பதிவு செய்த நாள்
12
ஆக
2018
01:08
மடிப்பாக்கம்:மடிப்பாக்கம், சீதளா தேவி கோவிலில், இன்று ஆடி திருவிழா கோலாகலமாக நடக்க உள்ளது.சென்னை, மடிப்பாக்கம், குபேரன் நகர் விரிவு பகுதியில் ஸ்ரீ மகா சக்தி சீதளாதேவி கோவில்உள்ளது. பார்வதி தேவியின் அவதாரமாக, சீதளா தேவிக்கான கோவில், 2002ம் ஆண்டு குருஜி ராகவனால் நிர்மாணிக்கப்பட்டது. அவரே அக்கோவிலின் தலைமை அர்ச்சகராகவும் உள்ளார்.இக்கோவிலின் வடக்கு திசை நோக்கி, சீதளா அம்மன் அருள் பாலிக்கிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், 11வது ஆடித் திருவிழா இன்று நடக்கிறது.காலை, 8:00 மணிக்கு மடிப்பாக்கம், காஞ்சி, காமாட்சி நகர் மெயின் ரோட்டில் உள்ள, லட்சுமி கணபதி கோவில் இருந்து, சீதளா சித்தர் தலைமையில், 108 பால்குட வைபவம் துவங்குகிறது.
அதைத்தொடர்ந்து, சீதளா தேவிக்கு, 17 வகையான திரவியங்களால் விசேஷ அபிஷேகமும், பால் குட அபிஷேகமும் நடக்கிறது. பிற்பகல், 12:00 மணிக்கு கூழ் படைத்தல் நிகழ்ச்சியும், அருளாட்டம், மகா தீபாராதனை, அருளாசி நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு, மூலவர் சீதளாதேவிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வீதி உலா துவங்குகிறது. இரவு, 10:00 மணிக்கு தோள் குலுங்க அருளாட்டம், மங்கள ஆரத்தியுடன் நிறைவு பெறுகிறது. இரவு, 7:00 மணிமுதல், மடிப்பாக்கம், ஹரிஹரன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.