பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
விழுப்புரம்: மேல்மலையனுாரில் சமண பள்ளிக்கு கொடை கொடுத்ததை தெரிவிக்கும் கி.பி., 963ம் ஆண்டு சோழர்கால கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், கணினி அறிவியல் துறை பேராசிரியர் சீனு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், முண்டியம்பாக்கம் ஜோதிபிரகாஷ் ஆகியோர், மேல்மலையனுார் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள பாறையில் சமண கல்வெட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்வெட்டு குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது; மதுரை கொண்ட கோப்பரகேசரி என்ற முதலாம் பராந்தக சோழனின் 50வது ஆட்சியாண்டான கி.பி., 963ம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு இது. சமண பள்ளிக்கு கொடை கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. சிங்கபுர நாட்டு மீவழி மலையனுாரை சேர்ந்த நல்லுாழார் கரைமாந்தன்காரி, நீலக்காரி, அவன் தம்பி தேருமான் விமாச்சி, மலையகுட்டி ஆகிய நால்வர், மேல்மலைப் பள்ளி தேவர் என்ற சமண கடவுளுக்கு தினமும் பூஜை செய்வதற்காக அவர்களுடைய நிலமாகிய மாந்தோட்டத்தின் மேற்கே உள்ள ஏற்றம், பெய்த்தியொட்டைகழுவல் என்னும் வயல் ஆகியவை கொடையாக கொடுக்கப்பட்டு உள்ளதை, இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டை கண்டு பிடித்ததன் மூலம், 1055 ஆண்டுகளுக்கு முன்பு, மலையனுார் என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கப்பட்டுள்ளதையும், அங்கு சமணக்கோவில் இருந்ததையும் அறிய முடிகிறது. கல்வெட்டு அருகே சமண கோவில் ஒன்று உள்ளது. இந்த இடமும் ஆயிரம் ஆண்டுகளாக சமண கோவிலுக்கு சொந்தமாக இருந்து வருகிறது. செஞ்சியை சுற்றிலும் சமண படுக்கைகள், சிற்பங்கள், கோவில்கள், சின்னங்கள், சங்க காலம் முதற்கொண்டே இருந்து வருகிறது. சிங்கபுர நாடு என்பது தற்போதுள்ள சிங்கவரம் ஆகும். இது அக்காலத்தில் நாட்டுப்பிரிவின் தலைமையிடமாக இருந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.