பதிவு செய்த நாள்
15
செப்
2018
02:09
ஓசூர்: ஓசூர் பகுதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை, நாளைக்குள் கரைக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளதால், இந்து அமைப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், விநாயகர் சதுர்த்தியின் போது, பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 10 நாட்கள் வரை பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஆண்டுதோறும், பல்வேறு கெடுபிடிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் விதித்தாலும், சிலைகளை பூஜை செய்து கரைக்க வழங்கப்படும் நாட்கள் மட்டும்குறைக்கப் படுவதில்லை.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓசூர் உட்கோட்டத்தில் உரிய அனுமதி பெற்று, 534 சிலைகளும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், 363 சிலைகளும் நேற்று முன்தினம் (செப்.,13ல்) பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இவற்றை, 10 நாட்கள் வரை பூஜை செய்த பின் கரைக்க, பல்வேறு இந்து அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், ஐந்து நாட்களுக்குள் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மேற்கோள் காட்டி, ஓசூர், தேன்கனிக் கோட்டை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என, ஆர்.டி.ஓ., விமல்ராஜ் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேற்று (செப்., 14), முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதலில் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு, அதிருப்தியில் சென்றனர். ஓசூரில் நாளை (செப்., 16), தேன்கனிக் கோட்டை பகுதி யில் வரும், 17 ல் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்ற. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், ஓசூருக்கு பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர்.