பழநி: மூன்றாம் படை வீடாக பழநி திருஆவினன்குடி கோயில் விளங்குகிறது. இத்தலத்தில் முருகன் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக் கிறார்.
இங்கு ஒரே இடத்தில் மகாலட்சுமி (திரு), காமதேனு (ஆ), சூரியன் (இனன்) பூமாதேவி (கு), அக்னி (டி) ஆகிய ஐந்து தெய்வங்கள் இணைந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குப்படி, தண்டனையோ மற்றும் நற்பலன்களையோ வாரி வழங்கும் சாயா கிரகம் சனிபகவான் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார்.
இந்த சனிபகவானின் சிறப்பு என்னவென்றால், ஒருசமயம் இந்திரன் தனது ஆணவத்தால் சிவ யாக, பிரசாதத்தை ஏற்று கொள்ளாமல் அலட்சியமாக இருந்தார். இதனால் சனிபகவான் கோபம் கொண்டு இந்திரனை பிடித்து அவரது பதவியை இழக்க செய்தார். இந்திரன் சிவபெரு மானிடம் மன்னிப்பு கேட்டார்.
கிழக்கு நோக்கிய சனீஸ்வரனை வணங்கினால் மீண்டும் இந்திர பதவி கிடைக்கும் என சிவ பெருமான் கூறினார். இந்திரனும் பழநி திருஆவினன்குடியில் கிழக்கு திசையில் உள்ள சனிபகவானை வணங்கி பரிகாரம் செய்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றதாக கதை கூறுகின்றனர்.
ஆகையால் இந்த சனீஸ்வரரை வணங்கினால் இழந்த பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் மாதாபிறப்பு போன்ற முக்கிய நாட்களில் வெள்ளிக் கவசம் சாத்தி, சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடக்கிறது. பழநி மட்டுமின்றி ஏராளமான வெளியூர் பக்தர்கள் சனிபகவானை வழிபடுகின்றனர்.
அதனால் பழநிக்கு வந்தால் பதவி தரும் திருவாவினன்குடி சனீஸ்வரனையும் மறக்காமல் தரிசித்து செல்லுங்கள். பதவி வந்தால் வாழ்வில் நலம்பெறலாம்தானே. காலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை நடைதிறந்திருக்கும். விழாக்காலங்களில் அதிகாலை 4:00 மணி முதல் இரவு நடைசாத்தப்படும் நேரம் மாறுபடும். விபரங்களுக்கு: 04545 242493.