பதிவு செய்த நாள்
14
செப்
2018
06:09
மும்பை: மஹாராஷ்டிராவில், 10 நாட்கள் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று (செப்., 13ல்) கோலாகலமாக துவங்கியது. மும்பை நகரில் மட்டும், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., -சிவசேனா, கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று (செப்., 13ல்) கோலாகலமாக துவங்கியது. நேற்று துவங்கிய இந்த விழா, இம்மாதம் 23ல் முடிவடைகிறது.
மும்பை, புனே, நாசிக், நாக்பூர் உட்பட, அனைத்து மாவட்டங்களிலும், சாலைகளில் வண்ணமயமான பந்தல்கள் அமைத்து, பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து, மக்கள் வழிபாடு நடத்தினர்.
இறை வழிபாடு மட்டுமின்றி, ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம், அன்னதானம் உள்ளிட்டவைகளும் நடத்தப்பட்டன.
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி, திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட, பலரது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து, பூஜைகள் நடந்தன.
இந்த விழாவுக்காக ஆயுதப் படை போலீசார், மாநில ரிசர்வ் போலீஸ் படை, கலவர தடுப்பு படை, வெடிகுண்டு நிபுணர்கள் குழு ஆகியோர், மாநிலம் முழுவதும், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மும்பை நகரில் மட்டும் 15 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மஹாராஷ்டிராவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை, நேற்று (செப்., 13)ல் கோலாகலமாக நடந்தது.
* 580 கிலோ லட்டு!: தெலுங்கானா மாநிலம், ஐதராபாதின், பிலிம் நகரில், ஒரு கோயிலில் உள்ள விநாயகருக்கு, 580 கிலோ எடையுள்ள லட்டு படைக்கப்பட்டது.
இந்த லட்டை, ஆந்திர மாநிலம், கிழக்கு, கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த, "சுருச்சி புட் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த லட்டில், 220 கிலோ சர்க்கரை, 145 கிலோ நெய், 175 கிலோ கடலை மாவு, 25 கிலோ முந்திரி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்த லட்டை தயாரிக்க, 3 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. பூஜை முடியும் மூன்றாவது நாளில், பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும். கடந்த ஆண்டு, 500 கிலோ எடையுள்ள லட்டை, சுருச்சி புட் நிறுவனம் தயாரித்தது.