பதிவு செய்த நாள்
22
ஜூலை
2018
10:07
சோலன்: ஹிமாச்சல பிரதேசத்தில், தன் கனவில் வந்த சிவன் கோவிலை, 38 ஆண்டுகளாக கட்டி வருகிறார், 64 வயது முதியவர். ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய் ராம் தாகுர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சுற்றுலா பயணியர் வருகை அதிகமுள்ள இம்மாநிலத்தின், சோலன் மாவட்டத்தில், கற்களால் கட்டப்பட்டு வரும் கும்ப சிவன் கோவில் பிரபலமாகி வருகிறது. இந்த கோவிலை, 15 லட்சம் ரூபாய் செலவில், சத்யபூஷண் என்ற, ௬௪ வயது முதியவர் கட்டி வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அளிக்கும் நன்கொடையையும் இதற்காக பயன்படுத்துகிறார்.
இது குறித்து சத்யபூஷண் கூறியதாவது:பள்ளி நாட்களில், மரம் மற்றும் மண்ணில், சிற்பங்களை வடிவமைக்க கற்றுக் கொண்டேன். சிவன் கோவிலை கட்டுவது போல வந்த கனவு, என்னை கோவில் கட்டத் துாண்டியது. என் மூதாதையர் நிலத்தில், 1980ல், இந்த கோவிலை கட்டும் பணியை துவங்கினேன். இன்னும், கோவில் பணிகள் முழுமை அடையவில்லை.இதுவரை, அரசிடம் எந்த உதவியும் பெறவில்லை. கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு உள்ளூர் மக்கள் உதவினர். கோவில் முழுவதும் கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் கட்டப்பட்டுள்ளது. எந்த வர்ணமும் பயன்படுத்தவில்லை. கோவிலுக்கு கீழ் ஒரு குகை உள்ளது. இந்த தலத்துக்கு, டெம்பிள் இன் மை ட்ரீம் என பெயரிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.இக்கோவிலில் மின்சார இணைப்பை இயக்கியதும், சிவன் தலை மீது, நீரூற்றில் இருந்து தண்ணீர் விழுவதுடன், மந்திரங்கள் ஒலிக்கும் வகையில், சத்யபூஷண் ஏற்பாடு செய்துள்ளார்.