பதிவு செய்த நாள்
19
ஜூலை
2018
12:07
திருப்பூர் : திருப்பூர் நகரின் காவல் தெய்வமான, ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா, 24ம் தேதி நடக்கிறது. நொய்யல் நதிக்கரையில் உள்ள, செல்லாண்டியம்மனை, திருப்பூரின் காவல் தெய்வமாக கொண்டாடுகின்றனர். திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில், தேர்த்திருவிழாவுக்கு முன், காவல் தெய்வமான செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், புனரமைக்கப்பட்டு, மீண்டும் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடந்து வருகிறது. கோவிலில், 12ம் ஆண்டு குண்டம் திருவிழா, 11ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 13ம் தேதி பூச்சாட்டு நடந்தது.
கடந்த, 17ம் தேதி, குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று, பெருமாள் கோவிலில் இருந்து, சீர் எடுத்துச்செல்லும் நிகழ்ச்சியும், இன்று, முனியப்பன் கோவிலில் இருந்து சூலம் எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 20ல், டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து, பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சியும், 21ல் கொடுமுடி தீர்த்தத்தில் சிறப்பு அபிேஷகமும், 22ல் சவுடேஸ்வரி கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலமும் நடக்கிறது.வரும், 23ம் தேதி, குண்டம் திறக்கும் நிகழ்ச்சியும், பரிவார மூர்த்திகள் அபிேஷகம், அம்மை அழைத்தல், திருக்கல்யாணம், குண்டத்துக்கு அக்னி வார்த்தல், சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, 24ம் தேதி, காலை, 6:00 மணிக்கு குண்டம் திறந்து, பூசாரி மற்றும் அருளாளர்கள் குண்டம் இறங்குகின்றனர்.