பதிவு செய்த நாள்
20
ஆக
2018
11:08
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், நுாக்காலம்மன் கோவிலில், 31ம் ஆண்டு தீ மிதி திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற, நுாக்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் திருவிழா நடக்கும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காலை, 8:00 மணிக்கு நங்கையர்குளத்தில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணிப் பொங்கல் வைத்து, படையலிட்டனர்.மாலை, 6:00 மணிக்கு, விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும், மலரால் அலங்கரித்த அம்மன் குடத்தை சுமந்த படியும் கோவிலருகே தீ குண்டத்தில் இறங்கி, தீ மிதித்தனர். இரவில் பூங்கரகம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரை, கரக்காட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக புஷ்ப விமான பல்லக்கில் அமர்ந்து, வீதியுலா வந்த அம்மனை, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.