை, 40 ஆண்டுகளுக்கு மேலாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஆடி மாதம், 1ம் தேதி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஏழுமலையானுக்கு செலுத்துவதற்காக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள், அனைத்து வகையான மலர்கள், பழங்கள் மற்றும் மங்கள பொருட்கள், ரங்கவிலாஸ் மண்டபத்தில் வைத்து, நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டன. தொடர்ந்து, யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வந்து, கோவிலில் வைத்தனர். அங்கிருந்து, நேற்று இரவு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகிகள், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். இன்று, திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்படும்.