மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குறை தீரும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2018 12:09
சிந்தனையில் புதுமை படைத்த மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மைகள் கிடைக்கும் காரணம் அக்.3ல் புதனும், அக். 4ல் குரு பகவானும் சாதகமான இடத்திற்கு வருகின்றனர். அதுவரை தடைகள் குறுக்கிட்டாலும் உங்களின் தீவிர முயற்சியால் எடுத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கத்தில் குறைவிருக்காது. சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சமூகத்தில் மதிப்பு சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 10ம் இடமான துலாம் ராசியில் இருந்து பிரச்னை தந்து கொண்டிருக்கிறார். இந்த நிலை அக்.4க்கு பிறகு மறையும். அப்போது குருபகவான் 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு வருவதால் குறையனைத்தும் தீரும். குடும்பத்தினரிடம் மென்மையான அணுகு முறை நல்லது. வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்.3க்கு பிறகு பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். குறிப்பாக அக்.4,5ல் உதவிகரமாக செயல்படுவர்.
பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அக்.3 வரை வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். அதன் பிறகு சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அக்.10,11 அனுகூலமான நாட்களாக அமையும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டிய திருந்தாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். அதிக முதலீடு தேவைப்படாது. குறைந்த முதலீட்டில் நிறைந்த உடல் உழைப்பில் அறிவுப்பூர்வமாக செயல்பட்டு அதிக ஆதாயத்தை அடைவீர்கள். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிரி தொல்லையை சந்திக்க நேரிடலாம். ராகு,சனி பகவானால் பொருளாதார இழப்பு வரலாம். வீண் அலைச்சலை சந்திக்கலாம்.
சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழல் ஏற்படலாம். அக்.3 வரை சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பண இழப்பிற்கு ஆளாவர். எனவே நண்பர்களின் விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். அக். 2,3 ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். கலைஞர்களுக்கு மறைமுகப் போட்டிகள் குறுக்கிடும். அதனால் அவப்பெயர் உருவாகலாம். புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் உருவாகும். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சுமாரான நிலையில் இருப்பர். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். எனவே யாரிடமும் அனாவசியமாக நெருங்கி பழக வேண்டாம். அக்.3க்கு பிறகு நல்ல முன்னேற்றம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றி கிடைக்கும். குருபகவானின் அருளால் அக்.4க்குப் பிறகு தரத்தேர்ச்சி உண்டாகும். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணை நிற்கும்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் உழைப்புக்கு தகுந்த வருமானம் வரும். அக்.3க்கு பிறகு நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். பயறு வகைகள் மற்றும் மஞ்சள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் விழிப்புடன் செயல் படுவது அவசியம். செப்.25,26ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் கிடைக்கப் பெறலாம். செப்.20,21ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், வீண் மனக்கவலை முதலியன அக்.3க்கு பிறகு மறையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். பதவி உயர்வையும் சிலர் எதிர்பார்க்கலாம். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.