மதுரை: மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. முக்கிய தெருக்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 18 படி கொழுக்கட்டை படைக்கப்பட்டது. தல்லாகுளம் இரட்டை விநாயகர்,பொதுப் பணித்துறை யோக விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
* திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ் தானத்தில் மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில் உற்சவர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் வழங்கப்பட்ட களிமண் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் மண்டபங்களில் எழுந்தருளிய விநாயகர்களுக்கு கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
* திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் செப்., 9 முதல் லட்சார்ச்சனை நடந்தது. யாகசாலை பூஜை நேற்று பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர், உற்சவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.
* பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில், மருதுபாண்டியர் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
* மேலூர் கஸ்தூரிபாய்காந்தி நகர் விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா 2 நாட்கள் நடந்தன. முதல் நாள் திருவாசகம் முற்றோதல், 2ம் நாள் திருவிளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
* பேரையூர் பேரையூர், டி.கல்லுபட்டியில் உள்ள அனைத்து கோயில்களிலும் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பேரையூரில் சிலைகள் முருகன் கோயில் தெப்பத்தில் கரைக்கப்பட்டன.