பதிவு செய்த நாள்
16
ஆக
2018
04:08
கடமையை பெரிதாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சனி, சுக்கிரனால் நற்பலன் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்களின் ஆற்றல் மேம்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும். குருபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மன உளைச்சலையும், வீண் பகையையும் உருவாக்குவார்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் கருத்துவேறுபாடு உருவாகலாம். வெளியுலகத்தில் நீங்கள் பெருமைக்குரியவராக பேசப்பட்டாலும் வீட்டிற்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. புதனால் ஆக. 28 வரை சில பிரச்னை குறுக்கிடலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சிலருக்கு பொருள் இழப்பும் ஏற்படலாம். ஆக. 31க்கு பிறகு வீட்டுக்கு தேவையான பணவசதியும் கிடைக்கப் பெறுவீர்கள். செப். 11,12ல் முயற்சியில் வெற்றி உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
செப். 2,3ல் உறவினர்கள் வருகையும் அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். ஆனால் அவர்கள் வகையில் ஆக.17,18 செப்.13,14ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குறிப்பாக செப். 6,7ல் அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருந்தாலும் சுக்கிரனால் சிறப்பான பலன் காண்பர். பணியிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆக.31, செப்.1ல் எதிர்பாராத நற்பலன் உண்டாகும். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைப்பது நல்லது. புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு,வீண் மனக்கவலை முதலியன செப். 14க்கு பிறகு மறையும். அரசு ஊழியர்கள் வேலையில் சற்று கவனமுடன் இருக்கவும். குறிப்பாக மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் பணியில் ஈடுபடவும்.
வியாபாரிகள் தொழிலில் ஏற்ற இறக்கத்தை சந்திப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.
அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியதிருக்கும். ஆக. 21,22,23ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். செப். 4,5,8,9,10ல் பண விரயத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. செப்.14க்கு பிறகு அரசு வகையில் சலுகை எதிர்பார்க்க வேண்டாம். கணக்கு, வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது அவசியம். சிலர் பகைவர் வகையில் தொல்லைக்கு ஆளாகலாம்.
கலைஞர்கள் வாழ்வில் நற்பெயர், புகழ் தொடர்ந்து கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலருக்கு விருது, பாராட்டு வந்து சேரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். மாணவர்கள சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆனால், முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். விவசாயம் கிழங்கு வகைகள், நிலக்கடலை, மற்றும் கரும்பு, எள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தைக் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை.
பெண்களுக்கு சுக்கிரனால் பொன், பொருள் சேரும். கணவன், பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஆக.31க்கு பிறகு சமுகமதிப்பு உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய தோழிகளின் அறிமுகம் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஆக.24,25ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். பொருளாதார வளம் மேம்படும். செப்.14க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையில் பொறுமை தேவை.
* நல்ல நாள்: ஆக. 21,22,23,24,25,31, செப்.1,2,3,6,7,11,12
* கவன நாள்: ஆக.26,27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,7
* நிறம்: வெள்ளை, கருப்பு
பரிகாரம்:
● தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● ஞாயிறன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
● சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை