பதிவு செய்த நாள்
02
ஆக
2018
01:08
மதுரை: மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில், பிராமணர் அல்லாத மாரிச்சாமி, 34, அர்ச்சகர் ஆனதை, பக்தர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த, 2007ல், முதல்வராக இருந்த கருணாநிதி, அனைத்து மதத்தினரும் அர்ச்சகராகும் திட்டத்தை துவங்கினார். மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்துார், பழநியில் சைவ வேத பாடசாலை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணியில் வைணவ பாடசாலை மூலம், 206 பேர் பயிற்சி பெற்றனர். இவர்கள், ஓராண்டு பயிற்சிக்கு பின், ‘இளநிலை அர்ச்சகர்’ சான்று பெற்றனர். 10 ஆண்டுகளாக, அர்ச்சகர் பணி வழங்கவில்லை.
தற்போது, கேரளா அரசு, பிராமணர் அல்லாதோரை அர்ச்சராக்கி வருகிறது. இதே போன்று, தமிழகத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு உத்தரவிட்டது. இதன்படி, மதுரை தல்லாகுளம் வடகரை அய்யப்பன் கோவில் அர்ச்சகர் பணிக்கு நடந்த நேர்காணலில், அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த, மாரிச்சாமி என்பவர் தேர்வானார்.
அவருக்கு, கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து, பணி நியமன ஆணை வழங்கினார். சிறு வயது முதல், மாரிச்சாமிக்கு ஆன்மிகத்தில் நாட்டம் இருந்ததால், பன்னிரு திருமுறை பாடல், ஆகம விதிகள் பயிற்சி பெறுவது எளிதானது. இதற்கு முன், புதுார் வீரமாகாளியம்மன் கோவில் அர்ச்சகராக இருந்துள்ளார்.