பதிவு செய்த நாள்
10
ஆக
2018
11:08
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் திரண்டனர். சதுரகிரிமலையில் ஆடி அமாவாசை விழா நேற்று பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. இதற்காக அதிகாலை 4:30 மணிக்கு மலைப்பாதை திறக்கப்பட்டதும் செல்ல துவங்கினர்.
ஆக.,14 வரை மலை பாதை திறந்திருக்கும் நிலையில், அடிவாரத்தில் உடமைகள் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பைகள், தட்டு, டம்ளர், பீடி, சிகரெட், புகையிலை பறிமுதல் செய்யப்பட்டன. வாகனங்கள் 7 கி.மீ.,க்கு முன்பே நிறுத்தப்பட்டன. அவர்களுக்கு போதிய பஸ் வசதி செய்யாததால் அடிவாரம் வரை நடந்தே சென்றனர். நுழைவுவாயில் பகுதியில் வேலி அகற்றப்பட்டு ,அதன்வழியே மலை தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்கள் செல்லவும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ வழிபாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் மூலவர்களுக்கு 18 வகை அபிஷேகம், வில்வஅர்ச்சனை வழிபாடு, சங்கொலி முழங்க சிறப்பு பூஜைகளும் நடந்தன.
அன்னதானத்துக்கு கட்டுப்பாடு: மலைக்கு செல்லும் பக்தர்கள் தரிசனம் முடிந்து அன்னதான மடங்களில் உணவருந்தி செல்வது வாடிக்கை. இந்த ஆண்டு அன்னதான மடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும், சிலமடங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததாலும் மலைக்கு சென்ற பக்தர்கள் உணவுக்காக பசியுடன் அலைந்தனர். இன்று சிவராத்திரி வழிபாடும் நாளை (ஆக.11) அமாவாசை வழிபாடும் நடக்க உள்ளது. மதுரை, விருதுநகர் கலக்டர்கள்,அன்னதான மடங்களில் கட்டுப்பாடு களை தவிர்த்து உணவு வழங்கவும், தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய பக்தர்கள் விரும்புகின்றனர்.