Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை 26. வஞ்சிமாநகர் புக்க காதை
முதல் பக்கம் » மணிமேகலை
25. ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
04:01

(மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திடை யழைத்துப் புத்த பீடிகை காட்டிப் பிறப்புணர்த்தி வஞ்சிமாநகர் புக்க பாட்டு)

அஃதாவது-மணிமேகலை ஆபுத்திரன் மாறிப் பிறந்து புண்ணியராசன் என்னும் பெயரோடிருந்தவனைக் கண்டு உன் கையிலிருந்த பாத்திரமே என் கையை யடைந்தது. நீ முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயனாகவே இப் பிறப்பில் அரசனாயினை அச் செல்வத்தால் அறிவு மயங்கினை நீ இப் பிறப்பில் பசு வயிற்றில் பிறந்தாய்; அதனையும் அறிந்தில்லை நீ மணிபல்லவத்திற்குச் சென்று புத்த பீடிகையைத் தொழுதாலன்றி உனது பழம் பிறப்பை அறியாய் என்று சொல்லி விட்டு மீண்டும் வான் வழியே பறந்து மணிபல்லவத்தில் இறங்கிப் புத்த பீடிகையைத் தொழுத செய்தியையும் மணிமேகலையின் சொற்கேட்டுப் புண்ணியராசனாகிய ஆபுத்திரனும் அரசாட்சியை அமைச்சன்பால் ஒப்புவித்து விட்டு மரக்கலம் ஏறி மணிபல்லவத்தை யடைந்த செய்தியும் அங்கு நிகழ்ந்த பிற நிகழ்ச்சிகளும் கூறும் செய்யுள் என்றவாறு.

இனி, இதன்கண் சாவக நாட்டின்கண் தருமசாவகன் என்பான் மணிமேகலையின் சிறப்பெல்லாம் புண்ணியராசனுக்குக் கூறுதலும் மணிமேகலை அவ்வரசனுக்குச் செல்வமுடைமையால் நீ அறிவு மயங்கினை நீ மணிபல்லவம் வலங்கொண்டால் அல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாய் ஆதலின் அரசனே நீ ஆங்கு வருதி என்று சொல்லிவிட்டு வானிலே பறந்து மணிபல்லவத்தில் வந்திறங்கி அங்குத் தன் முற்பிறப்பினை உணர்ந்து கூறுவனவும் சாவக நாட்டில் புண்ணியராசன் தன் அமைச்சனுக்குக் கூறும் செய்திகளும் அமைச்சன் அவனுக்குக் கூறும் மாற்றங்களும் புண்ணியராசன் மரக்கலம் ஏறி மணிபல்லவத்திற்கு வருதலும் மணிமகேலை அவனை யழைத்துச் சென்று தீவகம் வலம் செய்து தரும் பீடிகையைக் காட்டுதலும் அவன் தரும் பீடிகையை வலங்கொண்டு வணங்கியவுடனே அப் பீடிகை கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தைக் கண்ணாடி மண்டிலம் காட்டுவதுபோல அவனுடைய முற்பிறப்பினைக் காட்டுதலும் முற்பிறப்புணர்ந்த அவ்வரசன் தனக்கு அமுத சுரபி ஈந்த சிந்தா தேவியை வாழ்த்திப் புகழ்தலும் பின்னர் முற்பிறப்பிலே இறந்து போன தன் எலும்புக் கூட்டைக் கண்டு மயங்குதலும் அவன் இறந்தமையால் அவன்பால் அன்புடைய ஒன்பது செடிகள் அங்கு வந்து உயிர் நீத்தவர்களுடைய எலும்புக் கூடுகளையும் கண்டு மயங்குதலும் பின்னர் மணிமேகலை அவ்வரசனக்கு அறங் கூறுதலும் நீ மரக்கலம் ஏறி உன்னாட்டிற்குச் செல்லுதி என்று போக்கிய பின்னர் வஞ்சிமாநகர் நோக்கி வானத்து எழுந்து பறந்து போதலும் பிறவும் பெரிதும் சுவை கெழுமச் சொல்லப் பட்டிருக்கின்றன.

அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார்? என்ன  25-010

காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக்
கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி
காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கி
ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி  25-020

நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது
மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்
அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று
இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ?
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது
பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரச! நீ என்று அப்
பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்று
மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து
வெய்யவன் குடபால் வீழாமுன்னர்  25-030

வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
பூ நாறு அடைகரை எங்கணும் போகி
மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப்
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்  25-040

விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்
உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம் எனச் சாற்றிக் காட்டி  25-050

நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர்
அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை
கரியவன் இட்ட காரணம் தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என்? என்று யான் தொழ
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது   25-060

வானவன் வணங்கான் மற்று அவ் வானவன்
பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக என்றே
அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும்
இருள் அறக் காட்டும் என்று எடுத்து உரைத்தது
அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்கு
தந்தை முனியா தாய் பசு ஆக   25-070

வந்த பிறவியும் மா முனி அருளால்
குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன்
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும்
தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க  25-080

அரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையின்
கேள்வி இன் இசை கேட்டு தேவியர்
ஊடல் செவ்வி பார்த்து நீடாது
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக்
கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ  25-090

தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து
தூ அறத் துறத்தல் நன்று எனச் சாற்றி
தௌந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
மணிமேகலை தான் காரணம் ஆக என்று
அணி மணி நீள் முடி அரசன் கூற
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
எம் கோ வாழி! என் சொல் கேண்மதி
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்  25-100

பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா
நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம்   25-110

தாய் ஒழி குழவி போலக் கூஉம்
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ!
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே!
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்
மதி மாறு ஒர்ந்தனை மன்னவ! என்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த  25-120

தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும்
ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன் என
கலம் செய் கம்மியர் வருக எனக் கூஉய்
இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்தி
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
தங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும்  25-130

தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து
பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும்
தரும பீடிகை இது எனக் காட்ட
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை உயர் மணிப் பீடிகை
கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை
மை அறு மண்டிலம் போலக் காட்ட
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்!
மாரி நடு நாள் வயிறு காய் பசியால்  25-140

ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
ஏடா! அழியல் எழுந்து இது கொள்க என
அமுதசுரபி அங்கையில் தந்து என்
பவம் அறுவித்த வானோர் பாவாய்!
உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும்
மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடி
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும்   25-150

நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தை! என்று ஏத்தி
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து
தென் மேற்காகச் சென்று திரை உலாம்
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப
ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு  25-160

பெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனை
அந் நாள் நின்னை அயர்த்துப் போயினர்
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
ஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால்
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய  25-170

என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப்
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை!
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய
மடவரல் நல்லாய்! நின் தன் மா நகர்
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப் பகை வானவன் வழியில் தோன்றிய  25-180

புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத்
தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து
கொற்றவன் மகன் இவன் கொள்க எனக் கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
பழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள்  25-190

இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டது
கெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நல் மணி இழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்  25-200

கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தடக் கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
ஒரு தனி போயினன் உலக மன்னவன்
அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்
முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன்  25-210

அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால்
மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை என்று
அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின்
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
துன்னிய தூ மணல் அகழத் தோன்றி
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித்
தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து  25-220

என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்?
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
மன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்தி
அந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும்
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு?
அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது  25-230

கண்டது இல் எனக் காவலன் உரைக்கும்
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன்
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான் என
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று
அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என்  25-239

உரை

சாவக நாட்டு மன்னன் தேவியோடு அம் முனிவனை வணங்க வந்தவன் மணிமேகலையைக் கண்டு இவள் யாரென்று வினவுதல்

1-10: அரசன்..........என்ன

(இதன் பொருள்) அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து தருமசாவகன் தன் அடி வணங்கி-நாகபுரத்து மன்னனாகிய புண்ணியராசன் தன் கோப்பெருந் தேவியோடு மணிமேகலை இறங்கியிருந்த அந்தப் பூம்பொழிலிலே சென்று அங்கு மணிமேகலைக்கு அறங்கூறிக் கொண்டிருந்த தருமசாவகன் என்னும் அத் துறவோனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி அம் முனிவன் மணிமேகலைக்கு அறிவுறுத்துபவன்; அறனும் மறனும் அகித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும்-நல்வினையின் வகையும் தீவினையின் வகையும் நிலையில்லாத பொருகளி னியல்பும் நிலையுதலுடைய பொருளியல்பும் துன்பம் முதலிய வாய்மையினியல்பும் இறந்துபோம் உயிர்கள் புகுமிடம்; சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் ஆரியன அமைதியும் அமைஉறக் கேட்டு-பன்னிரு நிதானங்களாலே உண்டாகும் பிறப்பும் அப் பிறப்பறுத்து வீடுபேறெய்தி உய்யும் வகையும் இவற்றை ஓதாதுணர்ந்து பதியுமாறு கேட்டு; பெண் இணை இல்லா பெருவனப்பு-உற்றதள் காமனோடு இயங்காகண் இணை இயக்கமும்-இவ்வுலகில் உள்ள பெண்களுள் வைத்து யாரும் தனக்குவமையில்லாத பேரழகு படைத்தவளும் ஆசையின் வழியியங்காத அவளுடைய கண்களின் அருள் நோக்கமும் நேரிலே கண்ட அப் புண்ணியராசனானவன்; அம் கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன-பெரிதும் வியந்து அழகிய தன் கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு அறங்கேட்கின்ற இங்கு நிற்கும் ஒப்பற்ற இந் நங்கை யாவளோ என்று வினவ என்க.

(விளக்கம்) அரசன்: புண்ணியராசன். உரிமை-மனைவி. தருமசாவகன்-அப் பொழிலின்கண் உறைவானாக முற்கூறப்பட்ட முனிவன் பெயர்; இப் பெயர் அறங்கோட்போன் என்னும் பொருட்டு. அறன்-உண்டி கொடுத்தல் முதலியன. மறன்-கள்ளுண்ணல் முதலியன-துக்கம்-துன்பம் முதலிய வாய்மைகள். புக்கில்-புகுமிடம். சார்பு-ஒன்றனை ஒன்று சார்ந்து பிறக்கும் நிதானங்கள். உய்தி-வீடு. ஆரியன்-மேலோன்; புத்தபெருமான் காமனோடியங்கா கண்ணிணை இயக்கம் என மாறுக, இங்கிருக்கின்ற இவள் என்க. யாரென்ன என்று வியந்து அரசன் வினவ என்க.

கஞ்சுகன் கூற்று

11-20: காவலன்..........என்றலும்

(இதன் பொருள்) காவலன் தொழுது-அவ்வாறு வினவிய அரசனைக் கைகூப்பித் தொழுது; கஞ்சுகன் உரைப்போன்-கஞ்சுகன் என்னும் கோத்தொழிலாளன் அவனுக்குக் கூறுபவன்; நாவலம் தீவில் இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை-தென்குமரி வடவிமயம் ஆயிடைப் பரந்து கிடக்கும் பெரிய நாவலந் தீவின்கண் மகளிரில் சிறந்த இவளுக்கு ஒப்பாவார் பிறர் யாரொருவரும் இல்லை; இவள் திறம் எல்லாம்-இவளுடைய வரலாறு முழுவதும் (யான் அறிகுவன்) கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டி கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி காவிரிப்படப்பை நல்நகர் புக்கேன்-சோழன் நெடுமுடிக் கிள்ளியினது கேண்மை பெறுவதை விரும்பித் தேன் துளிக்கும் மலர் மாலையணிந்த நீ என்னைத் தூது போக்கி பொழுது யான் மரக்கலத்தோடு அவனுக்கு வேண்டுவன வெல்லாம் ஏற்றிக் கொண்டு மரக்கலத்தோடே சென்று காவிரியையும் அதன் இருமருங்கினும் தோட்டங்களையும் உடைய அழகிய பூம்புகார் நகரத்திலே புகுந்தேன் அல்லெனோ; மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு ஓதினன் என்று-அந் நகரத்திலுள்ள பெரிய தவத்தையுடைய அறவணவடிகள் இவளுடைய பிறப்பு முதலியவற்றை நன்குணர்ந்து அந் நகரத்தில் எனக்குக் கூறினர் என்று: யான் அன்றே உரைத்தேன்-யான் மீண்டு வந்த அற்றை நாளிலே அரசே உனக்குக் கூறியிருக்கின்றேன்; ஆங்கு அவள் இவள்-அங்ஙனம் கூறப்பட்ட அம் மணிமேகலையே இங்கு நிற்கின்ற இவ்வணங்காவாள்; அவ் அகநகர் நீங்கி ஈங்கு வந்தனள் என்றலும்-அப் பூம்புகாரின் அகநகரத்தைக் கை விட்டு என்ன காரணமோ இங்கு வந்திருக்கின்றனள் என்று அக் கஞ்சுகன் அரசனுக்கு அறிவுறுத்திய பொழுது; என்க.

(விளக்கம்) காவலன்: புண்ணியராசன். கஞ்சுகன்-மெய்ப்பை(சட்டை) புக்க கோத்தொழிலாளன்; தூதன். பிரதானியுமாம். இந்  நங்கை-இங்கிருக்கின்ற இணையில்லா இவள். இவள் திறம்-இவள் வரலாறு கிள்ளி வளவன்-மாவண்கிள்ளி; உதயகுமரன் தந்தை. கெழுதகை-நட்புரிமை; நட்புரிமை கொள்ளும் பொருட்டு நீ என்னை விடுப்ப யான் கலத்தொடும் போகிப் புகார் நகரத்துப் புகுந்த பொழுது என்றவாறு. தாரோய் என்றது முன்னிலைப் பெயர் மாத்திரை. கலத்தொடும் என்றமையால் வரிசைப்பொருள் ஏற்றப்பெற்ற கலத்தொடும் என்பது குறிப்பாயிற்று. படப்பை-தோட்டக் கூறு. இவள் பிறப்பு என்றது இவளுடைய முற்பிறப்பும் இப் பிறப்பும் என்பதுபட நின்றது. உணர்ந்தாங்கு-உணர்ந்தபடி எனினுமாம். அன்றே உரைத்தேன் என்றது யான் மீண்டு வந்த அற்றை நாளிலேயே கூறியிருக்கின்றேன் என்றவாறு. அவ்வகநகர்-பூம்புகார் நகரம். ஈங்கு வந்தனள் என்றது இங்கே ஏதோ காரியமாக வந்திருக்கின்றனள் என்று அறிவுறுத்தபடியாம் இதனைத் தோற்றுவாயாக் கொண்டு மணிமேகலை மேலே தான் வந்த காரியம் கூறுகின்றாள் என்க.

மணிமேகலை புண்ணியராசனுக்குத் தான் வந்த காரியம் கூறி மணிபல்லவத்திற்குப் போதல்

20-31: இளங்கொடி...........இழிந்து

(இதன் பொருள்) இளங்கொடி நின் கைப்பாத்திரம் என் கை புகுந்தது-அது கேட்ட மணிமேகலை அக் கஞ்சுகன் கூற்றை ஏதுவாகக் கொண்டு புண்ணியராசன் முகம் நோக்கி அரசனே நீ முற்பிறப்பிலே ஆபுத்திரனாயிருந்து தெய்வத்தின்பாற் பெற்ற நின்னுடைய கையிலிருந்த தெய்வத்தன்மையுடைய அமுதசுரபி என்னும் அப் பாத்திரமே இது யான் செய்த தவத்தால் அஃது என் கையில் தானே வந்து சேர்ந்தது; மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய்-நீயோ முற்பிறப்பிலே செய்த நல்வினைப் பயனாக அரசனுக்கியன்ற பெரிய செல்வத்தைப் பெற்று அச் செல்வத்தினாலே மயக்கமும் எய்தினையாதலால் மெய்யறிவுடைய அல்லையாயினை.இச் சிறப்பிற்குக் காரணமான; அப் பிறப்பு அறிந்திலை ஆயினும்-ஆவால் வளர்க்கப் பெற்று ஆபுத்திரன் எனப்பெயர் பெற்று அருளறம் பேணிய உனது அப் பிறப்பினை நீ இப்பொழுது அறிந்தாயில்லை எனினும்; ஆவயிற்று இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ-அறவோனாகிய ஆபுத்திரனே நீ என்பதற்கு அறிகுறியாகவே நீ இப் பிறப்பில் ஓர் ஆ வயிற்றினின்றும் பிறந்தனை அதுவும் நீ அறிந்தாயில்லை, ஆகவே அவ் வறத்திற்கேற்ப நீ பிறப்பற முயலும் முயற்சி செய்தலை, அதனை மறந்து நீ அவம் செய்வதன்றிப் பிறிது என்ன தான் செய்கின்றனை? இதனை உனக்கு அறிவிக்கவே யான் இங்கு வந்தது காண்; மணிபல்லவம் வலம் கொண்டால் அல்லது-இனி நீ மணிபல்லவத் தீவிற்கு வந்து ஆங்குள்ள புத்த பீடிகையை வலம் வந்து வணங்கினால் அல்லது; பிணிப்பு  உறு பிறவியின் பெற்றியை அறியாய்-மேலும் மேலும் பற்றுண்டாதற்குக் காரணமான இப் பிறப்பின் தன்மையை அறிந்து நீ உய்தி பெறுவாயல்லை ஆதலால் இதன்கண் நின்று உய்தி பெறுதற்கு; அரச நீ ஆங்கு வருவாய் என்று அப் பூங்கமழ் தாரோன் முன்னர் புகன்று-அரசனே நீ அம் மணிபல்லவத்திற்கு வருவாயாக என்று அந்த அழகிய நறுமணங் கமழ்கின்ற மலர்மாலையணிந்த புண்ணியராசன் முன்னர்ச் சொல்லிவிட்டு; வெய்பவன் குடபால் வீழா முன்னர் மடக்கொடி மை அறு விசும்பின் எழுந்து வான் நின்று இழிந்து ஞாயிறு மேற்றிசையில் வீழ்ந்து மறைவதற்கு முன்னர் இளங்கொடியாகிய அம் மணிமேகலை அந் நகரத்தினின்றும் குற்றமற்ற வானத்திலே பறந்துபோய் வானத்தினின்றும் அம் மணிபல்லவத் தீவின்கண் இறங்கி; என்க.

(விளக்கம்) இளங்கொடி: மணிமேகலை. நின் கைப்பாத்திரம் என்றது நீ முற்பிறப்பிலே தெய்வத்தால் பெற்ற அமுதசுரபி என்னம் அரும்பெறல் பாத்திரம் என்பதுபட நின்றது. என்கைப் புகுந்தது என்றது யான் செய்த தவத்தால் என்கைப் புகுந்தது என்பதுபட நின்றது. மன் பெருஞ் செல்வம்-அரசனுக்கியன்ற பெரிய செல்வம் என்க. செல்வத்து மயங்கினை என்புழி மயங்குதற்குச் செல்வம் ஏதுவாயிற்று. ஈண்டு

அறனி ரம்பிய வருளுடை யருந்தவர்க் கேனும்
பெறல ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்
                       (மந்தரை-70)

எனவரும் கம்பராமாயணச் செய்யுளையும் நினைக. அறியாய் என்றது உய்யும் நெறி அறியாய் என்றவாறு. அப் பிறப்பு-ஆபுத்திரனாம் பிறப்பு அதற்கறிகுறியாக ஆவயிற்றுப் பிறந்த பிறப்பு என்க. செய்தனையோ என்ற வினா தவம் செய்யாது அவம் செய்கின்றாய் என்றவாறாம் மடக்கொடி: மணிமேகலை, வெய்யவன்-ஞாயிறு. மணிபல்லவத்தில் இறங்கி என்க. 

மணிமேகலை மணிபல்லவத்தில் மாதவன் பீடிகையை வணங்குதல்

31-40: மறிதிரை.............எல்லாம்

(இதன் பொருள்) மறிதிரை உலாவும் பூ நாறு அடை கரை எங்கணும் போகி மணிபல்லவம் வலம் கொண்டு-கரையில் மோதி மீளுகின்ற அலைகள் உலாவுகின்ற அம் மணிபல்லவத் தீவினது மலர் மணம் கமழும் நீரடை கரையில் எவ்விடத்தும் சென்று அத் தீவை வலம் வந்து மடக்கொடி பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்-அம் மணிமேகலை பற்றற்ற பெரிய தவத்தையுடைய புத்த பெருமானுக்கியன்ற பீடிகையைக் கண்டவுடன் தொழுது வலம் கொள்ள-கை குவித்துத் தொழுது வலம் வந்து வணங்குமளவிலிலே; அத் தூமணிப் பீடிகை பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த-அந்தத் தூய மணிகளால் இயன்ற புத்த பீடிகையைக் கண்ட குற்றமற்ற அக் காட்சியானது தன்னுடைய முற்பிறப்பின் நிகழ்ச்சிகளைக் கண்கூடாகக் காட்டுதலலே அம் மணிமேகலை; காயம் கரையென்னும் பேர் யாற்று அடைகரை மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து-அக் காட்சியினூடே காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடை கரையின்கண் பொய்மையில்லாத பெரிய தவத்தையுடைய பிரமதருமன் என்னும் முனிவர் பெருமானைக் கண்கூடாக் கண்டு அம் முனிவனுடைய அடிகளிலே வீழ்ந்து வணங்கிக் கூறுபவள் முனிவர் பெருமானே!; தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம்-ஆர்வத்துடன் வந்து நீ கூறுகின்ற அறங்களைக் கேட்டு மகிழ்ந்து நின்னுடைய திருவடியைத் தொழுது வாழ்த்தித் தங்கள் அரசனாகிய அத்திபதி என்பவனோடும் அவந்தி நகரத்திற்குச் செல்லும் மக்களுக்கெல்லாம்; என்க.

(விளக்கம்) பிணிப்பறு மாதவன்-புத்தர். பீடிகை-புத்த பீடிகை காட்சி பிறப் புணர்த்த என்க. காயங்கரை-ஒரு யாற்றின் பெயர் மாயம்-பொய். மாதவன்-பிரமதருமன் என்னும் முனிவன். பழம் பிறப்புணர்ந்த மணிமேகலையின் முற்பிறப்புத் தோன்றா நிற்ப. அக் காட்சியினூடு அப் பிறப்பில் தனக்கறங் கூறிய பிரமதருமன் என்னும் முனிவர் தோன்றுதலால் என்க. இனி வருவன மணிமேகலை கூற்று. அவை அம் முனிவனை முன்னிலைப்படுத்துக் கூறுவனவாம். பெருமகன் என்றது அத்திபதி என்னும் வேந்தனை. அவனொடும் பெயர்வோர் என்றது அத்திபதியின் குடிமக்களை. அவர்க்கெல்லாம் அம் முனிவன் கூறிய அறவுரைகளை ஈண்டு மணிமேகலை கொண்டு கூறுகின்றாள் என்க.

மணிமேகலை கூற்று

41-51: விலங்கு.............அறைந்தீர்

(இதன் பொருள்) விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் கலங்கு அஞர் தீவினை கடிமின்-விலங்குப் பிறப்பினையும் நரகர்ப் பிறப்பினையும் பேய்ப்பிறப்பினையும் உண்டாக்குகின்ற உள்ளங் கலங்குதற்குக் காரணமான துன்பத்தைத் தருகின்ற தீவினைகளைச் செய்யாதொழியுங்கோள்; கடிந்தால்-அத் தீவினையைச் செய்யா தொழியின்; நல்வினை அயராது ஓம்புமின்-நல்வினைகளை மறவாது செய்யுங்கள் , எற்றுக்கெனின் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் ஆகலின்-செய்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகிய உயர்ந்த பிறப்புக்களை எய்துவீர் ஆதலால்; புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் உலகு உயக்கோடற்கு ஒருவன் தோன்றும்-மெய்யறிவுடையவனும் முழுவதும் மயக்கமின்றி உணர்ந்தவனும் ஆகிய இவ்வுலகத்தை உய்யக் கொள்ளும் பொருட்டுப் பிறக்கின்ற ஒருவனும் ஆகிய புத்த பெருமான் இன்றியமையாத பொழுதிலே வந்து பிறப்பான்; அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை-அக் காலத்திலே அப் புத்த பெருமான் திருவாய்மலர்ந்தருளுகின்ற அறங்களைக் கேட்கும் திருவுடையார் தப்புவதல்லது துன்பம் தருகின்ற இப் பிறவிக் கடலினின்றும் தப்பிக் கரையேறுவார் பிறர் யாரும் இல்லை ஆதலின்; மாற்று அரும் கூற்றம் வருவதன் முன்னம் அறம் போற்றுமின் என சாற்றிக் காட்டி-யாராலும் தடுத்தற்கரிய கூற்றுவன் வந்து நும்முயிரை உண்ணுதற்கு முன்பே நாளும் ஒல்லும் வகையால் ஓவாதே நல்லறத்தைச் செய்யுமின் என்று சொல்லிக் காட்டி; நா கடிப்பாக வாய் பிறை அறைந்தீர்-நும்முடைய நாவையே குறுந்தடியாகக் கொண்டு நும் வாயாகிய பறையை முழக்கினீர் என்றாள்; என்க.

(விளக்கம்) தீவினை கடிமின், கடித்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் எனவும், மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம் அறம் போற்றுமின் எனவும் வரும் இவற்றோடு

பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே

எனவரும் (195) புறப்பாட்டினை ஒப்பு நோக்குக.

பிறவி இழுக்குதல்-பிறவிக் கடலினின்றும் உய்ந்து கரையேறுதல்; இதனை நிருவாணம் என்பர். மாற்றருங் கூற்றம்-தடுத்தற்கரிய கூற்றுவன்; சாதல் வருமுன்னர் என்றவாறு. சாற்றிக் காட்டுதல்-வற்புறுத்திச் சொல்லுதல். கடிப்பு-பறையடிக்கும் குறுந்தடி.

இதுவுமது

52-57: அவ்வுரை.........தொழ

(இதன் பொருள்) அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த-அவ்வறவுரையைக் கேட்ட பின்னர் யான் தமியேனாய் நும்முடைய திருவடிகளை வணங்கி வாழ்த்திய பொழுது; எங்கட்கு வெவ்வுரை விளம்பினிர் ஆதலின்-யானும் என் கணவனுமாகிய இருவர் திறத்தும் வெவ்விய துன்பம் தருகின்ற மொழிகளைக் கூறிய அருளினீர் ஆதலால்; பெரியவன் தோன்று முன்னர் இப் பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும்-புத்த பெருமான் இந் நிலவுலகிலே வந்து பிறப்பதற்கு முன்பே கரிய திருமேனியையுடைய தேவேந்திரன் இந்தப் பீடிகையை இங்கு இட்ட காரணமும்; மன்பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ-பெருமையுடைய இப் பீடிகை உடம்பினின்றும் உயிர் இறந்துபட்ட எனது முற்பிறப்பினை உணர்த்தற்குக் காரணமும் என்னையோ என்று யான் வணங்கா நிற்ப.

(விளக்கம்) வெவ்வுரை என்றது நின் கணவன் இற்றைக்குப் பதினாறாம் நாள் திட்டிவிடம் என்னும் பாம்பால் உயிர் நீப்பன், அதனால் நீயும் தீயில் மூழ்குவை என்று சொன்ன சொற்களை. அந் நிகழ்ச்சியை 9 ஆம் காதை 48 ஆம் அடி முதலியவற்றால் உணர்க. பெரியவன்: புத்த பெருமான், கரியவன்: தேவேந்திரன்.

இதுவுமது

58-68: முற்ற...........ஆக

(இதன் பொருள்) முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது பொருளியல்புகளை எல்லாம் ஓதாதுணர்ந்த புத்த பெருமானையன்றி; மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது-மற்றையோர் யாரையும் அந்தப் பீடிகை தன்மேல் தாங்கமாட்டாது; பீடிகை பொறுத்த பின்னர் அல்லது வானவன் வணங்கான்-அப் பீடிகையானது தன் மேல் தாங்குமாற்றால் இவரே புத்த பெருமான் என்று அறிவித்த பின்னர் வணங்குதவதல்லது அவ்விந்திரன் வணங்குதல் இலன், இவ்வாற்றால்; மற்று அவ் வானவன் பெருமகற்கு அமைத்து-அத் தேவேந்திரன் புத்த பெருமான் இவன் என அறிந்துகொள்ளற்பொருட்டு இப் பீடிகையை அமைத்து வைத்து அப்பாலும்; தரும பீடிகை பிறந்தார் பிறவியை சாற்றுக என்று அருளினன்; இத் தரும பீடிகை இந் நிலவுலகத்துப் பிறந்த மாந்தருள் வைத்துத் தன்னை வலம் வந்து வணங்கியவருடைய முற்பிறப்பினையும் அறிவித்திடுவதாக என்று ஆணையிட்டருளினான்; ஆதலின் ஆயிழை பிறவியும் இருள் அறக்காட்டும் என்று எடுத்துரைத்தது-அக்காரணங்களால் இப் பீடிகை தன்மேல் பொறுக்குமாற்றால் புத்த பெருமானை இந்திரனுக்குக் காட்டித் தருவதோடன்றி ஆயிழாய் நின் முற்பிறப்பையும் விளக்கமாகக் காட்டாநிற்கும் என்று எடுத்துக் கூறியதாகிய; அருந்தவர் வாய்மொழி எனக்கு அன்றே போன்றது இன்று என்று ஏத்தி வலங்கொண்டு-அரிய தவத்தையுடைய பிரமதத்தருடைய மெய்ம்மொழி அவர் கூறிய அற்றை நாளில் இருந்தது போல இற்றை நாளும் எனக்குப் புதுமையுடையதாகவே இருக்கின்றது என்று சொல்லி ஏத்தி வலங்கொண்டு அப் புத்த பீடிகையை வாழ்த்தி வலம் வந்து; ஈங்கு இவள் இன்னணம் ஆக-இம் மணிபல்லவத்தீவின்கண் இம் மணிமேகலை இவ்வாறிருப்ப; என்க.

(விளக்கம்) முதல்வன்-புத்தர். வானவன்-இந்திரன். இந்திரன் புத்தரை அறிந்து கொள்ளுதற்கு இப் பீடிகையை இட்டனன். மேலும் அதுவே தன்னை வணங்கிய மாந்தர் பிறவியைச் சாற்றுக என்றும் அருளினன்; ஆதலால் அது உன் பிறவியையும் காட்டும் என்று கூறினான் என்றவாறு வாய்மொழி, அவன் கூறிய அன்று போலவே இன்றும் என் உள்ளத்தில் புதுமையாகவேயுளது என்று மணிமேகலை புத்தபீடிகையை வலங்கொண்டு ஏத்தினள் என்க.

புண்ணியராசன் தான் ஆ வயிற்றில் பிறந்தமையை அன்னையின்பால் கேட்டுணர்தல்

68-79: இறைவனும்...............நினைந்து

(இதன் பொருள்) இறைவனும் ஆங்கு அப்பொழில் விட்டு அகநகர் புக்கு-நாகபுரத்தில் மணிமேகலையால் அறிவுறுத்தப்பட்ட அரசனாகிய புண்ணியராசன் அப்பொழுதே அப் பூம்பொழிலை விட்டுத் தன் நகரத்தினுட் புகுந்து; தந்தை முனியா தாய் பசு ஆக வந்த பிறவியும் தன்னை வளர்த்த மணமுக முனிவனே தந்தையாகவும் தன்னை ஈன்ற தாய் ஒரு பசுவாகவும் தனக்கு வந்துள்ள அப் பிறப்பின் வரலாற்றையும்; மாமுனி அருளால் குடர்த்தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்-மண்முக முனிவனுடைய அருள் காரணமாக அப் பசுவின் வயிற்றினும் ஏனைப் பசுக்கள் சூல் கொள்ளுமாறுபோலக் குடரால் தொடர்ந்த தசை மாலையாலே சுற்றப்படாமல் அச் சூலிடத்தே ஒரு தகடாகிய பொன்னாலியன்ற மூட்டையினுள்ளே கருவாகி வளர்ந்திருந்த தன்மையையும்; மக்களை இல்லோன் பூமிசந்திரன் மாமுனி அருளால் கொடு  போந்த வண்ணமும்-மக்கட் பேறில்லாதவனாகிய பூமிசந்திரன் என்னும் அரசன் சிறந்த அம் முனிவனுடைய திருவருளாலே தன்னை மகவாக ஏற்றுக் கொண்டு தன் அரண்மனைக்குக் கொண்டு வந்த தன்மையும் அப் பூமிசந்திரன் மனைவியாகிய; ஆய்தொடி அரிவை அமரசுந்தரி எனும் தாய் வாய் கேட்டு தாழ்துயர் எய்தி-அழகிய வளையலையணிந்த அரிவைப் பருவத்தினளாகிய அமரசுந்தரி எனும் பெயரையுடைய தன் தாயின் வாய்ச் சொல்லாலேயே கேள்வியுற்று மனம் தாழ்தற்குக் காரணமான துன்பத்தை எய்தி; இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து-ஆபுத்திரனாயிருந்து இறந்துபோன பிறவியின்கண் தன்னையீன்ற தாயாகிய பார்ப்பினி சாலி செய்த இழிதகைச் செயலையும் மாறிப் பிறந்துள்ள இப் பிறப்பினும் ஆ வயிற்றில் பிறந்த இழிதகைமையையும் நினைந்து என்க.

(விளக்கம்) இறைவன்-புண்ணியராசன். முனி-மண்முக முனிவன் அடர்ப்பொன்-தகடாகிய பொன். பூமிசந்திரன்-நாகபுரத்தரசன் அமரசுந்தரி-பூமிசந்திரன் மனைவி; புண்ணியராசன் வளர்ப்புத்தாய் இறந்த பிறவியின் யாய் என்றது ஆபுத்திரனை ஈன்ற தாயாகிய பார்ப்பனியை; அவள் செய்ததாவது ஈன்ற குழவிக் கிரங்காளாய்த் தோன்றாத் துடவையின் இட்டுச் சென்றமை. பிறந்த பிறவியின் பெற்றி என்றது விலங்கின் வயிற்றில் பிறந்த இழிதகைமையை.

புண்ணியராசன் அமைச்சனுக்குக் கூறுதல்

80-92: செருவேல்...............சாற்றி

(இதன் பொருள்) செருவேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க-போர்க் கருவியாகிய வேல் ஏந்திய அரசர்கள் தங்குறை கூறுதற்குச் செவ்வி பெறாமல் அதனை எதிர்பார்த்து அது பெறுமளவும் அரண்மனை வாயிலின்கண் வாடிக்கிடப்ப; அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி-அரைசு கட்டிலில் ஏறிச் செம்மாந்திருந்து சான்றோரைப் போற்றுதல் செய்தும்; நாடகம் கண்டு நாடகத்தைக் கண்ணால் கண்டு களித்தும்; பாடல் பான்மையின் கேள்வி இன் இசை கேட்டு-பண்ணினது பண்பினால் உண்டாகின்ற கேட்டற்கியன்ற இனிய இசைகளைக் கேட்டு இன்புற்றும்; தேவியர் ஊடல் செவ்வி பார்த்து-உவளகத்தில் தேவிமார் ஊடியிருக்கின்ற செவ்வியைத் தெரிந்துகொண்டு நீடாது பாடகத் தாமரை சீறடி பணிந்து-அவர் ஊடல் நீடிக் காமவின்பம் பதன் அழிந்து கெடாமைப் பொருட்டு அவ்வூடலைத் தீர்த்தற்குப் பாடகம் அணிந்த தாமரைப் பூப்போன்ற மென்மையுடைய அவருடைய சிறிய அடிகளிலே விழுந்து வணங்கி அவ்வூடலைத் தீர்த்த பின்னர்; தேம் மரு கொங்கையில் குங்குமம் எழுதி-ஊற்றினிமை பொருந்தி அவர்தம் கொங்கையின் மேல் குங்குமச் சாந்து கொண்டு தொய்யில் எழுதி; அம் கையில் துறுமலர் சுரி குழல் சூட்டி-அழகிய தனது கையாலே செறிந்த மலர் மாலையை எடுத்துச் சுருண்ட அவர் தம் கூந்தலிலே சூட்டி விட்டு; நறுமுகை அமிழ்துறூஉம் திருநகை அருந்தி-நறிய முல்லையரும்பு போன்ற அழகிய எயிற்றில் ஊறும் ஊறலாகிய அமிழ்தத்தையொத்தி நீரைப் பருகி; மதிமுக கருங்கண் செங்கடை கலக்க-முழுமதி போன்ற அவர்தம் முகத்தின்கண்அமைந்த கரிய கண்ணினது சிவந்த கடைக்கண்ணோக்கம் நெஞ்சத்தைக் கலக்க அச் செவ்வி பார்த்து; கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ-காமவேள் தனது மலர்க்கண்களை ஏவுதலாலே; தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து-முனைத்தெழுந்த காம நுகர்ச்சியாகின்ற இன்பமாகிய கள்ளையுண்டு களித்திருக்கும் இவ்வில்லற வாழ்க்கையை அதன் புன்மை நோக்கி இகழ்ந்து தள்ளி, தூ அறத் துறத்தல் நன்று எனச் சாற்றி-சிறிதும் பற்றின்றித் துறந்து போதலே நன்றாம் என்று சொல்லிக் காட்டி; என்க.

(விளக்கம்) செவ்வி பார்த்து உணங்குவதாவது தம்குறை கூறுதற் கேற்ற மனமொழி மெய்கள் இனியனாம் காலம் வருந்துணையும் அதனை எதிர்பார்த்து முற்றத்தில் வாடிக்கிடத்தல். அரசு கட்டிலில் ஏறி வீற்றிருந்து என்க; வீற்றிருத்தல்-இறுமாந்திருத்தல், புரையோர்-பெரியோர்; அவராவார் சான்றோரும் அமைச்சரும் ஆசிரியரும் முதலியோர். நாடகம்-கண்டின்புறும் கலை. பாடல்-கேட்டின்புறும் கலை என்பது பற்றி நாடகங் கண்டு இசை கேட்டு என்றான். செவ்வி பார்த்து நீடாது அடிபணிந்து அதனைத் தீர்த்து என்க, இதனோடு

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா ளீள விடல்     (குறள்: 1302)

எனவும்

மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்      (குறள்: 1289)

எனவும் வரும் திருக்குறள்களும் நினைக்கத்தகும். துறுமலர்-செறிந்த மலர். அமிழ்து உறூஉம் நகை-என்பது ஆகுபெயர். நகையின்கண் ஊறிய அமிழ்தம் போன்ற நீரை அருந்தி என்க. செங்கடை கலக்க-சிவந்த கடைக்கண்ணில் காமக்குறிப்புத் தோன்றித் தம் நெஞ்சத்தில் கலக்க எனினுமாம். கருப்பு வில்லி-காமவேள். தருக்கிய காமம்-முனைத்த காமம். தூஅற-பற்றுக் கோடற்றுப்போம்படி.

அரசன் மொழிகேட்ட அமைச்சகன் செயல்

93-104: தெளிந்த............ஆயது

(இதன் பொருள்) தெளிந்த நாதன் என் செவி முதல் இட்ட வித்து ஏதம் இன்றாய்-மெய்ப்பொருளைத் தெளிந்த தலைவனாகிய தருமசாவகன் என்னும் துறவோன் என்னுடைய செவியாகிய நிலத்தின்கண் விதைத்த விதையானது அழிவிலதாய் முளைத்துப் பயிராகி; மணிமேகலைதான் காரணமாக இன்று விளைந்தது-மணிமேகலையாகிய முகில் அருள் மழை பெய்தல் காரணமாக இற்றை நாள் நன்கு விளைந்தது; என்று அணி மணி நீள் முடி அரசன் கூற-என்று அழகிய மணியாலியன்ற நெடிய முடியையுடைய புண்ணியராசன் கூறாநிற்ப; மந்திரி சனமித்திரன் மன் மனம் வேறாயினன் என-அமைச்சனாகிய அச் சனமித்திரன் என்பவன் அரசன் மொழி கேட்டு இவ்வரசன் தன்மனம் வேறுபட்டிருக்கின்றான் என்று கருதி; அவன் தாள் தொழுது ஏத்தி எங்கோவாழி என் சொல் கேள்மதி-அப் புண்ணியராசனுடைய அடிகளில் வீழ்ந்து வணங்கிப் புகழ்ந்து எங்கள் அரசே நீடுழி வாழ்வாயாக அடியேன் சொல்லையும் சிறிது கேட்டருள்வாயாக; நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்-உன் தந்தையாகிய அரசன் உன்னை மகவாக ஏற்றுக்கொள்வதன் முன் சென்ற காலத்தே; இப் பதிகெழு நல்நாடு பன்னீராண்டு மன் உயிர் மடிய மழை வளம் கரந்து-இவ்வரசாட்சிக்குட் பொருந்திய நல்ல இச் சாவக நாடு தன்னிடத்தே நிலைபெற்ற உயிரினங்கள் இறந்தொழியுமளவு மழை பெய்யாது தன் வளத்தைக் கரந்து கொள்ளப்பட்டு; இங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி தான் தனி தின்னும் தகைமையது ஆயது-இங்குத் தாயானவள் தானீன்ற குழந்தை பசித்த அழுதல் கண்டும் அதற்கு இரங்காதவளாய் அரிதாகத் தான் பெற்ற உணவைத் தானே தனித்திருந்து தின்னுகின்ற இழிதகைமையை உடையதாயிருந்தது என்றான்; என்க.

(விளக்கம்) நாதன்: தருமசாவகன் செவி முதல்: முதல்-ஏழாவதன் சொல்லுருபு. ஏதம்-குற்றம்; செவியாகிய கழனியில் எனவும் மணிமேகலையாகிய முகில் எனவும் கூறிக் கொள்க. நீள்முடி-வழிவழியாக நீண்டு வருகின்ற முடியென்க. மன்-மன்னன்; மந்திரியாகிய சனமித்திரன் என்க. அவன்:புண்ணியராசன் கேள்மதி. ஈண்டு மதி: முன்னிலையசை. நுங்கோன் என்றது பூமிசந்திரனை. நன்னாடு-நல்ல சாவக நாடு வளங்கரந்து தகைமையது ஆயது என்க.

இதுவுமது

105-115: காய்............அன்றே

(இதன் பொருள்) காய் வெம் கோடையில் கார் தோன்றியது என நீ தோன்றினையே-கதிரவனால் சுடப்பெற்ற வெவ்விய முதுவேனிற் பருவத்தில் கார்ப்பருவம் தோன்றினாற் போல அத்தகைய வற்கடப்பொழுதிலே நீ இந் நாட்டின்கண் வந்து பிறந்தாய்; நிரைத்தார் அண்ணல் தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு வானம் பொய்யாது- நிரல்படத் தொடுத்து மலர்மாலை யணிந்த தோன்றலாகிய நீ பிறந்த பின்பு இந் நாட்டிலே பிறந்த உயிர்கட்கு மழை பெய்யாமல் பொய்ப்பதில்லை; மண்வளம் பிழையாது ஊன் உடை உயிர்கள் உறுபசி அறியாநிலம் தனது வளமாகிய உணவுப் பொருள்களை வழங்குவதில் தப்புவதில்லை ஆதலன் உடம்பொடு பிறந்த உயிர்கள் மிக்க பசியை ஒரு பொழுதும் அறியாவாயின், இங்ஙனமாகலின்; நீ ஒழி காலை நின்நாடு எல்லாம் தாய் ஒழி குழவி போல கூஉம்-நீ துறந்து போன காலத்தில் நின் ஆட்சியின்கண்பட்ட இந்த நாட்டில் வாழும் உயிர்களெல்லாம் தாய் இறந்துபோன குழந்தை போலத் துன்புற்று நின்னைக் கூப்பிட்டழும் அல்லவோ; துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ உயர்நிலை உலகம் வேட்டனை ஆயின்-இவ்வாறு துயருறுகின்ற நிலைமையையுடைய இவ்வுலகத்துயிர்களைப் பாதுகாக்கும் கடமையைக் கை விட்டு நீ மட்டும் மேனிலை உலகம் புகுந்து இன்புறுதலை விரும்புவாயானால்; இறைவ உயிர்கள் இறுதி எய்தவும் பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே-அரசனே இவ்வுலகத்து உயிர்களெல்லாம் துன்பத்தால் துடித்து இறக்கும்படி கைவிட்டு நீ மட்டும் இன்பப் பேற்றினை விரும்பிச் சென்றாய் ஆகுவை அல்லையோ; என்க.

(விளக்கம்) காய் வெங்கோடை-முதுவேனிற் பருவம்; கார்-கார்ப்பருவம்; முகில் எனினுமாம். அண்ணல்-தலைமைத் தன்மையுடையோன். வானம்; ஆகுபெயர். உறுபசி-மிக்கபசி. கூஉம்-கூப்பிடும். தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூஉம் என்பது புறநானூறு. (4) உயர்நிலை உலகம்-வீட்டுலகம். இறுதி-சாவு. பெறுதி-பேறு (ஊதியம்)

புண்ணியராசன் செயல்

116: 126: தன்னுயிர்..........ஏறினன்

(இதன் பொருள்) தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்-தன் உயிர் துன்புறுதல் கருதி ஒரு சிறிதும் இரங்காதவனாய்ப் பிற உயிர்களின் துன்பம் தவிர்த்துப் பாதுகாக்கின்ற மன்னுயிர் முதல்வனாகிய புத்தபெருமான் திருவாய்மலர்ந்தருளிய அறத்தினும் சேர்ந்ததன்று நீ கூறும் இத்துறவு; மன்னவ மதிமாறு ஓர்ந்தனை என்று முதுமொழி கூற-அரசே நீ அறிவுக்கும் பொருந்தாது. மாறுபடுகின்ற ஒன்றனை நினைந்தனை என்று அவ்வமைச்சன் அறிவுரை கூறா நிற்ப; முதல்வன் கேட்டு-அரசனாகிய அப் புண்ணியராசன் அது கேட்டு அமைச்சனை நோக்கிக் கூறுபவன்; மணிபல்லவம் அரிதால்-அமைச்சனே நின்னறிவுரை சாலவும் நன்றே காண்! நீ விரும்பியவாறே யான் துறவி யாவே னல்லேன் ஆயினும் மணிபல்லவத் தீவிற்குச் சென்று ஆண்டுள்ள புத்தபீடிகையை வலம் வந்து வணங்குதற்கு என் நெஞ்சத்திலுண்டான தணியாத விருப்பமானது யான் அது செய்யாமல் தணித்தற்கியலாததா யிருக்கின்றது ஆதலால்; ஒரு மதி எல்லை அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் காத்தல் நின் கடன் என-யான் அங்குச் சென்று மீளும் பொருட்டு ஒரு திங்கள் முடியுந் துணையும் இவ்வரசாட்சியையும் உரிமை மகளிரையும் இவ்வக நகரில் வாழும் அரசியல் சுற்றத்தாரையம் காவல் செய்தல் உன் கடமையாகும், என்று சொல்லி அவற்றை யெல்லாம் அவ்வமைச்சன்பால் ஓம்படை செய்தபின்னர் அப் புண்ணியராசன்; கலம் செய் கம்மியர் வருக எனக் கூஉய்-தன் மரக்கலத்திலே தொழில் செய்யும் நீகான் முதலிய தொழிலாளர் வருவாராக என்றழைத்து அவரோடு; இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி வங்கம் ஏறினன்-விளங்குகின்ற நீரையுடைய கடல் அலை யெறிகின்ற கரையை யடைந்து மரக்கலத்தில் ஏறினன்; என்க.

(விளக்கம்) மன்னுயிர் முதல்வன்-புத்த பெருமான். அறமும் ஈதன்றால் என்புழி, உம்மை இழிவு சிறப்பு மதி-அறிவு முதுமொழி அறிவுரை. முதல்வன்: புண்ணியராசன். உரிமை-அரசன் மனைவி முதலிய மகளிர் சுற்றம்-ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் ஆம்; ஒருமதி-ஒரு திங்கள்(முப்பது நாள்) கம்மியர்-தொழிலாளர் வங்கம்-மரக்கலம்; முதல்வன் கேட்டு நின் கடன் என ஓம்படைசெய்து கூஉய் எய்தி ஏறினன் என்க.

புண்ணியராசனை மணிபல்லவத்தில் மணிமேகலை வரவேற்றல்

126-134: மணி...............மன்னவன்

(இதன் பொருள்) மணிபல்லவத்து இடை அக்கலம் தங்காது சென்று சார்ந்து இறுத்தலும்-மணிபல்லவத்தீவிற்கு இடையிலே சிறிதும் தங்காமல் அம் மரக்கலம் சென்று அத் தீவினை அணுகித் துறையின்கண் தங்குதலும்; புரைதீர் காட்சி பூங்கொடி பொருந்தி-குற்றமில்லாத மெய்க்காட்சியையுடைய பூங்கொடி போல்வாளாகிய மணிமேகலை அக் கடல் துறையின் பக்கத்தே வந்து போக்கியவள்; அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி-அக் கலத்தின் வரவு கண்டு இது புண்ணியராசனுடைய மரக்கலமென்று துணிந்து உளம் பெரிதும் மகிழ்ந்து; காவலன் தன்னொடும் கடல்திரை உலாவும் தேமலர் சோலை தீவகம் வலம் செய்து-கலத்தினின்றும் வந்து கரையேறிய அப் புண்ணியராசனையும் வரவேற்று அவனோடும் கடலினது அலை வந்து உலாவுகின்ற தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகளோடு கூடிய அம் மணிபல்லவத்தீவை வலமாக வந்து அவ்வரசனுக்கு மணிமேகலை; பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் தருமபீடிகை இது எனக் காட்ட-அரசே உதோ பார் பழம் பிறப்பினை உணரச் செய்யும் தெய்வத் தன்மையுடைய தரும பீடிகை இது தான் என்று கட்டாநிற்ப; மன்னவன் வலம் கொண்டு ஏத்தினன்-அப் புண்ணியராசனும் பெரிதும் மகிழ்ந்து அப் புத்த பீடிகையை வலம் வந்து வீழ்ந்து வணங்கி வாழ்த்து வானாயினன்; என்க

(விளக்கம்) இறுத்தலும்-தங்குதலும். புரைதீர் காட்சி-மெய்க் காட்சி. அரைசன்: போலி. காவலன்: புண்ணியராசன். தேம்-தேன். தீவகம்-தீவு. பெருமகன்: அண்மைவிளி. மன்னவன்: புண்ணியராசன்.

புண்ணியராசன் பழம் பிறப்புணர்ந்து சிந்தாவிளக்கு என்னும் தெய்வத்தைப் புகழ்ந்தேத்துதல்

134-147: மன்னவற்கு............பாவாய்

(இதன் பொருள்) மன்னவற்கு உயர் மணிப்பீடிகை-அங்ஙனம் வாழ்த்திய அப் புண்ணியராசனுக்கு உயர்ந்த மணிகளால் இயன்ற அப் புத்த பீடிகை; மையறு மண்டிலம் கை அகத்து எடுத்து காண்போர் முகத்தைப் போல-குற்றமில்லாத கண்ணாடி வட்டம் தன்னைக் கையிலெடுத்துப் பார்ப்பவரின் முகத்தைக் காட்டுதல் போல; உலந்த பிறவியைக் காட்ட-கழிந்த பிறப்பினைக் காட்டா நிற்ப அது கண்ட அவ்வரசன் அக் காட்சியினூடே சிந்தாவிளக்கு என்னும் தெய்வத்தையும் கண்டு கூறுபவன்; என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்-என்னுடைய முற்பிறப்பாகிய ஆபுத்திரன் பிறப்பையும் அறிந்து கொண்டேன் என் நெஞ்சத்தில் நின்ற துன்பம் முழுவதும் தீரவும் பெற்றேன்; தென் தமிழ் மதுரை செழும்கலை பாவாய்-நாவலந்தீவின்  தென்திசையின்கண் செந்தமிழ் வழங்கும் மதுரைமா நகரத்தின்கண் செழுங்கலை நியமமென்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளி இருக்கின்ற சிந்தாவிளக்கென்னும் தெய்வப் பாவையே! இப் பேற்றிற்குக் காரணம் நீயேயாவாய்; மாரி நடுநாள் வயிறு காய் பசியால் ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து-பண்டொரு காலத்தே கார்ப்பருவத்தில் மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு நாளின் நள்ளிரவிலே தம் வயிறு தம்மைச் சுடுகின்ற பசித்தீயினுக் காற்றாமையால் நிறைந்த இருளையும் அஞ்சாமல் அம்பலத்திற்கு வந்து; ஆங்கு இரந்து ஊண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு-அவ்வம்பல மருங்கில் பிச்சையேற்றுண்ணும் வாழ்க்கையையுடையேனாய்த் துயின்றிருந்த என்னிடத்தே வந்து உணவு இரந்தவர்களுக்கு; அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்-பசிதீர அருந்துதற்குரிய உணவு கொடுத்தற்கு வழிகாணாமல் வருந்துவேனாகிய என் கையில்; ஏடா அழியல் எழுந்து இது வந்து இத் திருவோட்டினை ஏற்றுக் கொள்வாயாக; நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது என-இந்நாடு முழுவதும் வறுமையுற்று வருந்தினும் இத்திருவோடு தன்கண் உணவின்றி வறுமையுறாது காண் என்று சொல்லி; அமுத சுரபி அம்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய்-அமுதசுரபி என்னும் அத் தெய்வத் தன்மையுடைய பிச்சைப் பாத்திரத்தை என்னுடைய அகங்கையில் வழங்குமாற்றால் என்னுடைய பழவினைத் தொகுதியை அறச்செய்து என்னை உய்வித்த தெய்வங்களுக்கும் தெய்வமாகிய கலைத்தெய்வமே என்று வாழ்த்தி; என்க.

(விளக்கம்) மன்னவற்கு: புண்ணியராசனுக்கு. உலந்த பிறவி கழிந்த பிறப்பு; அஃதாவது ஆபுத்திரனாகிய முற்பிறப்பு, மையறு மண்டிலம்-குற்றமற்ற கண்ணாடி. வயக்குறு மண்டிலம் (கலி-25) என வருதலும் காண்க. மன்னவற்கு. காண்போர் முகத்தைக் கண்ணாடி காட்டுதல் போல பீடிகை உலந்த பிறவியைக் காட்ட என்க. என் பிறப்பறிந்தேன் என்பது தொடங்கிப் புண்ணியராசன் தன் முற்பிறப்பாகிய ஆபுத்திரனுக்கு நிகழ்ந்தவற்றை அகக்கண்ணின் முன் கண்டு கூறுவன மதுரையில் ஆபுத்திரன் அமுதசுரபி பெற்ற வரலாறு பாத்திர மரபு கூறிய காதையில் கூறப்பட்டுள்ளது. பவம்-பழவினைத் தொகுதி; பிறப்புக்குக் காரணமான சார்பு

இதுவுமது

148-157: உணர்வில்...........யிருப்ப

(இதன் பொருள்) உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும் மணிதிகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி-உயர்திணை உயிர்களின் உள்ளுணர்வினுள் எழுந்தருளி அவர்க்கு இன்றியமையாத சொல்லின் பொருள்களை உணர்த்துகின்ற பளிக்கு மணியில் திகழ்ந்து விரிகின்ற ஒளி போன்று வெண்மையான ஒளியையுடைய திருமேனி படைத்த கலைமகளே நின்னுடைய திருவடிகள்; தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் நாமாசு கழூஉம் நலங்கிளர் திருந்து அடி-தேவர்களாயிருந்தாலும் பிரமர்களாயிருந்தாலும் அவர்களுடைய நாவினது குற்றத்தைப் போக்கி நலந்தோற்றுவிக்கும் அழகிய தெய்வத் தன்மையுடைய அடிகளாதலால் எளியேன்; பிறந்தபிறவிகள் பேணுதல் அல்லது-எத்தனை பிறப்புப் பிறந்தாலும் அவற்றை வழிபாடு செய்து வாழ்வதல்லது; மடந்தை மறந்து வாழேன் என்று ஏத்தி-நா மடந்தையே மறந்து கணப்பொழுதும் வாழ்கிலேன் கண்டாய் என்று சொல்லி வாழ்த்தி; மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து தென் மேற்கு ஆகச் சென்று-அப் புண்ணியராசன் மணிமேகலையோடு அவ்விடத்தினின்றும் எழுந்துதென்மேற்றிசையிலே சென்று; திரை உலாம் கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப-அத் திசையில் எதிர்ப்பட்ட அலை உலாவுகின்ற கோமுகி என்னும் பெயரையுடைய பொய்கையினது கரையிடத்தே ஒரு தூய மலரையுடைய புன்னை மரம் நிற்கின்ற துறையிடத்தே அப் புன்னை நிழலில் இளைப்பாறி இராநிற்ப; என்க.

(விளக்கம்) கலைமகள் உணர்விற்கு உணர்வாய் நின்று சொற்பொருள் உணர்த்தும் தெய்வம் என்கின்றான். கலைமகள் வெண்ணிறம் உடையள் ஆதலின் பளிக்கு மணியின் ஒளியை உவமை கூறினான்; மணிமுத்து எனினுமாம். தெய்வங்களுக்கும் நலமுண்டாக்கும் திருந்தடி நின்னுடைய அடி ஆதலால் யானும் அவற்றைப் பேணுதல் அல்லது மறந்து வாழேன் என்றான்; பிறந்த பிறவிகள்-பிறக்கும் பிறவிகள் தோறும் என்றவாறு.

தீவதிலகை என்னும் தெய்வம் தோன்றிப் புண்ணியராசனைப் புகழ்தல்

158-167: ஆபுத்திரன்.........இவைகாண்

(இதன் பொருள்) ஆபுத்திரனோடு ஆயிழை இருந்தது காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி-அவ்வாறு ஆபுத்திரனாகிய புண்ணியராசனோடு மணிமேகலை புன்னை நீழலின்கண் வீற்றிருந்த தனை அத் தீவகத்தின் காவற்றெய்வமாகிய தீவதிலகை கண்டு பெரிதும் மகிழ்ந்து திருவுருவங்கொண்டு அவர்கள் முன்னிலையில் சென்று புண்ணியராசனை நோக்கி; அருந்து உயிர் மருந்து முன் அம் கையில் கொண்டு பெரும் துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்கள் உண்ணும் உணவாகிய உயிர் மருந்தினைச் சுரந்து வழங்கும் அமுதசுரபியை முன்பு அகங்கையில் ஏந்திக் கொண்டு ஆருயிர்களின் பெரிய பசித்துன்பத்தைத் தீர்த்தருளிய அந்த ஆபுத்திரனாகிய பெரியோய் நீ மாறிப் பிறந்தும் ஈண்டு வந்துற்றனை; அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர் பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி-அந்தக்காலத்திலே உன்னை மறந்து மரக்கலம் ஏறிப்போனவர்களில் சிலர் பிற்றை நாளில் நினைவு கூர்ந்து மீண்டும் இங்கு வந்து நீ உண்ணா நோன்பின் உயிர் நீத்த தன்மையை அறிந்து வருந்தி; நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்- நீ உண்ணா நோன்பிருந்த இடத்திலேயே தாமும் உண்ணா நோன்பிருந்து உடம்பினது எலும்புக் கூடுகள் இதோ கிடக்கின்றன இவற்றையும் காண்பாயாக அப்பாலும் ஆங்கு அவர் இட உண்டு அவர் உடன் வந்தோர் ஏங்கி மெய்வைத்தோர் என்பும் இவை காண்-அவ்வாறிறந்த செட்டி மக்கள் உணவு கொடுப்ப உண்டு அவரோடு வந்தவர்கள் அவர் இறந்தமை கண்டு துன்பத்தால் ஏங்கி இவ்விடத்தே இறந்தோரும் சிலர் உளர் அவர்கள் எலும்புக் கூடுகளும் இதோ கிடக்கின்றன இவற்றையும் காண்பாயாக என்றாள்; என்க.

(விளக்கம்) உயிர் மருந்து-அமுதசுரபி:ஆகுபெயர். அங்கை அகங்கை; உள்ளங்கை. அப்பெரியோர் என்றது அவ்வாபுத்திரன் ஆகிய பெரியோய் என்றவாறு. அந்நாள் என்றது முற்பிறப்பிலே மதுரையிலிருந்து மரக்கலமேறி இத் தீவத்தை அடைந்த அந்த நாளிலே என்றவா. பெற்றிமை என்றது உண்ணாநோன்போடு உயிர்பதிப் பெயர்த்தமையை; இவ் வரலாறு பாத்திர மரபு கூறிய காதையில் கூறப்பட்டுள்ளது. நீன்குறி-நீயிருந்த இடம். அவ்விடத்துத் தாமும் உண்ணா நோன்புடன் இருந்து அவரும் உயிர்நீத்தனர் என்னும் பொருளும் தோன்ற நின்குறி இருந்து தம்முயிர் நீத்தோர் என்றாள். இட உண்டவர்-உணவு கொடுக்க வாங்கி உண்டவர். மெய் வைத்தோர் என்றது இறந்தோர் என்றவாறு. என்பு-எலும்பு.

தீவதிலகை புண்ணியரசனுக்கு அவனது முற்பிறப்பின் உடல் என்பினைக் காட்டல்

168-174: ஊர்திரை.............ஆயினை

(இதன் பொருள்) ஊர்திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப ஆய் மலர்ப்புன்னை அணி நிழல் கீழால்-ஊர்ந்து வருகின்ற அலைகள் கொணர்ந்து சேர்த்த இவ்வுயர்ந்த மணல் புதைத்து விட்டமையால் அழகிய மலரையுடைய இப் புன்னை மரத்தின் நிழலில் இம் மணற்குவியலின் கீழே அன்புடை ஆர் உயிர் அரசற்கு அருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய்-அன்புடைய தனது உயிரைப் புண்ணியராசனாகிய உனக்கு வழங்கிவிட்ட எலும்புகளையுடைய உடம்பு உங்கே கிடந்தது அதனையும் நீ கண்டு கொள்வாயாக, இவ்வாற்றால் நீ தானும்; நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்-நின்னுடைய உயிரையும் கொன்றொழித்தனை நின்னுடைய உயிரையும் கொன்றொழித்தனை நின்னுடைய உயிர் வருந்து மென்பதற்கிரங்கிப் பிற்காலத்தே நின்னைக் காண வந்த அன்புமிக்க பிறருடைய உயிர்களையும் கொன்றொழித்தாய்; கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை-இவ்வாறு பல கொலைகள் செய்த தீவினையாளன் அல்லையோ நீ அங்ஙனமிருந்தும் நீ அரசனாகப் பிறந்துள்ளனையே இஃதொரு வியப்பிருந்தவாறு! என்று அத் தெய்வம் புண்ணியராசனுக்குச் சொல்லி வியந்து என்க.

(விளக்கம்) ஊர்திரை: வினைத்தொகை. ஆய் மலர்-அழகிய மலர். அன்புடை ஆருயிர் அரசற்கு அருளிய என்புடை யாக்கை என்றது அந்த யாக்கையிலிருந்த உயிரே இப்பொழுது புண்ணியராசனுடைய உயிராயிருப்பதுபற்றி ஆபுத்திரன் யாக்கை உயிருடன் இருக்கும் பொழுது ஆற்றாமாக்களுக்கு உண்டி கொடுத்ததூஉமின்றி இறக்கும் பொழுது தன்னுயிரை அரசன் ஒருவனுக்கு வழங்கியது என்னும் நயம்பட உரைத்தமை உணர்க. பல உயிர்களைக் கொன்றும் கொற்றவன் ஆயினை என்றது மருட்கை அணி. கொலைவன்-கொலைத் தொழிலாளன் இதனை வஞ்சப்புகழ்ச்சி எனலுமாம்.

தீவதிலகை மணிமேகலைக்குக் கூறுதல் புகார் நகரம் கடல் கோட்படுதல்

175-186: பலர்................கொடுத்தலும்

(இதன் பொருள்) பலர்தொழு பாத்திரம் கையின் ஏந்திய மடவால் நல்லாய் நின் தன் மாநகர் கடல் வயிறு புக்கது-பின்னர் அத் தீவதிலகை மணிமேகலையை நோக்கிப் பலராலும் தொழத்தகுந்த மாபெரும் பாத்திரமாகிய அமுதசுரபியைக் கையில் ஏந்துதற்குரிய செய்தவமுடைய மணிமேகலை நல்லாய் ஒன்று கேள்! அஃதாவது உன்னுடைய பெரிய நகரமாகிய பூம்புகார் நகரம் கடலில் அழுந்தி மறைந்தது காண்; காரணம் கேளாய்-அங்ஙனம் மறைந்ததற்குரிய காரணத்தையும் கூறுவல் கேட்பாயாக; நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாக நாடென்னும் நல்ல நாட்டை ஆள்பவனாகிய வளைவணன் என்னும் அரசனுடைய மகள் பீலிவளை என்னும் பெயரை உடையவள் மகளிருள் மாண்பு மிக்கவன் ஆவாள்; பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய புனிற்று இளம் குழவியொடு பூங்கொடி பொருந்தி கதிரவனாகிய தெய்வத்தின் மரபிலே பிறந்ததும் ஈன்றணிமைக் காலத்ததுமாகிய தன் பச்சிளங் குழவியோடே பூங்கொடி போல்வாளாகிய அப் பீலிவளை இம் மணிபல்லவத் தீவகத்தில் வந்து; இத்தீவகம் வலம் செய்து தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி இம் மணிபல்லவத்தீவை வலம் வந்து பின்னர் அதனுள்ளே தேவேந்திரனால் இடப்பட்ட மிகவும் பெருமையுடைய புத்த பீடிகையையும் கண்டு அதனையும் வலம் வந்து வணங்கி ஏத்தும்பொழுது; கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப-கம்பளச் செட்டி என்னும் ஒரு வணிகனுடைய மரக்கலமானது இத் தீவின் துறையில் வந்து தங்கா நிற்ப; அங்கு அவன் பால் சென்று அவன் திறம் அறிந்து-அப் பீலிவளை தன் குழவியோடு அவ் வணிகன்பால் சென்று அவ் வணிகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன் என்பதனையும் அவன் மரக்கலம் அப்பொழுது அந் நகரத்திற்கே போக விருக்கிறது என்னும் அவனுடைய வரலாறு முழுவதும் தெரிந்துகொண்ட பின்னர்; இவன் கொற்றவன் மகன் கொள்க எனக் கொடுத்தலும்-வணிகனே இம் மைந்தன் உன்னுடைய அரசனாகிய நெடுமுடிக்கிள்ளியினுடைய மகனாவான் ஆகவே இவனை அவன்பால் சேர்ப்பித்தற் பொருட்டு இக் குழந்தையை நீ ஏற்றுக்கொள், நீ அந் நகரத்திற்குச் சென்றவுடன் அவ்வரசன்பால் ஒப்பித்திடுக என்று அறிவுறுத்துக் கொடா நிற்ப; என்க. 

(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி மாநகர்-காவிரிப்பூம் பட்டினம். கடல் வயிறு புகுதலாவது கடல் கோட்படுதல், மேலே காவிரிப்பூம்பட்டினம் கடல் வயிறு புகுந்தமைக்குக் காரணம் கூறப்படுகின்றது நாக நன்னாடாள்-வளைவணன் பனிப்பகை வானவன் கதிரவன். பீலிவளை-கதிரவன் குலத்தோன்றலாகிய நெடுமுடிக்கிள்ளிக்குக் கருக்கொண்டு ஈன்ற மகவாதலின் கதிரவன் வழியில் தோன்றிய குழவி என்றாள். புனிறு-ஈன்றணிமைக் காலம். தீவகம்-மணிபல்லவம். பீடிகை-புத்த பீடிகை. இறுப்ப-தங்க அவன் திறம்-அச் செட்டி பூம்புகார் நகரத்திற்குப் போகின்றவன் என்பது முதலிய வரலாறு. கொற்றவன்: நெடுமுடிக்கிள்ளி. கொற்றவன் மகன் இவன் கொள்க என்றது நின் கொற்றவன் மகனாதலின் இவனைக் கொடுபோய் அக் கொற்றவன்பால் கொடுத்திடுக என்னும் குறிப்புப் பொருள் கொண்டு நின்றது.

இதுவுமது

187-197: பெற்ற.......ஒழிந்தது

(இதன் பொருள்) பெற்ற உவகையன் பெருமகிழ்வு எய்தி-இத்தகையதொருபேறு பெற்றமையால் மகிழ்ந்தவன் அம் மகவினைப் பார்த்து மேலும் பெரிதும் மகிழ்ந்து; பழுது இல் காட்சி பைந்தொடி புதல்வனை தொழுதனன் வாங்கி-குற்றமற்ற தோற்றத்தையுடைய அப் பீலிவளை ஈந்த மகவினைக் கைதொழுது ஏற்றுக்கொண்டு தன் மரக்கலத்திற்கு வந்து; துறை பிறக்கு ஒழிய கலம் கொண்டு பெயர்ந்த அன்றே-அத் துறை பின்னே கிடக்கும்படி தன் மரக்கலத்தைச் செலுத்திக் கொண்டு போன அற்றை நாளிலே; கார் இருள் இலங்குநீர் அடை கரை அக்கலம் கெட்டது-கரிய இருளையுடைய இரவிலே விளங்குகின்ற அலைநீர் சென்றடைகின்ற கரை இருளையுடைய இரவிலே விளங்குகின்ற அலைநீர் சென்றடைகின்ற கரை மருங்கில் அம் மரக்கலம் உடைந்தொழிந்தது; கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடிவேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப-மூழ்கிய அம் மரக்கலத்தினின்றும் உய்ந்து கரையேறிய மாந்தர் சென்று பீலிவளை கொடுத்த குழவியை இழுந்துவிட்ட செய்தியை வடித்த வேலேந்திய நெடுமுடிக்கிள்ளி மன்னவனுக்கு அறிவியா நிற்ப; மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் நல்மணி இழந்த நாகம் போன்று-அச்செய்தி கேட்ட அச் சோழ மன்னவன் தன் மகவிற்கு நேர்ந்த அக் கேட்டினைப் பொறாதவனாய் நல்ல மணியை இழந்துவிட்ட யாகப்பாம்பு போலே; கானலும் கடலும் கரையும் தேர்வுழி வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது-அக் குழந்தையைக் காணும் பொருட்டுக் கடற்கரைச் சோலையிலும் கடலினூடும் கரை மருங்கினும் தேடித் திரிகின்றபொழுது இந்திரவிழா வெடுத்தலை அப் பூம்புகார் நகரம் ஒழிவதாயிற்று என்றாள்; என்க.

(விளக்கம்) பழுதில் காட்சிப் புதல்வனை. பைந்தொடி புதல்வனை எனத் தனித்தனி கூட்டுக. தொழுதனன்: முற்றெச்சம். பிறக்கு ஒழிய பின்னே கிடப்ப. கரை மருங்கில் கலம் கெட்டது என்க. கெடுகல மாக்கள்-கெட்ட கலத்தினின்றும் உய்ந்து கரையேறிய மாக்கள் என்க. கெடுத்தது-இழந்த செய்தியை. வடிவேலையுடைய நெடுமுடிக்கிள்ளி என்க. தேர்வுழி-தேடித்திரிகின்ற பொழுது. வானவன் விழாக்கோள்-இந்திர விழாச் செய்தலை.

இதுவுமது

198-206: மணிமேகலா............புக்கனர்

(இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் மற்று அது பொறஅள் அணி நகர் தன்னை அலைகடல் கொள்க என சாபம் இட்டனன் இது பட்டது-மணிமேகலா தெய்வமானவள் இந்திரவிழாச் செய்யாமையாகிய அக் குற்றத்தைப் பொறாமல் சினந்து அழகிய அந் நகரத்தை அலையையுடைய கடல் கவர்ந்து கொள்வதாக என்று சாபமிட்டனள் இதுவே அதற்குரிய காரணமாம்; கடவுள் மாநகர் கடல் கொள் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன் போல-தேவர்கள் வாழும் அமராபதி நகரத்தைக் கடல் கவர்ந்து கொள்ளா நிற்ப அந் நகரத்தினின்றும் தனியே புறம் போந்த வடித்த வேலையுடைய பெரிய கையையுடைய இந்திரனைப் போல; விரி திரை வந்து வியல் நகர் விழுங்க உலக மன்னவன் ஒரு தனி போயினன்-விரிகின்ற அலைகளையுடைய கடல் பெருகி வந்து அகன்ற தன் தலைநகரத்தைக் கவர்ந்து கொண்டமையாலே நிலவுலகத்தை ஆளும் அச் சோழ மன்னன் பெரிதும் தமியனாய் உய்ந்து போயினன்; அருந்தவன் தன்உடன் ஆயிழை தாயரும் வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்-அரிய தவத்தினையுடைய அறவணவடிகளாருடன் மணிமேகலாய் நின்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் மனம் வருத்தம் இல்லாமல் அந் நிகழ்ச்சியை முன்னரே யறிந்து அந் நகரத்தினின்றும் புறப்பட்டுச் சென்று வஞ்சிமாநகரினுள் புகுந்தனர்.

(விளக்கம்) அது பொறாஅள்-விழாக்கோள் ஒழிந்த அக் குற்றத்தைப் பொறாளாய் என்க. நகர்-பூம்புகார். இது பட்டது என மாறுக. பட்டது-நிகழ்ந்தது. கடவுள் மாநகர் -அமராபதி. வானவன் இந்திரன். கடவுள் மாநகர் கடல் கொளப் பெயர்ந்த வானவன் என்றது இல்பொருள் உவமை. வியல்நகர்-அகன்ற நகரம். உலக மன்னவன்: நெடுமுடிக்கிள்ளி. அருந்தவன் என்றது அறவணவடிகளாரை. அடிகளாருடன் நின் தாயரும் வருந்தாது ஏகினர் என்றது அறவணர் இந் நகரம் கடல்கோட்படும் என்று முற்படவே அறிந்து போக அவருடன் வருந்தாது ஏகினர் என்பதுபட நின்றது.

தீவதிலகை மறைந்து போதல்

207-213: பரப்பு..........போயபின்

(இதன் பொருள்) பரப்பு நீர் பவ்வம் பலர் தொழக் காப்போன் உரைத்தன-பெரும் பரப்பாகிய நீரையுடைய கடலைப் பலரும் கை தொழும்படி காவல் செய்கின்ற மணிமேகலா தெய்வத்தால் இவ் வரலாறு எனக்குக் கூறுப்பட்ட செய்திகளாம்; கேட்க உருகுவை ஆயின்-இன்னும் அத் தெய்வத்தின் செய்தி கேட்க ஆர்வம் கொண்டு மனம் உருகி நிற்பாயானால்; நின் மன் உயிர் முதல்வனை-நின்னுடைய உயிர் இப் பிறப்பெடுத்தற்கு உரிய முதல்வன் ஒருவனை; மணிமேகலா தெய்வம் முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் அற அரசு ஆண்டதும்-அந்த மணிமேகலா தெய்வம் பண்டொரு காலத்தே கடல் நடுவே உடைந்த மரக்கலத்தினின்றும் எடுத்துக் கரையேற்றி விடுத்ததும் அந்த நாளிலே அவ் வணிகன் அறங்களுக்கு அரசாகிய புண்ணிய தானமென்னும் பேரறத்தைச் செய்ததும் பிறவும் ஆகிய செய்திகளை எல்லாம்; மறு பிறப்பாட்டி-மறுபிறப்புணரும் மணிமேகலாய் நீ; அறவணன் தன்பால் வஞ்சி உள் கேட்பை என்று-அறவணவடிகளிடத்தே வஞ்சி நகரத்தின்கண் கேட்டறிகுவை என்று சொல்லிவிட்டு; அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின்-அச் சிறு தீவகத்தின் அரிய காவற்றெய்வமாகிய அத் தீவதிலகை மறைந்து போனபின்னர்; என்க

(விளக்கம்) பவ்வம்-கடல். காப்போள்-காக்கும் மணிமேகலா தெய்வம்; இவை காப்போளால் எனக்குக் கூறப்பட்டன. உருகுவை-கேட்க விரும்பி உளம் உருகுவையாயின் என்க. கேட்கவுறுகுவை என்றும் பாடம்; இதற்கு, கேட்டற்கு அமைவாயானால் எனப் பொருள் கூறுக. மன்னுயிர் முதல்வன் என்றது கோவலன் குலத்தில் முன்னோனாகிய ஒரு வணிகனை. முன்னாளெடுத்தது என்றது பண்டொரு காலத்தில் மரக்கல முடைந்து கடலில் நீந்தி வருந்திய காலத்தில் எடுத்துப் பாதுகாத்த செயலை. அறவரசாண்டது-புண்ணியதானம் செய்தது. இதனை

நாத னாவோ ளளிநீர்ப் பரப்பின்
எவ்வமுற் றான்றன தெய்வ்வந் தீரெனப்
பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும்
அறவர சாளவு மறவாழி யுருட்டவும்
பிறவிதோ றுதவும் பெற்றிய ளென்றே
சாரண ரறிந்தோர் காரணங் கூற

என இந் நூலில்(29: 24-29) வருதலாலும் சிலப்பதிகாரத்தில் 15-31 ஆம் அடியினும் காண்க. மறுபிறப்பாட்டி-பழம் பிறப்பை உணர்ந்த சிறப்புடைய மணிமேகலாய் என்று விளித்தவாறு. அந்தரத் தீவகம்-சிறு தீவாகிய மணிபல்லவம். அருந்தெய்வம்: தீவதிலகை.

புண்ணியராசன் மணலையகழ்ந்து தனதுடலின் என்புக் கூட்டைக் கண்டு மயங்குதல்

214-220: மன்னவ.........மயங்க

(இதன் பொருள்) மன்னவன் இரங்கி-புண்ணியராசன் தனது முற்பிறப்பின் உடம்பு இம் மணலின் கீழ் உளது என்றது கேட்டுத் துன்புற்று அதனைப் பார்த்தற் பொருட்டு; மணிமேகலை உடன் துன்னிய தூமணல் அகழத் தோன்றி-அம் மணிமேகலையுடன் தானும் அங்குச் செறிந்த தூயமணலை அகழுதலாலே காணப்பட்டு; ஊண் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி-அவ்வுடம்பானது தனது தசையின் பிணிப்பு அவிழ்ந்து மறைந்தொழிதலால் அவ்வுடலின் என்புக்கூடு ஒடுங்கித் தான் தனது கோப்புக் குலையாத தன்மையுடையதாய்; வெள் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி-வெண்மையான சுண்ணச் சாந்து பூசப்பெற்று அவ்விடத்திலே இருத்தல் போல இருந்த தன்மையைக் கொண்டிருக்கின்ற தன் முற்பிறப்பாகிய ஆபுத்திரனின் உருவத்தைப் பார்த்து அதன்கண் உண்டான பற்றுக் காரணமாக; மன்னவன் மயங்க-அவ் வரசன் மயங்கா நிற்ப.

(விளக்கம்) மன்னவன்-புண்ணியராசன். மணிமேகலையுடன் என்றதனால் மணிமேகலையும் அவ்வறவோன் உடம்பைக் காண விரும்பிப் புண்ணியராசனோடு அத் தூமணலை அகழ்ந்தனள் என்பது பெற்றாம். ஊன் பிணி-தசைப்பற்று. தான்-உடம்பின் எலும்பு. சுதை-சுண்ணச்சாந்து. இருக்கையின்-இருத்தல் போல. படிவம்-உருவம் மன்னவன் அவ்வுடம்பு தன்னுடையதென்னும் பற்றுக் காரணமாக மயங்கினன் என்பது கருத்து.

மணிமேகலை புண்ணியராசனை மயக்கந்தீர்த்துச் செவியறிவுறுத்தல்

220-231: மணிமேகலை..........இல்என

(இதன் பொருள்) மணிமேகலை எழுந்து இலக்கு இதழ் தாரோய் என் உற்றனையோ-அது கண்ட மணிமேகலை எழுந்து விளங்குகின்ற மலர்மாலையை அணிந்த மன்னவனே! இங்ஙனம் மயங்குதற்கு இங்கு யாது தீங்கு வந்து எய்தப் பெற்றனை; நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது-நின்னுடைய நாட்டிற்கு வலிய வந்து யான் உன்னை இம் மணிபல்லவத்திற்கு அழைத்து வலிய வந்து யான் உன்னை இம் மணிபல்லவத்திற்கு அழைத்து வந்தது நின்னை இவ்வாறு மயக்குவித்தற்கன்று காண்; மன்னா நின் தன் மறு பிறப்பு உணர்த்தி அந்தரத் தீவினும் அகன் பெரும் தீவினும் நின் பெயர் நிறுத்த-வேந்தே! உன்னுடைய பழம்பிறப்பை உணர்வித்து இரண்டாயிரம் சிறுதீவுகளிடத்தும் அகன்ற நான்கு பெருந்தீவுகளிடத்தும் நின்னுடைய புகழை நிலைநிறுத்தற் பொருட்டே காண்; நீள் நிலம் ஆளும் அரசர் தாமே அருள் அறம் பூண்டால் புரை தீர்த்தற்கு பிறபொருளும் உண்டோ-நெடிய நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்கள் தாமே புத்த பெருமான் திருவாய்மலர்ந்தருளிய அருளறத்தை மேற்கொண்டு ஒழுகுவாராயின் பின்னர் இவ்வுலகத்தில் குற்றம் தீர்த்தற்குரிய பொருள் பிற உண்டாகுமோ? யாண்டும் அருளறமே தழைத்தோங்குவதாம்; அறம் எனப்படுவது யாது என கேட்பின் மறவாது இதுகேள்-அவ் வருளறந்தான் எத்தகையதென்று வினவுவாயாயின் கூறுவன் மறவாமல் இதனைக் கேட்பாயாக. அஃதாவது,மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் என-உடம்பொடு நிலைபெற்று வாழும் உயிர்களுக்கெல்லாம். இன்றியமையாது வேண்டப்படுவன உணவும் உடையும்உறைவிடமும் ஆகிய இம் மூன்றுமே யன்றி இன்றியமையாததாகக் கண்ட பொருள் பிறிதொன்றுமில்லை ஆதலால் இவற்றை அவ்வுயிர்களுக்கு வழங்குவதே அருளறம் எனப்படுவது காண் என்று மணிமேகலை அறிவுறுத்தா நிற்ப; என்க.

(விளக்கம்) அருள் என்னும் அன்பீன் குழவீ பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு (குறள், 757) என்பது பொய்யா மொழி யாகலின் பொருட் செல்வம் மிக்க அரசரே அருளறத்தைப் பேணமுற்படின் அவ்வறம் முட்டுப்பாடின்றி நடைபெறுவதாம்; மேலும் அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்பது முதுமொழியாகலின் குடி மக்களும் அருளறத்தை அவாவி மேற்கொள்வர். இங்ஙனம் நிகழின் உலகின்கண் துன்பமே இல்லையாய் இம் மண்ணுலகமே பொன்னுலகாய்த் திகழ்வதாம் என ஈண்டு மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் அறிவுறுத்தனள் என்க.

புண்ணியராசன் கூற்று

231-239: காவலன்.......தானென்

(இதன் பொருள்) காவலன் உரைக்கும்-அது கேட்ட புண்ணியராசன் மணிமேகலைக்குக் கூறுவான்; என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் நல்நுதல் உரைத்த நல்அறம் செய்கேன்-என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாட்டிலும் நல்ல நெற்றியையுடைய நீ கூறிய இவ்வருளறத்தையான் நன்கு செய்வேன், மேலும்; என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான் என்-என்னுடைய பழம் பிறப்பினை அறிவுறுத்தி என்னை நீ இப்பொழுது வேறொரு அறிவாளனாகப் படைத்துவிட்டாய், இவ்வாற்றால் எனக்குத் தாயும் தெய்வமும் ஆகின்ற உன்னைப் பிரிந்து யான் என்னூருக்குச் செல்ல ஆற்றுகிலேன் யான் என் செய்கோ என்று வருந்த; அணி இழை-அது கண்ட மணிமேகலை அவ்வரசனை நோக்கி; புன்கண் கொள்ளல்-வேந்தே! நீ இவ்வாறு துன்புறாதேகொள்; நின் மன் பெரும் நல் நாடு-அரசே! நின்னை அரசனாகவுடைய நினது பெரிய நல்ல நாட்டிலுள்ள உயிர்களெல்லாம்; நீ போந்ததற்கு இரங்கி வாய் எடுத்து அழைக்கும் நீ இங்கு வந்ததற்கே பெரிதும் வருந்தி உன்னை வாயால் கூப்பிட்டு அழைக்குங்காண் ஆதலால்; வங்கத்து ஏகுதி-நீ இங்குக் காலந்தாழ்த்தாது நின் மரக்கலத்திலேறி நின் நாட்டிற்குச் செல்வாயாக; வஞ்சியுள் செல்வன் என்று அந்தரத்து எழுந்தனள்-யானும் வஞ்சிமா நகரத்தினுள் செல்லுவேன் காண் என்று சொல்லி வானத்திலே எழுந்து பறந்தனள் என்பதாம்.

(விளக்கம்) ஆயினும் எண்ணிடைச் சொல் நன்னுதல்: முன்னிலைப் புறமொழி சிற்றறிவுடைய என் பழம் பிறப்பையு முணர்த்தி அருளறத்தையும் அறிவுறுத்து என்னைப் பேரறிஞனாய் அறவோனாய் நீ புதுவோனாகவே படைத்துவிட்டனை ஆதலால் எனக்குத் தெய்வமும் தாயும் போல்வாயாகிய உன்னைப் பிரிந்து செல்லலாற்றேன் என்று இப் புண்ணியராசன் வருந்துவது அவனது பேரன்பை நன்கு புலப்படுத்துகின்றது. ஈண்டுக் கம்பர் காவியத்தில் இராமனைப் பிரியலாற்றாது வருந்திய குகன் என்னும் வேடன் கூறுகின்ற

கார்குலாம் நிறத்தான் கூறக் காதல னுணர்த்து வானிப்
பார்குலாஞ் செல்வ நின்னை யிங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யா னின்னலி னிருக்கை நோக்கித்
தீர்கிலே னான தைய செய்குவ னடிமை யென்றான்
             (கம்ப-அயோ. கங்கை-44)

அன்புரையைப் பெரிதும் ஒத்துளது.

புன்கண்-துன்பம் நின் நன்னாடு நின்னை வாயால் கூவியழைக்கு மாதலால் நீ ஏகுதி என்றவாறு. புகார் கடல் வயிறு புக்கமையின் வஞ்சியுள் செல்வன் என்றாள் என்க.

இனி, இக் காதையை அரசன், புகுந்து வணங்கிக் கேட்டு, இவன் யார் என்னக் கஞ்சுகன், ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி, வருவாய் என்று புகன்று எழுந்து இருந்து போகி வலங்கொண்டு பீடிகையைக் காண்டலும் அதனைத் தொழுது அவள் வலங்கொள்ள, அப் பீடிகை உணர்த்த, பணிந்து, போன்றது என்று ஏத்தி வலங்கொண்டு இன்னணமாக, இறைவனும் விட்டுப் புக்குக் கேட்டு எய்தி நினைந்து கள்ளாட்டிகழ்ந்து சாற்றி, விளைந்தது என்று கூற, மந்திரி சனமித்திரன் தொழுதேத்தி மன்னவ மதிமாறோர்ந்தனை என்ற முதுமொழி கூற. முதல்வன் கேட்டு, காத்தில் நின்கடன் என்று கூறிக் கூஉய்க் கரை யெய்தி ஏறினன். அக்கலம் சென்று சார்ந்திறுத்தலும் பூங்கொடி பொருந்தி மகிழ்வெய்தி வலஞ்செய்து, பீடிகை இது எனக் காட்ட மன்னவன் வலங்கொண்டு ஏத்தினன்; அவனுக்குப் பீடிகை பிறவியைக் காட்ட, மன்னவன், மறந்து வாழேன் என்று ஏத்தி மணிமேகலையுடன் எழுந்து சென்று இருப்ப, தெய்வதம் கண்டு உவந்தெய்தி, பெரியோய், வந்தனை; உடலென்பு இவைகாண், என்புமிவைகாண்; காணாய்; கொன்றாய்; கொண்டு அரசன் ஆயினை, மடவரனல்லாய், நகர் கடல் வயிறு புக்கது, காரணங்கேளாய்; மணிமேகலா தெய்வம் சாபமிட்டனள்; இது பட்டது; உலக மன்னவன் போயினன்; தாயரும் புக்கனர்; கேட்க உருகுவையாயின். வஞ்சியுட்கேட்பை என்று தெய்வம் போயபின் மன்னவன் இரங்கிப் படிவம் நோக்கி மயங்க, மணிமேகலை எழுந்து, கண்டதுஇல் என, காவலன் உரைக்கும்; அங்ஙனம் உரைப்பவன், நீங்கலாற்றேன் யான் என. அணியிழை, ஏகுதி; செல்வன் என்று எழுந்தனளென இயைத்திடுக.

ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar