பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, பல்லவர் கால, நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் முனிசாமி, கோவிந்தராஜ், வேந்தன், சிவங்கர் குழுவினர், ஜவ்வாதுமலையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, பல்லவர் காலத்தை சேர்ந்த பழமையான நடுகல் ஒன்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து, மோகன்காந்தி கூறியதாவது: சங்க காலத்தில், ஜவ்வாதுமலையை, விரமலை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்குள்ள, புதூர்நாட்டிற்கு அருகே, மொழலை கிராமத்தில், கி.பி., 8ம் நூற்றாண்டை சேர்ந்த, நான்கு அடி உயரம், மூன்று அடி அகலத்துடன் நடுகல் உள்ளது. இதிலுள்ள சிற்பம், பல்லவர் காலத்தை சேர்ந்தது. வீரனின் முகம் நேராக பார்த்தும், மேல் கொண்டையுடன் காணப்படுகிறார். வலது கையில், நீண்ட கத்தி போன்ற ஆயுதமுள்ளது. இடது கையில், வில்லொன்றை வைத்துள்ளார். இடைக்கச்சும், குறுவாளும், இடுப்பில் கட்டப்பட்டுள்ளன. இடது கால் மேல் நோக்கி செதுக்கப்பட்டுள்ளது. போருக்கு செல்ல தயார் நிலையில் வீரன் இருப்பதால், போர் நடந்தது தெரியவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.