பதிவு செய்த நாள்
30
ஆக
2018
01:08
நரசிங்கபுரம்: பதினாறு ஆண்டுகளுக்கு பின் நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள், மாரியம்மனை தரிசித்தனர். ஆத்தூர் அருகே, நரசிங்கபுரத்தில், மாரியம்மன், செல்லியம்மன் கோவில் தேர்த்திருவிழா, 2002ல் நடந்தது. ஊர் முக்கிய பிரமுகர்கள் இடையே, முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக பிரச்னை எழுந்தது. தொடர்ந்து, விழா நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டதால், 2015 ஆக., 10ல், மாரியம்மன் கோவில் பூட்டப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலிருந்த பொருட்களை மீட்டு, பூசாரி நியமித்து, கோவிலை திறந்தனர். நடப்பாண்டு, திருவிழா நடத்த அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். கடந்த, 14ல், மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல், சக்தி அழைத்தலுடன் விழா தொடங்கியது. நேற்று மதியம், 20 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் தேரை, வடம் பிடித்து, திரளான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். 16 ஆண்டுகளுக்கு பின், தேரோட்டம் நடந்ததால், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேர் சென்றதால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆத்தூர் புறவழிச்சாலையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இன்று, செல்லியம்மன் தேர்த்திருவிழா நடக்கிறது.
* பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பெரியகிருஷ்ணாபுரம், மத்தூரில், மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று காலை, பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல், ஆடு, கோழி பலியிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, மாவிளக்கு எடுத்து ஊர்வலம் நடந்தது. மாலை, தேரோட்டம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துவந்தனர். இன்றிரவு, கரகாட்டம், நையாண்டி மேளம், வாண வேடிக்கையுடன், மாரியம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை மதியம், 1:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது.