பதிவு செய்த நாள்
12
செப்
2018
10:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிய தீர்த்த கிணறு தயாரான நிலையில், பக்தர்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்,கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்என்பது ஐதீகம். விடுமுறை நாளில் 10 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் நீராடுவதால், கோயிலுக்குள் 1 முதல்6 வரை (மகாலெட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம்) தீர்த்தங்கள் குறுகிய பாதையில் உள்ளதால் நெரிசலில்
பக்தர்கள் அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க 2 முதல் 6 வரையிலான தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் மூடி விடுவதால், 17 தீர்த்தம் மட்டும் நீராடி பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ஆன்மிக மரபு மீறி தீர்த்தம் மூடக்கூடாது, ஆகையால் மூடப்படும் தீர்த்தத்திற்கு பதிலாக கோயிலுக்குள் வேறு இடத்தில் புதிய தீர்த்த கிணறு அமைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.அதன்படி 26.10.18 அன்று கோயில் 2ம் பிரகாரத்தில் பூமி பூஜையுடன் 6 புதிய தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டு, கடந்த இரு மாதத்திற்கு முன்பு 100 சதவீதம் பணி முடிந்த நிலையில்,பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளது.
கோயிலில் 17 தீர்த்தங்களில் மட்டுமே பக்தர்கள் நீராடும் நிலை உள்ளதால், புதிய தீர்த்த கிணறுகளை திறக்க இந்து அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.