Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
16. ஆதிரை பிச்சையிட்ட காதை 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
முதல் பக்கம் » மணிமேகலை
17. உலகவறவி புக்க காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
03:01

(பதினேழாவது மணிமேகலை காயசண்டிகை என்னும் விச்சாதரி வயிற்று யானைத் தீயவித்து அம்பலம் புக்க பாட்டு)

அஃதாவது-அமுதசுரபி யென்னும் அரும்பெருந் தெய்வப் பாத்திரத்திலே முதன் முதலாக அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து என்னும் கருத்தோடு மணிமேகலை முதன் முதலாக அத்தகு மரபின் பத்தினியாகிய ஆதிரை நல்லாள் முன்றிலிலே சென்று புனையா ஓவியம் போல் நின்று அவ்வாதிரை நல்லாள் பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகெனத் தொழுது வலங்கொண்டு அமுதசுரபி நிறையப் பெய்த ஆருயிர் மருந்தாகிய பிச்சையை ஏற்றவள், அவ்வமுத சுரபியாலே ஆற்றாமாக்கள் அரும்பசி களைந்து நாடோறும் அருளறம் ஆற்றுதற்கு அந் நகரத்தே ஊரம்பலத்தே புகுந்து ஆங்கு ஆருயிர் ஓம்பும் செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- காயசண்டிகை என்னும் விச்சாதரி ஆனைத்தீநோயாலே ஆற்றவும் துயருழப்பவள், மணிமேகலையின் அறச் செயல்கண்டு உணவு வேண்டலும் அமுதசுரபியினின்றும் உணவு பெற்றுண்ட பொழுதே அவளது ஆனைத்தீ நோய் அகன்று விடுதலும் அவள் மணிமேகலைக்குத் தன் வரலாறு கற்போர் உள்ளம் கசிந்துருகுமாறு கூறுதலும், உலகவறவியின்கண் உறுபசியுழந்தோரும் பாதுகாப்பவர் ஆருமின்மையின் அரும்பிணி யுற்றோரும் இடுவோர்த் தேர்ந்திருப்போர் பலராவார், நீ அங்குச் சென்று அறம்புரிக என்று அறிவுறுத்துதலும் மணிமேகலை உலக அறவியின்பாற் சேறலும் ஆண்டுச் சம்பாபதி கோட்டத்தை மும்மையின் வணங்கிக் கந்திற் பாவையையும் கைதொழுதேத்திதலும், உலகவறவியின்கண் ஊண் ஒலி எழுதலும் பிறவும் அழகுற ஓதப்பட்டுள்ளன.

பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத்
தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று  17-010

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
துன்னிய என் நோய் துடைப்பாய்! என்றலும்
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்  17-020

மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக்
காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத்
தென் திசைப் பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்
பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர்
இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி  17-030

தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின்
பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன்
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன்
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன்
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்  17-040

பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்!
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித் துயர் உழந்து
முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு
உண்ணும் நாள் உன் உறு பசி களைக! என
அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
இந் நாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை!
வாடு பசி உழந்து மா முனி போய பின்
பாடு இமிழ் அருவிப் பய மலை ஒழிந்து என்  17-050

அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
ஆர் அணங்கு ஆகிய அருந் தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை!
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன்!
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு
தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக
நீங்கல் ஆற்றான் நெடுந் துயர் எய்தி  17-060

ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன்
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழி பெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால்
பல நாள் ஆயினும் நிலனொடு போகி
அப் பதிப் புகுக என்று அவன் அருள்செய்ய
இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
இந்திர கோடணை விழவு அணி வரு நாள்
வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே  17-070

என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை! என் வான் பதிப் படர்கேன்
துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர்
சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்  17-080

இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக என்று
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை
ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி
வல முறை மும் முறை வந்தனை செய்து அவ்
உலக அறவியின் ஒரு தனி ஏறி
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
தம் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி  17-090

வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்துக்
கருவி மா மழை தோன்றியதென்ன
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது
யாவரும் வருக ஏற்போர் தாம்! என
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே
யாணர்ப் பேர் ஊர் அம்பல மருங்கு என்  17-098

உரை

மணிமேகலை அமுதசுரபி சுரக்கின்ற ஆருயிர் மருந்தாகிய உண்டி கொடுத்து ஆற்றாமாக்கள் அரும் பசி களைதலும் அவ்வற்புதங் கண்ட காயசண்டிகை மணிமேகலையை வணங்குதலும்

1-8: பத்தினி..............வணங்கி

(இதன் பொருள்) பத்தினிப் பெண்டிர் பாத்து ஊண் ஏற்ற பிச்சைப் பாத்திரம் பெருஞ்சோற்று அமலை- பத்தினிப் பெண்டிருலளும் சிறந்த பத்தினிப் பெண்டிராகிய ஆதிரை நல்லாள் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகெனத் தன்னை வலஞ் செய்து தொழுது பலரொடும் பகுத்துண்டற்கியன்ற ஆருயிர் மருந்தை அமுதசுரபியிலிட அவ்வுணவு அமுதசுரபியினின்றும் இடையறாது சுரக்கின்ற பெரிய சோற்றுத் திரளையை; அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் திறந்து வழிப்படும் செய்கை போல-அறநெறியிலே நின்று தொகுக்கப் பெற்ற ஒள்ளிய பொருளானது அவ்வறவோன்பால் நாடொறும் பெருக்க மெய்திப் பின்னரும் அவனாலே அவ்வற நெறியிலேயே செலவு செய்யப்பட்டு அவனுக்கும் பிறர்க்கும் ஆக்கமாகும் செயல்போல; வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத் தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி- மணிமேகலை தனது அறவொழுக்கங் காரணமாக எய்திய அவ்வமுத சுரபியினின்றுஞ் சுரக்கின்ற உண்டியை ஏற்போருடைய கைகள் வருந்துமாறு மன்னுயிர் பலவற்றிற்கும் வழங்கியும் தான் அவ்வுணவு சுரத்தல் ஒழியாத அதன் தெய்வத் தன்மையை அவளுடனிருந்தே நோக்கி; ஆனைத் தீ நோக்கி அகவயிற்று அடக்கிய காய சண்டிகை என்னும் காரிகை வணங்கி -ஆனைத் தீ யென்னும் கொடிய நோயைத் தனது வயிற்றினூடே அடக்கிப் பெரிதும் வருந்தி யிருக்கின்ற காய கண்டிகை என்னும் அவ் விச்சாதர மகள் மணிமேகலையின் திருவடிகளிலே வீழ்ந்து அன்போடு வணங்கி யென்க.

(விளக்கம்) பத்தினிப் பெண்டிர் என்றது ஆதிரை நல்லாளை. அவளிட்ட உணவு தானும் பலரோடிருந்து பகுத்துண்ணற் பொருட்டே அப் பத்தினியால் ஆக்கப்பெற்ற சிறப்புடையது என்பார் அதனைப் பாத்தூண் என்று விதந்தார்.

அஃதாவது பலருக்கும் பகுத்தூட்டப்படும் உணவு என்றவாறு.

ஈண்டு

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்

எனவருந் திருக்குறளும் (44) நினைக்கப்படும்.

பத்தினிப் பெண்டிர் கையில் ஏற்கப்பட்டதாதலின் அதன்கட் சுரக்கும் பெருஞ்சோற்றமலை மன்னுயிர்க் களித்தும் தொலைவில்லாத தாயிற்று எனத் தொலைவில்லாமைக்குப் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் என்றது குறிப்பேதுவாக நின்றது. என்னை? அமுதசுரபி அறவோர்பால் முதன் முதலாக ஏற்றால் நன்கு சுரக்கும் ஏனையோர்பால் இரப்பின் நன்கு சுரவாது, இதனை நன்கு நினைவிற் கொள்க எனபாள் தீவதிலகை மறந்தேன் அதன் திறம் அறங்கரியாக அருள்சுரந்தூட்டும் சிறந்தோர்க் கல்லது செவ்வனம் சுரவாது என்றறிவுறுத்தினமையும் அவ்வறிவுரையை மறவாதிருந்த மணிமேகலை தானும் முதன் முதலாக அகமலி உவகையிற் பத்தினிப்பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சையேற்றல் பெருந்தக வுடைத்து என்று காயசண்டிகைக்குக் கூறி ஆதிரைபால் ஏற்றமையும் ஈண்டு நினைக.

பெருஞ்சோற்றமலை- மிக்க சோற்றுத்திரளை

அறவோனால் அறத்தின் ஈட்டிய பொருள் அவ்வறவோன்பாற் பெருக்கம் எய்தி மீண்டும் அவன்பால் அறத்தின் வழிப்படும் பொழுது அழிவின்றி மேலும் மேலும் வளமாப்போலே அமுதசுரபியின்கண் அமலை தொலைவில்லாது வளர்வதாயிற்று என்று உவமை கூறியபடியாம். அறவோன்- மணிமேகலைக்குவமை அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் என்றது  அவள் முன்னை நல்வினையாற் பெற்ற அமுதசுரபியும் அதன்கண் ஆதிரைபால் ஏற்ற ஆருயிர் மருந்துமாகிய இரண்டற்கும் உவமையாகும். மன்னுயிர்க் களித்தும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது.

ஆனைத்தீநோய்- எத்துணை யுண்டாலும் இடையறாது பசித்துத் துன்புறுத்துவதொரு கொடிய நோய். அகவயிறு- வயிற்றகம். அடக்குதலருமை தோன்ற அடக்கிய என்றார்.

காயசண்டிகையின் அகவயிற்றடக்கிய ஆனைத்தீ நோயின் கொடுமையை அவள் கூறுதல்

9-16: நெடியோன்......................என்றலும்

(இதன் பொருள்)  அன்னை நீ கேள்-ஆருயிர்க் கெல்லாம் அன்னையே! நீ என் துயர் கேட்டருள்க!; நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று நீள் நிலமளந்த நெடுமால் தானும் மயங்கி இந் நிலவுலகத்திலே இராமனாகப் பிறந்துழலுங் காலத்தே வலிமையுடைய அடைத்தற் கரிய கடலிலே அணை கோலி யடைத்த பொழுது; குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்; குரங்குகள் பெயர்த்துக் கொணர்ந்து வீசிய நெடிய மலைகள் எல்லாம்; அணங்கு உடை அளக்கர் வயிறுபுக்கு ஆங்கு- தெய்வத் தன்மையையுடைய அக் கடலின் வயிற்றினுட் புகுந்து மறைந்தொழிந்தாற் போன்று; என்றன் பழவினைப் பயத்தால் இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்பட்டேன்-அளியேன் என்னுடைய பழவினைப் பயனாலே இட்ட உணவு எவ்வளவேனும் ஒரு சிறிதும் தணிக்கவியலாத பெரு நெருப்பை ஒத்த பெரிய பசி நோய்வாய்ப் பட்டேன்காண்! ஆர் உயிர் மருத்துவி-ஆற்றுதலரிய பசிப் பிணியகற்றும் உயிர்களின் மருத்துவச்சியே!; துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும்- நின் திருவடிகளில் தஞ்சமாக வந்தெய்திய என்னுடைய அக் கொடிய ஆனைத்தீ நோயைத் துவர நீக்கி என்னை உய்யக் கொள்வாயாக என்று வேண்டா நிற்றலும் என்க.

(விளக்கம்) நெடியோன்- திருமால். திருமாலும் உயிரினத்தவன் என்பதே பவுத்தர் கொள்கையாம். கடவுள் என்பது அவர்க்குடம் பாடன்று. ஆகவே அவன் பிறப்பெய்தியதற்குங் காரணம் மயக்கமே என்பதவர் கருத்தாகலின், நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி என்றாள். அணங்கு- தெய்வம். இனி வருத்துதலுடைய எனினுமாம். நெடுமலை-தான் ஏற்றுண்ணும் உணவிற்குவமை.

ஆருயிரை எல்லாம் ஊட்டி வளர்த்தலின் காயசண்டிகை மணிமேகலையை அன்னை! என்று விளிக்கின்றாள். ஆருயிரின் பசிப்பிணி தீர்த்தலின் மருத்துவி என்றாள். துன்னிய என்றது அடைக்கலம் புகுந்த என்றவாறு. நோய்-ஆனைத்தீநோய். காயசண்டிகை மணிமேகலை வழங்கிய உணவுண்டு ஆனைத் தீ நோய் அகலப்பெற்றுத் தன் வரலாறு கூறுதல்

17-26: எடுத்த.....................இருந்தேன்

(இதன் பொருள்) எடுத்த பாத்திரத்து அமுதம் பிடித்து ஏந்திய அவள் கையில் பேணினள் பெய்தலும்-மணிமேகலை ஆருயிர் ஓம்புதற்குத் தன் செங்கையில் தாங்கிய அமுதசுரபியிற் சுரந்த சோற்றில் ஒரு பிடி சோற்றைப் பிடித்து ஏற்றற்கு ஏந்திய காயசண்டிகையின் கையிலே அவள் வேண்டுகோளை நிறைவேற்றி அவளைப் பேணுங் கருத்துடையளாய் இடுதலும்; வயிறு காய பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்-ஆனைத் தீ நோய் காரணமாக இடையறாது தன் வயிறு காய்தற்குக் காரணமான பெரிய பசி தீர்ந்தொழிந்தமையாலே அக் காய சண்டிகை தன் தீராத மனத்துன்பமும் தீரப்பெற்று மகிழ்ந்து மணிமேகலையைக் கை குவித்துத் தொழுது கூறுவாள்; மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடிக் காசு இல் காஞ்சினபுரக் கடிநகர் உள்ளேன்-அன்னையே! அளியேன் வரலாறு கூறுவல் கேட்டருளுக! யான் வட திசைக் கண்ணதாகிய குற்றமற்ற வெள்ளிய ஒளியையுடைய வெள்ளி மலையின் கண்ணுள்ள விததியாதரர் உலகிலே குற்றமற்ற காஞ்சனபுரம் என்னும் காவலமைந்த நகரத்திலுள்ள விச்சாதர மகளாவேன் காண்!; என் வெவ்வினை உருப்ப-என் வெவ்விய பழவினை உருத்து வந்தமையாலே; விஞ்சையன் தன்னொடு தென்திசைப் பொதியில் காணவந்தேன்-விச்சாதரனாகிய என் கணவனோடு கூடித் தென் திசையிலுள்ள பொதிய மலையைக் கண்டு தொழுதற் பொருட்டு வந்த யான்; கடுவால் அருவிக் கடும்புனல் கொழித்த விடுமணல் கான்யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்- விரைந்து வருதலையுடைய அருவியாகிய கடிய நீர் கொழித்துப் போகட்ட ஒன்றோடொன் றொட்டாமல் கிடக்கும் மணற் பரப்பினையுடைய ஒரு காட்டியாற்றின்கட் சென்று ஆங்கு என் கணவனோடு ஒரு சேர வீற்றிருந்தேனாக; என்றாள் என்க.

(விளக்கம்) எடுத்த என்றது ஆருயிரோம்ப எடுத்த என்பதுபட நின்றது. பாத்திரம்-அமுதசுரபி. அமுதம் பிடித்து ஏந்திய அவள் கையிற் பெய்தலும் என மாறுக. கையிற் பெய்தலும் பேணினள் பெய்தலும் எனத் தனித்தனி கூட்டுக. பேணினள்-பேணி. அஃதாவது அவள் வேண்டுகோளைப் போற்றிக் கேட்டு அவ்வாறு அவள் நோய் துடைத்தல் வேண்டும் என்று குறிக்கொண்டு என்றவாறு. அமுதம் சோறு. சோற்றைப் பிடித்துண்டலும் பிடித்து ஈதலும் இயல்பு. ஒரு பிடி சோறு என்னும் வழக்கும் நோக்குக.

பண்டு எவ்வளவு உணவு இட்டாலும். ஆற்றப் படாத ஆனைத் தீப்பசி மணிமேகலை கையாற் பிடித்திட்ட ஒரு பிடி சோற்றாலே நீங்கிற்று என்றுணர்த்தியவாறாம். துயரம் என்றது மனத்துன்பத்தை. தொழுதனள்- தொழுது. சேடி- விச்சாதரருலகு. அது வெள்ளி மலையின்கண்ணதாகலின், வாலொளிச் சேடி என்றாள். வெவ்வினை- தீவினையாகிய பழவினை. உருப்ப- பக்குவ மெய்திப் பயன் நுகர்விக்கும் செவ்வித்தாக. காசு-குற்றம். விஞ்சையன் என்றது கணவன் என்பதுபடநின்றது. காணிய; காண-கண்டு தொழ என்பது கருத்து. கொழித்தல்- தெள்ளுதல். மணல் ஒன்றனோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியே கிடத்தல் பற்றி விடு மணல் என்றாள்.

இதுவுமது

27-34: புரிநூன்......................சிதைத்தேன்

(இதன் பொருள்) புரிநூல் மார்பின் திரிபுரி வார்சடை மரவுரிஉடையன் விருச்சிகன் என்போன்- முறுக்குண்ட பூணுநூலுடைய மார்பையும் திரித்து முறுக்கிவிட்ட நீண்ட சடையையும் மரவுரியாகிய ஆடையையும் உடையவனாகிய விருச்சிகன் என்னும் முனிவன் ஒருவன்; பெண்ணைப் பெருங்குலை கருங்கனி அனையது ஓர் இருங்கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி-பனையினது பெரிய குலையின்கட் பழுத்த கரிய பனம் பழம் போன்ற ஒரு முறையில் ஒரோ ஒரு பெரிய பழத்தை மட்டும் பழுக்குமியல்புடைய நாவல்  மரத்தினது பழம் ஒன்றனைக் கையிலேந்தி வந்து; தேக்கு இலை வைத்து சேண நாறு பூ கமழ் பொய்கைப் பரப்பின் ஆடச் சென்றோன்- தேக்கினது இலையிலே அதனை ஓரிடத்தே வைத்து விட்டு நெடுந்தொலை நீர்ப் பூக்கள் மணக்கின்ற பொய் கையின்கண் நீராடச் சென்றானாக; தீவினை உருத்தலின்- தீய என் பழவினை தன் பயனை யூட்டுஞ் செவ்வி பெற்று வந்துற்றமையாலே அளியேன்; செருக்கொடு சென்றேன்- வழியைப் பார்த்துப் போகாமல் களிப்பொடு அங்கு மிங்கும் பார்த்துச் சென்றேனாதலின்; அந்தக் கருங்கனி காலால் சிதைத்தேன்-அந்தக் கரிய நாவற் கனியை என் காலாலே மிதித்துச் சிதைத் தொழித்தேன்; என்றாள் என்க.

(விளக்கம்) புரிநூல்-பூணுநூல்-வார்சடை- நெடியசடை.உடையன்- ஆடையை யணிந்தவன். பெண்ணை- பனை. நாவற்கனிக்குப் பனங்கனி உவமை. இருங்கனி- பெரிய கனி. ஓர் இருங்கனி நாவல் பன்னீராட்டைக்கொரு முறை ஒரு கனியே தருகின்ற நாவல் மரம் என்க. சேண்-தொலைவிடம். சென்றோன்- சென்றான்; ஆ ஓவாயிற்று. செருக்கு- களிப்பு.

இதுவுமது

35-46: உண்டல்...........களைகென

(இதன் பொருள்) உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் பொய்கையில் நீராடியபின் தான் வைத்துச் சென்ற நாவற் பழத்தை உண்ணும் வேட்கையோடு மீண்டும் அங்கு வந்துற்ற அவ் விருச்சிக முனிவன்; கருங்கனிச் சிதைவுடன் என்னைக் கண்டனன்-கரிய அந் நாவற் பழம் சிதைந்து கிடத்தலையும் அதனைச் சிதைத்த அறிகுறியோடு நின்ற என்னையும் ஒருங்கே கண்டனன்; சீர் திகழ் நாவலில் திப்பியமானது ஈர் ஆறு ஆண்டின் ஒரு கனி தருவது- விச்சாதரியே! நின்னாற் சிதைக்கப்பட்ட இந் நாவற் கனியின் வரலாறு கேள்! சிறப்புற்று விளங்குகின்ற நாவல் மரங்களில் வைத்து இந்தக் கனிதந்த நாவல் மரமானது தெய்வத்தன்மை யுடையது, பன்னிரண்டாண்டிற்கு ஒரு முறை ஒரோவொரு கனியை மட்டுமே கனிந்து தருவது காண்!; அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்-அந்தக் கனியைத் தின்பவர் யாவரேனும் மீண்டும் அந் நாவல் மரம் கனி தரும் பன்னிரண்டாண்டும் மக்கள் யாக்கையின்கண் ஒரு நாளிற் பன்முறை வந்து வருத்தும் பசிப்பிணி நீங்கப் பெறுவர்; பன்னிராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன்- பன்னிரண்டாண்டினுள் ஒரு நாள் உண்பதல்லது எஞ்சிய நாள்களில் உண்ணாத நோன்பையுடைய யான்; உண் கனி சிதைத்தாய்- உண்ணுதற்கு வைத்திருந்த இத் தெய்வக் கனியைக் காலாலே சிதைத்தொழிந்த நீ; அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து தந்தித் தீயால் தனித்துயர் உழந்து- வான் வழியே இயங்குதற்குரிய மறை மொழியை இழந்து ஆனைத் தீ யென்னும் கொடிய நோயாற் பற்றப்பட்டு ஒப்பற்ற பெருந்துன்பத்தை நுகர்ந்து; முந்நால் ஆண்டின் முதிர்கனி நான் ஈங்கு உண்ணும்நாள் உன் பசி களைக என மீண்டும் இற்றை நாளினின்றும் பன்னிரண்டாம் ஆண்டின்கண் இந் நாவன் மரத்திலே காய்ந்து முதிர்ந்த இத்தகைய கனியைப் பெற்று யான் இவ்விடத்திலே உண்ணும்பொழுது நீ தானும் உன் ஆனைத் தீ நோயா லெய்தும் பசியைத் தீர்த்துக் கொள்ளக் கடவை என்று சொல்லி; அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் இந் நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை-அந்த நாளிலே அக் காட்டியாற்றின்கண் அவ் விருச்சிக முனிவன் இட்ட சாபம் நீங்கும் நாள் இந்த நாளே போலும்; நோன்பினாலே உயர்ந்த இளைய மலர்க்கொடி போலும் நீ ஒரு பிடி சோற்றினாலே அம் மாபெரும் பசியைத் தணித் தருளினை காண்!; என்றாள் என்க.

(விளக்கம்) திப்பியம்- தெய்வத் தன்மையுடையது; நோன்பு விரதம். உண்கனி: வினைத்தொகை. மந்திரம்- மறை மொழி பிறர் அறியா வண்ணம் தம்முள்ளேயே கணிக்கப்படுவது ஆதலின் அப் பெயர் பெற்றது. மந்திரம் இழந்து என்றது-அதனாலாம் பயனை இழந்து என்றவாறு.

தந்தி-யானை, ஆனைத்தீ நோயைத் தந்தித்தீ என்றார் முந்நாலாண்டு- பன்னிரண்டாண்டு அரும்பி மலர்ந்து பிஞ்சாகிக் காயாகிக் கனி யொன்று கனிதற்குப் பன்னீராண்டு ஆகும் என்பது தோன்ற முந் நாலாண்டின் முதிர்கனி என்றார். அந்நாள் இந் நாள் போலும் என்றது சாபமிட்ட நாளினின்றும் பன்னீராண்டும் கழிந்தபின் நிகழும் நாள் இது போலும் என்றவாறு.

இதுவுமது

49-61: வாடுபசி.............உரைப்போன்

(இதன் பொருள்) வாடுபசி உழந்து மாமுனி போயபின்-உடம்பு வாதெற்குக் காரணமான பெரிய பசியால் வருந்திச் சிறந்த முனிவனாகிய விருச்சிகன் அவ்விடத்தினின்றுஞ் சென்ற பின்னர்; என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து அகன்ற விலகு ஒளி விஞ்சையன்- எளியேன் விழிப்பின்மையாற் செய்த மனஞ் சுழன்று வருந்துதற்குக் காரணமான செயல் பற்றி அம் முனிவனால் யாது விளையுமோ என்று அச்ச மெய்தி ஆரவாரஞ் செய்து வீழுகின்ற அருவியையும் பயனையும் உடைய அம் மலையை விட்டு ஓடிப்போன மழுங்கிய ஒளியையுடைய என் கணவனாகிய விச்சாதரன்றானும்; விழுமமோடு எய்தி-துன்பத்தோடு மீண்டும் என்பால் வந்து யான் சாபத்தா லெய்திய ஆனைத் தீ நோயை அறிந்து பெரிதும் இரங்கி; ஆர் அணங்கு ஆகிய அருந்தவன் தன்னால் காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை- பெறற் கரிய தெய்வத் தன்மையையுடைய அரிய தவத்தையுடைய முனிவனாலே காரணமில்லாமலே கடிய நோய்க்கு ஆளாகித் துன்புறுகின்றனை இதற்குக் கழுவாய் தேடுதற்கு யாம் நமது விச்சாதரருலகிற்கு இன்னே செல்வோம்; வானூடு எழுக என- வானத்தே என்னோடு எழுந்து வருவாயாக என்று பணித்தலும்; மந்திரம் மறந்தேன் ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி வயிறு காய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு-அது கேட்ட யான், ஐய வானூடு இயங்குதற்கு வேண்டிய மந்திரத்தையும் மறந்தொழிந்தேனே! எங்ஙனம் வானத்தே இயங்க மாட்டுவேன், மேலும், உடம்பினின்றும் உயிர் நீங்குமளவற்கு வெப்பத்தோடு தோன்றி வயிற்றினைச் சுட்டெரிக்கின்ற பெரிய பசித் தீத்தானும் வருத்துகின்றதே என் செய்கேன்? என்று சொல்லி வருந்துகின்ற எனக்கு; ஆங்கு அவன் தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன கொணரவும்-அது கேட்ட வப்பொழுதே அன்புமிக்க என் கணவன்றானும் காட்டினுட் சென்று இனிய பழங்களும் கிழங்குகளும் வளவிய காய்களும் ஆகிய நல்ல உணவுகளைக் கொண்டு வந்து கொடுப்பவும் அவற்றை யெல்லாம் உண்ட பின்னரும்; ஆற்றேன் ஆக-என் பசித்துன்பம் சிறிதும் தணிந்திலாமையாலே அது பெறாது வருந்துவேனாக; நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கு-அந் நிலையில் என்னை நீங்கிச் செல்லவியலாதவனாய் என் பொருட்டுப் பொறுத்தற்கரிய துன்பம் எய்திய பொழுது; அவன் என்ககு அருளொடு உரைப்போன்-என் கணவன் எனக்குத் தன் அருளுடைமை காரணமாகக் கூறுபவன்; என்க.

(விளக்கம்) வாடுபசி: வினைத்தொகை. அலவலை-அலமரல்; அஃதாவது மனச்சுழற்சி. முனிவனால் யாது நேருமோ என்று அஞ்சிவிச்சாதரன் அம் மலைக்கு அப்பால் ஓடிப்போயினன் என்றவாறு பாடு ஆரவாரம். இமிழ் என்றது செய்கின்ற என்பதுபட நின்றது. பயம் பயன். அவை சந்தனம் முதலியவை. அணங்கு-தெய்வத் தன்மை. விலகு ஒளி எனக் கண்ணழித்து அச்சத்தால் மழுங்கிய ஒளி என்க. விழுமம்-துன்பம். விஞ்சையன் என்றது என் கணவன் என்பதுபட நின்றது.

உருப்பு- வெப்பம். நல்லன: பலவறிசொல்.

இதுவுமது

62-67: சம்பு............செய்ய

(இதன் பொருள்) சம்புத் தீவினுள் தமிழகம் மருங்கில்-அன்புடையோய்! இந்த ஆனைத் தீ நோயை ஒல்லுந்துணை ஆற்றிக்கோடற்கு ஓர் உபாயம் கூறவல் கேள்! இந்த நாவலந் தீவின்கண் யாம் இப்பொழுதிருக்கின்ற இத் தமிழ் நாட்டின் கண்; கம்பம் இல்லா- பகைவருக்கஞ்சி நடுங்குதல் ஒரு பொழுதும் இல்லாதவரும்; கழிபெருஞ்செல்வர் ஆற்றாமாக்கட்கு ஆற்றும் துணையாகி நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் மாபெருஞ் செல்வமுடையோரும் தமக்குற்ற துன்பத்தைத் தாமே துடைத்துக் கொள்ளமாட்டாத எளிய மாக்கட்கெல்லாம் அவ்வத்துன்பத்தைத் துடைத்துக் கோடற்கு உற்ற துணைவர்களாகி மெய்ந்நெறி வாழ்க்கை வாழ்பவரும் ஆகி அதற்கியன்ற நோன்பினை பண்டும் பண்டும் பல பிறப்பிலே செய்து அடிப்பட்டு வருகன்ற மேன்மக்கள் வதிகின்ற படை வலிமையுடைய நகரம் ஒன்றுளது காண்! பல நாள் ஆயினும் நிலனொடு போகி அப் பதிபுகுக என்று அவன் அருள் செய்ய வானூடு இயங்கும் மந்திரம் மறந்தொழிந்தமையாலே பல நாள் கழியுமாயினும் நிலத்தின் வழியாகவே நடந்து அப் பூம்புகார் என்னும் அம் மாநகரத்திலே சென்று புகுவாயாக! என்று அறிவித்தருளிச் சென்றனன் என்றாள் என்க.

(விளக்கம்) சம்புத் தீவு-நாவலம் தீவு. தமிழகம் என்றது வடவேங்கடம் தென்குமரி ஆயிடைக் கிடந்த மூன்று தமிழ் நாட்டையும் கம்பம்- நடுக்கம்; இது பகைவர் வரவினால் நிகழ்வது. ஒரு பொழுதும் பகைவர் வரவு நிகழாமையின் அங்கு வாழும் செல்வர், நடுக்கமில்லாதார் என்றான் என்க. கழிபெருஞ் செல்வர் என்றது மாக வானிகர் வண்கை மாநாய்கனும், வருநிதி பிறர்க் கார்த்தும் மாசாத்துவானும் போன்ற கொழுங்குடிச் செல்வர்களை. அந் நகரத்தே பிறந்து அங்ஙனம் வாழ்தற்கு நோன்பு பல செய்திருத்தல் வேண்டும் என்பான், நோற்றோர் என்றான். ஆசிரியர் இளங்கோவடிகளாரும். அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய காயமலர்க் கண்ணியும் காதற் கொழூநனும் என்றோதுதலறிக. (மனையறம்-9-11). பாட்டிடை வைத்த குறிப்பால்-அப் பதி என்றது பூம்புகார் என்னும் அம் மாநகரம் என்பது பெறப்படும்.

அவன்-என் கணவன். அருள் செய்து போயினனாக என்று வருவித்து முடித்திடுக.

இதுவுமது

68-72: இப்பதி............கழியும்

(இதன் பொருள்) இப்பதிப் புகுந்து யான் உறைகின்றேன் நங்காய்! என் கணவன் அறிவித்தபடியே நிலத்திலே நடந்து வந்து இப் பூம்புகார் நகரத்தே புகுந்து இரந்துண்டு இவ்விடத்திலே உறைகின்றேன் காண்!; அவன்-என்பா லன்புமிக்க என் கணவன் நீங்கலாற்றாது ஒருவாறு நீங்கி எம் வித்தியாதரருல கிற்குச் சென்றவன்றானும், யாண்டுதோறும் இம் மாநகரத்திலே; இந்திர கோடணை விழா அணிவருநாள்-இந்திரவிழா அழகுற வருகின்ற நாளிலே; இம் மாநகர் மருங்கே வந்து-இப் பூம்புகார் நகரத்திலே வந்து; என் உறுபசி கண்டனன் இரங்கி என் முன் தோன்றி-எனது மிக்க பசித்துன்பத்தையறிந்து என் பொருட்டுப் பெரிதும் இரங்கி; பின்- பின்னர்; வரும் யாண்டு எண்ணினன் கழியும்-எதிர்வரும் யாண்டின் இந்திர விழா நாளில் வருதற்குக் கருதிச் செல்லா நிற்பன் காண்!; இதுவே என் வரலாறு என்று கூறி என்க.

(விளக்கம்) இப்பதி என்றது பூம்புகார் நகரத்தை. இந்திர கோடணை யாகிய விழா என்க. கோடணை விழா-இரு பெயரொட்டு விழாவின் அழகு வரும் நாள் என்க. உறுபசி- மிக்கபசி. பின் வருகின்ற யாண்டின் வருதற்கெண்ணி என்க.

காயசண்டிகை நன்றி கூறி விடை கொள்பவள் மணிமேகலை அறஞ்செய்தற்கேற்ற இடம் உலகவறவியே எனல்

73-83; தணிவில்........பின்னர்

(இதன் பொருள்) மணிமேகலை- மணிமேகலை என்னும் மாதவக் கொழுந்தே!; தணிவில் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன் ஒரு பொழுதுந் தணிதலில்லாத என ஆனைத்தீயின் வெவ்விய அரும்பசியை ஒரு பிடி அன்னமாகிய ஆருயிர் மருந்தாலே துவரத் தீர்த்தருளினை,யாண் நினக்கு செய்யும் கைம்மாறும் உளதோ காண்! என் தலையாலே நின் திருவடியை வணங்கு நின்றேன் காண்!; என் வான்பதிப் படர்கேன்-இனி யான் என் சிறந்த நகரமாகிய விச்சாதர ருலகின்கண்ணதாகிய காஞ்சன புரத்திற்குச் செல்லுவேன் காண்! வானூடு இயங்கும் மந்திரமும் நினைவில் வந்துற்றது, யான் நினக்குக் கூறுவதும் ஒன்றுண்டு அஃதியாதெனின்; துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர் சக்கரவாளக் கோட்டம் உண்டு- பிறவித் துன்பத்தைத் துவரத் துடைக்கின்ற குற்றமற்ற பெரிய துறவோர் வாழுமிடமாகிய சக்கரவாளக் கோட்டம் ஒன்று இந் நகரத்தே உண்டு அதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றலது இவ்வூரவர் கூறார்; ஆங்கு அதில்-அச் சக்கரவாளக் கோட்டத்தின்கண்; பலர் புகத் திறந்த புகுவாய் வாயில் உலக அறவி ஒன்று உண்டு- பலரும் தடையின்றிப் புகுதற் பொருட்டு அகலிதாகப் பகுக்கப்பட்ட வாயிலையுடைய உலக அறவி என்னும் பெயரையுடைய அம்பலம் ஒன்றுளது காண்; அதனிடை ஊர் ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்-ஊர்தோறும் ஊர்தோறும் மிக்க பசித்துன்பம் உற்றவரும்; அரும்பிணி உற்றோர்- தம்மால் தீர்த்தற்கரிய பிணிப்பட்டவருள்; ஆரும் இன்மையின்-தாம் இல்லாமையாலே வந்து குழுமி; இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் -தமக்கு உணவு கொடுப்போர் உளரோ என்று ஆராய்ந்து அவ்விடத்திலேயே வதியும் ஆற்றாமாக்கள் சாலப் பலராவார் காண்!; வடுவு ஆழ் கூந்தல் அதன்பால் போகு என்று ஆங்கு அவள் போகிய பின்னர்-அறல் ஆழ்ந்து கிடக்கும் கூந்தலையுடைய ஆருயிர் மருத்துவியே நீ அவ்வுலகவறவியின்பாற் சென்று புகுவாயாக! என்று சொல்லி அவ்விடத்தினின்றும் காயசண்டிகை வானத்திலே எழுந்து போன பின்னர் என்க.

(விளக்கம்) ஆனைத்தீ நோயாலாகிய பசி என்பாள் தணிவில் வெம் பசி என்றாள். என் வான்பதிப்படர்கேன் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினால் மறந்த வானிலியங்கும் மந்திரமும் நினைவுறப் பெற்றேன் என்றாளுமாயிற்று. இனி, வான் என்பதிப்படர்கேன் என மாறி வான் வழியே என் பதிக்குப் போவேன் என்றாள் எனினுமாம். பவுத்தர் மெய்க் காட்சிகளுள் தலை சிறந்தது துக்கம் துடைத்தலே ஆதலின் அஃதொன்றனையே கூறி யொழிந்தாள்.

அந்நகர மாந்தர் சுடுகாட்டுக் கோட்டம் என்றலது கூறாராகலின் அதற்குச் சக்கரவாளக் கோட்டம் என்பதே தலையாய பெய ரென்பதை மணிமேகலைக்கு அறிவுறுப்பாள் போன்று சக்கரவாளக் கோட்டம் உண்டு; என்றாள். மணிமேகலை அச் சக்கரவாளக் கோட்டம் என்னும் அதன் பெயரும் வரலாறும் பண்டே அறிந்தவளாதலின் சக்கரவாளக் கோட்டத்தில் எனலே அமையும்;உண்டென்று அறிவுறுத்துதல் மிகையாம்பிற வெனின், அற்றன்று! அச் செய்தி காயசண்டிகை அறியாளாகலின் அங்ஙன மறிவுறத்தியதாகப் புலவர் ஓதினமை அவரது நுண்புலமைக்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக் காட்டும் ஆதல் நுண்ணிதின் உணர்க. இனி, காயசண்டிகைக்கும் அப் பெயர் தெரியாதாம் பிறவெனின், மாருதவேகனும் நீயுமே சக்கரவாளக் கோட்டம் என்கின்றீர் அதற்குக் காரணமென்ன எனப் பண்டு சுதமதி வினவினள் என்றமையால் தேவகணத்தா ரெல்லாம் அவ் வரலாறு அறிவர் என்பது போந்தமையால் விச்சாதரியாகிய காயசண்டிகைக்கும் மாருத வேகனுக்குப் போல அவ் வரலாறு தெரியும் என்பது போதரப் புலவர் பெருமான் அங்ஙனம் ஓதினர் என்க.

உலக அறவி என்றது பூம்புகார் நகரத்து ஊர் அம்பலத்திற்கே சிறப்புப் பெயர்; என்னை? முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவா வளத்தது (சிலப்: மனையற- 3-4) என்பது பற்றி அஃதப் பெயர் பெற்றது என்க.

வடுவுஆழ் கூந்தல்-அறல் ஆழ்ந்து கிடக்கும் கூந்தல். இனி வடுவகிர் எனினுமாம். அதன்பாற் போகு என்றது நின் அருளறம் முட்டின்றி நடத்தற் கேற்ற இடம் அதுவே என்னும் குறிப்புடையதாம்.

மணிமேகலை உலகவறவியற் புகுதல்

83-90: ஆயிழை..........ஏத்தி

(இதன் பொருள்) ஆயிழை ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி அதுகேட்ட மணிமேகலை மகிழ்ந்து இரண்டு பக்கங்களினும் மாடங்கள் உயர்ந்துள்ள அவ் வீதியிலே ஒருபக்கமாக நடந்துபோய்; (உலக அறவியை) வலமுறை மும்முறை வந்தனை செய்து-வலம் வந்து மனமும் மொழியும் மெய்யுமாகிய முக்கருவிகளானும் முறைப்படியே (அதனை) வணங்கிய பின்னர்; அவ் வுலக வறவியின் ஒரு தனியேறி-அவ் வுலக வறவியென்னும் சிறந்த அம்பலத்தின்கண் மிகவும் சிறப்புற ஏறி; பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-அதன் கண்ணமைந்துள்ளதும் அந் நகர் வாழ் மாந்தரும் பிறவிடங் களிலிருந்து வருவோரும் ஆகிய பலராலும் தொழப்படுகின்ற சிறப்புடைய இறைவியாகிய சம்பாபதியின் திருக்கோயிலையும் அங்ஙனமே மும்முறையானும் வணங்கிப் பின்னர்; நெடுநிலைக் கந்துடை காரணங் காட்டிய தம் துணைப்பாவையைத் தான் தொழுது ஏத்தி-நெடிதாக நிற்கும் நிலையினையுடைய தூணின் கணிருந்து ஏது நிகழ்ச்சிகளை எடுத்துப் பண்டு சுதமதிக்குக் கூறியவாற்றல் தமக்கு உற்றுழியுதவுந் துணையாகிய கந்திற் பாவையாகிய தெய்வத்தையும் கை குவித்துத் தொழுது வழிபாடு செய்து என்க.

(விளக்கம்) மாடமோங்கிய வீதி என்க ஒரு புடை ஒதுங்கிப் போயது வருவோர் போவோர்க்கு இடையூறில்லாமைப் பொருட்டென்க. மும்முறை-மூன்று முறை எனினுமாம். ஒரு தனியேறி-சிறப்புற வேறி. பலர் என்றது, யாத்திரீகரை. தேவரும் முனிவருமாகிய பலரும் எனினுமாம். முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழைமையுடையாளாதல் பற்றிச் சம்பாபதி என்னுங் கொற்றவையை முதியோள் என்றார். கோட்டம்-கோயில்.

பாவை- கந்திற்பாவை; சம்பாபதி கோயிலின்கண் கிழக்கேயுள்ள தொரு நெடுநிலைத் தூணில் மயனால் இயற்றப்பட்டதொரு பாவை. காரணம்-ஏது நிகழ்ச்சி. சுதமதிக்கு இப் பாவை மணிமேகலை நிலை கூறி மாதவியையும் சுதமதியையும் ஆற்றுவித்தமை பற்றித் தந்துணைப்பாவை என்றார். துயிலெழுப்பிய காதை 96-109 நோக்குக. இக் கருத்தறியாதார் இதற்குக் கூறும் உரை போலி யென்க. தந்துணை என்றது மாதவி சுதமதி தானாகிய மூவரையும் உளப்படுத்தோதிய படியாம்.

மணிமேகலை ஆற்றாமாக்கள் அரும்பசி களைதல்

91-98: வெயில்..............மருங்கென்

(இதன் பொருள்) வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து கருவி மாமழை தோன்றியது என்ன-முதுவேனிற் பருவத்து வெயிலாலே சுடப்பட்டு வெந்த மூங்கில்கள் கரிந்த காட்டிடத்தே மின்னலும் இடியுமாகிய தொகுதியையுடைய முகில்கள் தாமே வானத்தே தோன்றிப் பெரிய மழையைப் பெய்தாற் போல; பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு- பசியாலே தின்னப்பட்டுலந்த உடம்போடே வருந்தி ஆங்கு இடுவோர்த் தேர்ந்து வந்து குழுமிய ஆற்றா மாக்களிடையே; ஆயிழை அமுதசுரபியொடு தோன்றி- மணிமேகலை அமுதசுரபி என்னும் அவ்வரும்பெறற் பாத்திரத்தோடே எழுந்தருளி; அவர்களைப் பொது நோக்கான் நோக்கி; ஏற்போர் தாம் யாவரும் வருக- மக்களே நுங்களில் ஏற்றுண்போரெல்லாம் வாருங்கள்!; இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி-இதோ யான் ஏந்தியிருக்கின்ற இத் திருவோடு பண்டு ஆபுத்திரன் என்னும் அறவோன் சிந்தாதேவியென்னும் செழுங்கலை நியமத்துத் தெய்வத்தின்பாற் பெற்று அனைத்துயிர்கட்கும் உண்டி கொடுத்து உயிர் கொடுத்த தெய்வத் திருவோடு ஆதலால் அனைவரும் வம்மின்; என என்று அழைத்தபொழுதே; யர்ணர்ப் பேரூர் அம்பலம் மருங்கு ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்று-புதுவருவாயையுடைய பெரிய நகரமாகிய பூம்புகாரில் உலக அறவி என்னும் அவ்வம்பலத்தே ஆற்றாமாக்கள் ஏற்றுண்ணுதலாலுண்டாகும் ஒலி பேராரவாரமாகி எழுந்தது என்க.

(விளக்கம்) வேய்- மூங்கில். மூங்கில் வெப்பத்தைப் பெரிதுல் பொறுத்துக் கொள்ளும் ஒரு புல். ஆகவே, வேயும் கரிகானம் எனம் வேண்டிய சிறப்பும்மை தொக்கது; செய்யுள் விகாரம்.

ஆபுத்திரன் செய்த அறத்தின் புகழ் உலகெலாம் பரவியிருக்கும் என்னும் கருத்தால் இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி என்றாள். எனவே எல்லீரும் இனிதுண்ணலாம் என்றறிவித்தாளும் ஆயிற்று. பிச்சை ஏலாதாரும் அக் குழுவில் இருத்தல் கூடுமாகலின், அவர் வெகுளாமைப் பொருட்டு ஏற்போர் தாம் யாவரும் வருக என்றாள். அரவத்தொலி என்றது பேராரவாரம் என்றவாறு.

இனி, இக் காதையை- காயசண்டிகை நோக்கி வணங்கி, துடைப்பாய் என்றலும் மணிமேகலை பெய்தலும் அவள் உரைக்கும்; உரைப்பவள் அதன்பாற் போக என்று கூறிப் போகிய பின்னர் ஆயிழை ஒதுங்கிச் செய்து ஏறித்தொழுது வணங்கி ஏத்தி, தோன்றி வருக என அம்பலம் மருங்கு ஒலி யெழுந்தன்று என இயைத்திடுக.

உலக அறவி புக்க காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar