திருப்பதி: திருமலை திருப்பதி சீனிவாசப்பெருமாள் கோவிலில் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிந்தா கோஷம் முழுங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அஷ்ட பந்தனம் எனப்படும் சூரண மருந்து தயார் செய்யப்பட்டு பீடங்களில் சாத்தப்பட்டது. ஆனந்த நிலையம் என்றழைக்கப்படும் மூலவர் சீனிவாசப்பெருமாள் குடிகொண்டு இருக்கும் தங்க விமானம் சீர்செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது.தங்க விமானத்தை வலம்வரும்போது விமானத்தில் வெள்ளி திருவாட்சிக்குள் இருக்கும் பெருமாளை அனைவரும் வணங்குவர். மகர தோரணம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளி திருவாட்சி புதிதாக செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் உள்ளே நுழைந்ததும் காணப்பெறும் துவஸ்தம்பம் என்றழைக்கப்படும் கொடிமரத்தில் தங்கம் பூசப்பட்டு மேலும் மெருகேற்றப்பட்டு உள்ளது. இப்படி கும்பாபி ஷேகத்திற்கு தேவையான அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12மணி வரை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு மகா அபிஷேகம் செய்யப்படும் நேரத்தில் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கும்பத்தில் இருந்து ஜீவசக்தியை மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.