பதிவு செய்த நாள்
16
செப்
2018
12:09
மதுரை: விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று 228 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூன்று முதல் ஒன்பது அடி உயரமுள்ள 228 விநாயகர் சிலைகளை, கீழமாசி வீதி மொட்டை விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்தனர். அங்கு பூஜை நடந்தது. இந்து முன்னணி மாவட்டத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் ஊர்வலத்தை மாலை 5:15 மணிக்கு துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அழகர்சாமி, இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விளக்குத்துாண், தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, சிம்மக்கல், திருமலைராயர் படித்துறை வழியாக இரவு 9:35 மணிக்கு வைகை கல்பாலத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. இரவு 7:10 முதல் 7:25 மணிவரை மிதமான மழை பெய்தது. இதை பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் பக்தர்கள் ஊர்வலத்தை தொடர்ந்தனர். தெற்குமாசி வீதியில் சிறிது நேரம் நின்று செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர்,ஏற்கனவே பல சிலைகள் முன்னால் சென்றுவிட்டன. தடையின்றி தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும்,எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.