மானாமதுரை: மானாமதுரையில் மண்ணால் தயாரிக்கப்படும் கஞ்சி கலயங்கள் தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களுக்குமட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும்,வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது ஆடி பிறப்பை ஒட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களிலும் பிற மாநிலங்களில் உள்ள கோயில்களிலும் கஞ்சி கலய ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதற்காக மண்பாண்ட பொருட்களுக்கு பெயர் பெற்ற மானாமதுரையில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் சிறிய அளவிலான கஞ்சி கலயங்கள் மற்றும் தீர்த்த கலயங்கள் ஆகியவற்றை கலை நயத்தோடு தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மண்பாண்ட தொழிலாளி சோமன்35,கூறுகையில், தற்போது ஆடி பிறந்ததை ஒட்டி அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கஞ்சி கலயம், தீர்த்த கலயம், கூழ் காய்ச்சி ஊற்றுதல் போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கம். பெண் பக்தர்கள் இந்த கலயங்களில் தலையில் சுமந்து சென்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர். இதற்காக கலைநயத்தோடு சிறிய அளவில் கஞ்சி கலயங்களை தயார் செய்து வருகிறோம், என்றார்.