நாயகம் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அதிகம். அவர் பொறுமையின் சிகரமாக விளங்கினார். அவருக்கு ஐம்பது வயதான நிலையில் அவரது துணைவியார் கதீஜா அம்மையாரும், பெரிய தந்தையார் அபிதாலிப்பும் மறைந்தார்கள். பெரிய தந்தையார் இருக்கும் வரை நாயகத்தின் அருகில் நெருங்கவே பயந்த எதிரிகள் அதன் பிறகு இழைத்த கொடுமைகளை விவரிக்க வார்த்தையில்லை. ஒரு பகைவன், நாயகத்தின் மீது ஒட்டகத்தின் குடலை வீசினான். “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுங்கள்” என்று சொன்னவரல்லவா நாயகம்! அதனால் எதையும் பொருட்படுத்தாமல் அமைதி காத்தார். இந்த பொறுமை, எதிரிகளுக்கு தைரியத்தைக் கொடுத்தது. நாயகம் மீது ஒருவன் புழுதி வாரி தூற்றவே உடலில் புழுதியோடு வீடு திரும்பினார். இதைக் கண்டு கலங்கிய மகள் பாத்திமா, தந்தையின் உடலைக் கழுவினார். மகளிடம் நாயகம் “இதற்காக அழ வேண்டாம். உன் தந்தையை இறைவன் காப்பாற்றுவான்” இறை நம்பிக்கைக்கான அடிப்படை தகுதியே பொறுமை என்பதை உலகிற்கு உணர்த்தினார்.