காரைக்குடி:ரசாயனம் கலந்து செய்யப்படும் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வந்ததால் அவை மாசுபட்டு வந்தது. இவற்றை தவிர்க்கும் வகையில் நடப்பாண்டில் இயற்கைக்கு கேடு விளைவிக்காக விதை விநாயகர் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பபட்டு வைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே உள்ள பாலையூர் கலைவாணர் கால்பந்து கழகம் சார்பில் முளைப்பாரி பிள்ளையார் உருவம் வடிவமைக்கப்பட்டது. களிமண்ணில் நெல்லை ஒட்டி, களிமண் கரையாதபடி வைக்கோல் பிரியை சுற்றி 10 அடி பாரி பிள்ளையார் வடிவமைக்கப்பட்டது. நாற்றுகள் வளர்ந்த நிலையில் பச்சை பசேல் என காட்சி தருகிறார் இந்த பாரி பிள்ளையார். கால்பந்து கழக உறுப்பினர் பாண்டியராஜ் : இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, மீன் மற்றும் பறவைகளுக்கு இரை தரக்கூடிய பிள்ளையார் உருவங்கள் இந்த ஆண்டு வழிபாட்டுக்காக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாங்கள் நெல் நாற்று மூலம் பாரி பிள்ளையாரை உருவாக்கியுள்ளோம். முளைப்பாரி முறையில் இதில் உள்ள நாற்றுகள் விளைவிக்கப்படுவதால் பாரி பிள்ளையார் என்கிறோம்.குட்டி விவசாய முறையில் உருவாக்கி உள்ளோம். சிறுவர்களுக்கு விவசாயத்தின் பெருமை தெரிகிறது.இன்று இங்குள்ள மாரியம்மன் கோயில் ஊரணியில் இந்த பிள்ளையாரை கரைக்க உள்ளோம், என்றார்.