பிறர் குறையை கூட நிறையாக கருதும் கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் புதன் அக்.3 வரையும், குரு அக்.4 வரையும் நற்பலன் கொடுப்பர். அதோடு சுக்கிரன், சனி, ராகு மாதம் முழுவதும் நற்பலன் தர காத்திருக்கின்றனர். சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத்தேவை பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். ராகு முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். உங்கள் ஆற்றல் மேம்படும்.
தற்போது நன்மையளிக்கும் குருபகவான் அக்.4ல் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நற்பலன் தர முடியாது. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டம், மனசஞ்சலம் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி குடியிருக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
பணியாளர்கள் புதனால் சிறப்பான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அக்.12,13,14 ஆகிய நாட்களில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
அக்.3க்கு பிறகு வேலைப்பளு அதிகமாகும். இருப்பினும் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் இடையூறுகளை முறியடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகத்திலும் ஆதாயம் கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் இல்லை என்பதால் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். செப்.20,21,25,26, அக்.17ல் சந்திரனால் இடையூறுகள் குறுக்கிடலாம். அக்.4,5ல் எதிர்பாராத வகையில் வருமானம் வரும். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பகைவர்கள் சரண் அடையும் நிலை உண்டாகும்.
கலைஞர்களுக்கு சகபெண் கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களின் பணப்புழக்கத்திற்கு குறையிருக்காது. மாணவர்களுக்கு திருப்திகரமான காலமாக அமையும். கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அக்.3க்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். ஆனாலும் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பின் தங்கியநிலை உண்டாகாது. விவசாயிகள் சீரான நிலையில் இருப்பர். காய்கறி, கீரை வகைகள், பழவகைகள் ஆகியவற்றில் நல்ல மகசூல் காண்பர். கால்நடைச் செல்வம் பெருகும். வழக்கு, விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
பெண்களுக்கு இது சிறப்பான காலகட்டம். கணவர் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ்வில் உயர்வு பெறுவர். செப்.27,28ல் ஆடை, ஆபரணங்கள் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். அக்.6,7ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். தோழிகளால் உதவி கிடைக்கும். அக்.3 க்கு பிறகு குடும்பத் தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமை தேவை. அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவது நல்லது.