பதிவு செய்த நாள்
14
செப்
2018
12:09
விதியை மதியால் வெல்லும் சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் கடந்த மாதம் போலவே செவ்வாய், கேது, சுக்கிரன் நற்பலன் தரும் நிலையில் இருக்கின்றனர். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. அக்.4ல் குருபகவான் 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். செவ்வாய் மற்றும் கேதுவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் கவலை முதலியன அக்.3க்கு பிறகு மறையும். சுக்கிரனால் குடும்பத்தில் சுகவாழ்வு அமையும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அக்.6,7ல் பெண்களால் நன்மை காண்பீர்கள். புதனால் அக்.3க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. அவ்வப்போது பிரச்னை உருவாகி மறையும்.
அரசுப் பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். இருப்பினும் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும்.
அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். செப்.29,30,அக்.1ல் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். ராகுவால் பணிவிஷயமாக வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம். அக்.3க்கு பிறகு அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். தொழில், வியாபாரத்தில் முக்கிய பொறுப்புகளை அனுபவசாலிகளின் கையில் ஒப்படையுங்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூடுதல் லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய வியாபார முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிக முதலீடு செய்ய வேண்டாம். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வலிமை கேதுவால் பெறுவீர்கள். அக்.4,5,8,9ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆனால் செப்.20,21,அக்.17ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ் வந்து சேரும். ரசிகர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு துணைநிற்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் வளர்ச்சியுடன் காணப்படுவர். எதிர்பார்த்த பதவி வந்து சேரும். மக்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்கள் கல்வியில் சீரான வளர்ச்சி காண்பர். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றவும். விவசாயிகள் கூடுதல் மகசூல் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக பயறு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் காணலாம். கால்நடை மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டாகும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆனால் சுக்கிர பலத்தால் மனதில் உற்சாகம் குறையாது. நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சீரான வளர்ச்சி பெறுவர். சக ஊழியர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து போகவும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். அக்.10,11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். செப்.22,23,24ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
* நல்ல நாள்: செப்.20, 21, 22, 23, 24, 29, 30, அக்.1, 2, 3, 6, 7, 10, 11, 17
* கவன நாள்: செப்.25, 26 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 9 நிறம்; சிவப்பு, வெள்ளை
பரிகாரம்:
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
● குலதெய்வத்தை வழிபட்டு பாசிப்பயறு தானம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை