பதிவு செய்த நாள்
12
செப்
2018
10:09
ராசிபுரம்: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவை யொட்டி, சேலம், கொங்கணாபுரத்தைச் சேர்ந்த,ஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீமன்நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், டன் கணக்கில் பூமாலை அனுப்பப்பட உள்ளது.திருமலை திருப்பதியில் நாளை (செப்., 13ல்) முதல், பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து, மலர்களை மாலைகளாக தொடுத்து அனுப்பும் பணி, வாசவி வித்யாலயா பள்ளி கலையரங்கில், நேற்று (செப்., 11ல்) காலை, 8:00 மணிக்கு துவங்கியது.இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள், மலர்களை மாலைகளாக கட்டினர்.சாமந்தி, ரோஜா, மல்லிகை, துளசி, அரளி, மரிக்கொழுந்து, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட மலர்களை மாலைகளாக தொடுத்தனர். இதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா வில் இருந்து, 5 டன் மலர்கள் வாங்கி வரப்பட்டுள்ளன.இத்துடன், கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலைகள், இளநீர் குலைகள், கூந்தப்பனை, மாங்காய் கொத்துகள் லாரி மூலம் திருப்பதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை பகுதியில் இருந்து, பிரம்மோற்சவ விழாவிற்காக டன் கணக்கில் பூ அனுப்பப்படுகிறது.
நேற்று (செப்.,11ல்) முதற்கட்டமாக, 600 கிலோ பூக்கள், பழநி மாரியம்மன் கோவிலில் இருந்து திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. இதற்கான சபா செயலர் மருதசாமி கூறியதாவது: இங்கிருந்து வாடாமல்லி, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அனுப் பியுள்ளோம். தொடர்ந்து, 10 டன் அனுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.