செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
இரவு 11.30 மணிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். ஊஞ்சல் தாலாட்டில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல், தாலாட்டு பாடல் பாடினர். லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக ஆடி அமாவாசையில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். இதனால், கோவிலுக்கு செல்லும் பிரதான சாலைகளிலும், கோவில் பகுதியிலும் கடும் கூட்ட நெரிசல் இருக்கும். பக்தர்கள் வசதிக்காக, டிஜிட்டல் ஸ்கிரீன்களில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். பக்தர்கள் ஆங்காங்கே இருந்தபடியே ஊஞ்சல் உற்சவத்தை கண்டு தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் வழக்கத்தை விட நெரிசல் குறைவாக இருந்தது.