காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணவல்லி அம்பிகா சமேத காளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காளையார்கோவில் சொர்ணவல்லி அம்பிகா சமேத காளீஸ்வரர் கோயிலின் ஆடிப்பூர உற்ஸவ திருவிழா கடந்த ஆக. 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடைபெறும் விழாவின் 8 ம் நாளான நேற்று அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சிறிய தேருக்கு எழுந்தருளினார். காலை 9:30 மணிக்கு பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கியபடி தேரை இழுக்கத்துவங்கினர். ஆக., 14 ல் மாலை 7:00 மணிக்கு தபசுக்காட்சியும், ஆக., 15ல் காலை 11:15 முதல் பகல் 12:00 மணிக்குள் சொர்ணவல்லி – காளீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஆக., 16ல் மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீர் திருவிழா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ செய்துள்ளனர்.