பதிவு செய்த நாள்
21
ஆக
2018
10:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கு பட்டாபிஷேகம் இன்று (ஆக.,21) இரவு 7:30 முதல் 7:54 மணிக்குள் நடக்கிறது. விழா ஆக.,9 கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் ஆக.,14 வரை கோயிலுக்குள் 2 ம் பிரகாரத்தில் இரவு சந்திரசேகரர் புறப்பாடு நடந்தது.
ஆக.,15 கருங்குருவிக்கு உபதேசம் அளித்தல், 16- நாரைக்கு முக்தி கொடுத்தல், 17- மாணிக்கம் விற்றல், 18- தருமிக்கு பொற்கிழி அளித்தல், 19- உலவாக் கோட்டை அருளல், 20- பாணனுக்கு அங்கம் வெட்டியது போன்ற திருவிளையாடல் லீலைகள் நடந்தன. இன்று வளையல் விற்ற லீலை நடக்கிறது. மாலை 4:00 மணியளவில் மேலமாசி வீதி, மேலக்கோபுர தெரு, தானப்ப முதலியார் அக்ரஹாரம், வடக்கு ஆவணி மூலவீதியில் சுவாமி, அம்மன் தங்கப்பல்லக்கு வாகனத்தில் எழுந்தருள்வர்.
கோயிலுக்கு வந்ததும் இரவு 7:30 மணிக்கு மேல் 7:54 மணிக்குள் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. சுந்தரேஸ்வரரிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாவது பிரகாரம் வலம் வந்து சுந்தரேஸ்வரர் கரத்தில் சேர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஆக.,22) நரியை பரியாக்கியது, ஆக.,23 பிட்டுக்கு மண் சுமத்தல், ஆக.,24 விறகு விற்றல் லீலைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.