பதிவு செய்த நாள்
14
செப்
2018
12:09
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவிலில் ஏராள மானோர் சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவிலில், நேற்று (செப்.,13ல்) அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மூலவருக்கு அமெரிக்க டைமண்ட் பதிக்கப்பட்ட கிரீடமும், தங்க அங்கியும் அணிவிக் கப்பட்டது. உற்சவருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலையில் இருந்து, இரவு வரை, ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. இரவில், வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர் சம்பத் சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி வெங்கடேசன் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.
அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின், முதல்வர் நாராயணசாமி கூறும்போது, மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் அன்னதானம் திட்டம் துவக்கப்பட்டு, நல்லமுறையில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. அன்னதானம் வழங்குவது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற கோவில்களிலும் அன்னதான திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார்.