நாகர்கோவில்: ஆவணி ஞாயிறு தினத்தையொட்டி நேற்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் நாகருக்கு பால் ஊற்றி வழிபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் நாகராஜா கோயில் உள்ளது. நாகரை மூலவராக கொண்ட இந்த கோயிலின் மூலஸ்தானம் இன்னும் ஓலைக்கூரையின் கீழ்தான் அமைந்துள்ளது. இங்கு பாம்புகள் நடமாட்டமும் உண்டு. இங்குள்ள புற்று மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.இப்படி சிறப்பு பெற்ற கோயிலில் ஆவணி ஞாயிறு தினத்தில் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன்படி நேற்று அதிகாலை 4:00 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.