’முருகப்பெருமானுக்கு என்ன விசேஷப் பெருமை?’ என்று கேட்டார் ஒருவர். மகாசுவாமிகளும் சொல்லத் தொடங்க மடத்தில் இருந்த பக்தர்கள் சூழ்ந்து நின்றனர். “முருகனை முதற்கடவுளாக்கி ’கவுமாரம்’ என்ற தனிப்பிரிவை உண்டாக்கினார் ஆதிசங்கரர். ’சுப்ரமண்ய புஜங்கம்’ என்ற ஸ்லோகத்தையும் பாடினார். இதைப் படிப்பவர்கள் நீண்ட ஆயுள், உடல்நலம் பெறுவர். மதம் பிடித்த யானை வடிவில் விநாயகர், வள்ளியைத் துரத்தியதால் தான் அவள் முருகனை மணந்தாள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதை ’கைத்தல நிறைகனி’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். அதில் முருகனை ’சிறுமுருகன்’ என்று சொல்லியவர் விநாயகரைப் ’பெரும் ஆள்’ என குறிப்பிடுகிறார். ’அக் குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே’ என்பது பாடல் வரி. திருப்புகழ் பாடல்களில் ’பெருமாளே... பெருமாளே’ என முருகப்பெருமான் பெரும் ஆளாகக் கொண்டாடப்படுகிறான். ஆனால் ’கைத்தல நிறைகனி’ பாடல் மட்டும் விநாயகருக்கு ’பெரும் ஆள்’ என்ற பட்டம் கொடுக்கிறது. ’தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வைத்த அண்ணன்’ என்னும் போது அந்த பெருமையை அண்ணனுக்குத் தானே கொடுப்பது நியாயம் தானே...!
பிரம்மச்சாரி, குடும்பஸ்தன், சன்னியாசி என்று மனித வாழ்க்கை முறை அமைய வேண்டும். முருகனைப் பொறுத்தவரை சன்யாசத்திற்குப் பிறகு குடும்பநிலை வருகிறது. பழனியப்பன் கதை தான் நமக்கு தெரியுமே? ஞானப்பழம் கிடைக்காமல், தண்டம் தாங்கி கோவணமுடன் தண்டாயுதபாணியாக நின்றான் முருகன். உண்மையில் அவன் கையில் உள்ள தண்டம் ஆயுதம் அல்ல. துறவிகள் கையிலுள்ள தண்டம் போன்ற கம்பு தான் அது. கோவணாண்டியாக பழநியில் இருப்பது சன்னியாசக் கோலம் தான். அதன் பிறகு அசுரன் சூரபத்மனை வதம் செய்த பின் திருமணம் நடக்கிறது. இப்படி சன்னியாசத்திற்கு பின் கல்யாணம் நடக்கும் விநோதம் முருகன் வாழ்வில் நிகழ்ந்தது. கோவணாண்டியாக நின்றவர் சாதாரணமானவர் அல்ல; ஞானபண்டிதர் என்பதால் ’ஞான பண்டித சுவாமி நமோ நம’ எனப் பாடுகிறார் அருணகிரிநாதர். கடைசியில் சிவபார்வதி நேரில் வந்து கோபத்தில் இருந்த முருகனை சமாதானப்படுத்தியதாக புராணம் சொல்கிறது. இவை எல்லாம் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் தான். ’சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’ என அப்பெருமானைச் சரணடைந்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.