பதிவு செய்த நாள்
31
ஜூலை
2018
04:07
சைவத் திருமுறைகளைப் பன்னிரண்டாக வகுத்துள்ளனர், ஆன்றோர். முதல் ஏழு திருமுறைகள் அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகியோரால் அருளப்பட்டவை. ஐயடிகள் காடவர்கோன், காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிருவர் அருளிய பாடல் தொகுதி பதினோராம் திருமுறை ஆகும். நாயன்மார்களில் இருவர் பல்லவ மன்னர்கள். கழற்சிங்க நாயனார் ஒருவர்; ஐயடிகள் காடவர்கோன் மற்றொருவர். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவ மன்னர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். காட்டைத் திருத்தி நாடாக்கியதும், குகைக் (குடைவரை) கோயில்கள் அமைத்ததும் பல்லவர்களின் பணிகளில் முக்கியமானவை. காடுகளை அழித்து விளைநிலங்களாகப் பயன்படுத்த வகை செய்த காரணத்தால், அவர்கள் காடுவெட்டி, காடவர், காடவராயர், காடவர்கோன் முதலான பட்டப்பெயர்களைக் கொண்டனர். சிவபக்தர்களாகத் திகழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரே, ஐயடிகள் காடவர்கோன்.
திருத்தொண்டத் தொகையில் ‘ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்’ என்று கூறியிருக்கிறார் சுந்தரர். ஐயடிகள் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். பல்லவ அரியணை ஏறியவர். ‘கன்னி மதில்சூழ் காஞ்சிக் காடவர் ஐயடிகளார்’ என்று சேக்கிழார் பாடுகிறார். அரியணையில் அமர்ந்திருத்தல் அல்லல் என்றுணர்ந்த காடவர்கோன், விரைவில் அரசுரிமையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு, துறுவுபூண்டு பல தலங்களுக்குச் சென்று பாடி வழிபட்டார். சிதம்பரத்துக்கு வந்து சில காலம் தங்கியிருந்து, திருச்சிற்றம்பலத்து இறைவனின் திருநடனம் கண்டு மகிழ்ந்திருந்தார். பல நாட்கள் பல திருப்பணிகளைச் செய்து, இறுதியில் இறைவன் திருவடி எய்தினார். இவர் கி.பி. 6-ம் நூற்றாண்டினராக இருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எப்படியாயினும், திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரர் காலத்துக்கும் முந்தையவர் என்பது தெளிவு. இந்த நாயனார் அருளிய வெண்பா பாடல்களுக்கு, ‘சேத்திர வெண்பா’ என்று பெயர்; பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருவிடைவாய், திருநெடுங்களம், தண்டலை, திருவானைக்கா, திருமயிலை, உஞ்சேனை மாகாளம், திருச்சாய்க்காடு, சிராமலை, மழபாடி, திருவாப்பாடி, கச்சி ஏகம்பம், திருப்பனந்தாள், ஒற்றியூர், திருமயானம் முதலிய பதிகளைப் பாடியுள்ளார். இவர் அருளிய பாடலில் ஒன்று:
ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாருங்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நன்னாமுன் நல்நெஞ்சே
தில்லைசிற் றம்பலமே சேர்.