வில்லியனுார்:திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு காமாட்சியம்மனுக்கு ஒரு லட்சம் வளையல் அணிவிக்கும் விழா நடந்தது. வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில், ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற விழாவில், காலை 7;00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் வீதியுலா நடந்தது. இதில் முக்கிய விழாவாக கடந்த 12ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழாவும், நிறைவு நாள் விழாவாக காமாட்சியம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணியும் விழா நடந்தது. வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் தலைமையில் கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.