பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
12:07
பழநி: பழநியில் 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களை சிறைப்பிடித்தது, அவர்களை விடுவிக்க லஞ்சம் கொடுத்த தகவல்கள் போன்றவை உள்ளன.பழநி தொல்லியல்துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம், மானுாரைச் சேர்ந்த ஒருவர் செப்பேடு ஒன்றை கொடுத்தார். அதனை ஆய்வு செய்தபோது செப்பேடு 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது எனவும், அப்போது வாழ்ந்த குறுநில மன்னர் சங்குபிள்ளைக்கு ஊர்மக்கள் வழங்கியது எனவும் தெரிய வந்துள்ளது.
நாராயணமூர்த்தி கூறியது: செப்பேட்டின் இருபக்கமும் 175 வரிகள் உள்ளன. இதில் கி.பி.,16ம் நுாற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் தளபதி அரியநாதமுதலியார் பற்றிய தகவல்கள் உள்ளன. இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியவர்.பெண்கள் மீட்புகி.பி., 1551ல் சங்குபிள்ளை ஆட்சி செய்த வடப்பட்டி, ரெண்டப்புலியை அரியநாதமுதலியார் முற்றுகையிட்டு ஐந்து பெண்களை சிறைபிடித்து மதுரைக்கு கொண்டு சென்றார். சங்குப்பிள்ளை மதுரைக்கு ஆட்களை அனுப்பி 880 பொற்காசுகளை செலவழித்து, பெண்களை மீட்டார்.அதற்கு நன்றி கடனாக ஊர்மக்கள் சங்குபிள்ளைக்கு செப்பேடு வழங்கினர்.அதில் பிள்ளைமார் சமூகத்தினரும், மக்களும் சங்குபிள்ளைக்கு கடன்பட்டிருப்பதாகவும், கல்யாணத்துக்கு முன் பெண், மாப்பிள்ளை வீட்டார் தலா ஒரு பணமும், இறப்பிற்கு ஒரு பணமும் சங்குபிள்ளைக்கு காணிக்கையாக கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். இதை மீறினால் அவர்களை விலக்கி வைத்து, வீட்டை கொள்ளையிட்டு வெளியேற்றுவோம் என உள்ளது.அந்தகால லஞ்சம்சங்குபிள்ளையின் ஆட்கள் மதுரையில் பெண்களை மீட்க சென்றபோது, மதுரை கோட்டை வாசல் பிரதான காவலருக்கு 100 பொற்காசுகள் கொடுத்த பின்னர்தான் கோட்டைக்குள் செல்ல அனுமதித்துள்ளனர். இத்தகவலும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.