திருப்புத்தூர்:பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கோயிலில் சந்தனக்காப்பில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும், நேற்று (செப்., 11ல்) வரை காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. ஆறாம் நாளை முன்னிட்டு கஜமுகா சூரசம்ஹாரம் நடந்தது. இன்று (செப்.,12ல்) காலை 9:00 மணியளவில் சுவாமி தேர் எழுந்தருளி, வடம் பிடித்தல் மற்றும் மாலை 4:00 மணிக்கு விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேரோட்டம் நடைபெற்றது. மேலும் மாலை 4:30 மணி முதல் மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலிப்பார். செப்., 13ல் விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி, மதியம் முக்குருணி மோதக கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் சுவாமிகள் திருவீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடைகிறது.