""எவ்வளவோ பக்தி சிரத்தையுடன் என் நாமத்தை ஜெபித்தபடி வீட்டிலிருந்து கோயிலுக்கு நடந்தே வந்தும் என்னைப் பார்க்க முடியவில்லை என்று வருத்தமா? ""இல்லை தாயே. நிச்சயமாக இல்லை. சினிமாவில் இருக்கும் ஒரு மூன்றாம் நிலை நடிகனிடம் சொல்லாமல் திடீரென போனால் கூட பார்க்க முடிவதில்லை... நீங்களோ இந்தப் பிரபஞ்சத்துக்கே ஈஸ்வரி. நினைத்ததும் வந்தேன் என்றால் உங்களைப் பார்க்க முடியுமா என்ன? அதுபோக இதோ நேரிலேயே வந்து விட்டீர்களே? கோயிலில் பெரும் கூட்டம். அதனால் உள்ளே செல்லவில்லை. கோயில் வாசலில் இருக்கும் பழம் விற்கும் பெண்ணின் வடிவில் இருந்தாள் பச்சைப்புடவைக்காரி.
""சரி உன் மனதிலுள்ள சந்தேகத்தைக் கேள் ""நாத்திகர்கள் கடவுளைக் காட்டினால் நம்புகிறோம் என அடம் பிடிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்? ""நீ யார் பதில் சொல்ல? சர்வதேச ஆத்திகர்கள் சங்கத்தின் தலைவனா? நீ எதற்கு நாத்திகர்களை நம்ப வைக்க வேண்டும்? காலம் வரும் போது நானே அவர்களை ஆட்கொள்வேன் என் முகம் தொங்கிவிட்டது. ""இருந்தாலும் கடவுளைக் காட்டினால் நம்புகிறேன் என்னும் வாதம் பல யுகங்களாக பூமியில் நிலவுகிறது. அதை இந்த மகான் எப்படி அகாக எதிர்கொள்கிறார் என்று பார்.”சென்னைக்கு அருகிலுள்ள ஒரு பள்ளியின் ஆண்டுவிழா நடந்து கொண்டிருந்தது. தலைமை விருந்தினராக சுவாமி சிவாச்சாரியார் வந்திருந்தார். பார் புகழும் மகான். அப்பழுக்கற்ற ஒழுக்க நெறியுடன் வாழ்பவர். அம்பிகையிடம் பேரன்பு கொண்டவர். அவர் பேசி முடித்ததும் முன் வரிசையில் இருந்த சிறுமி ஒருத்தி கை தூக்கினாள் - சுவாமிஜியிடம் கேள்வி கேட்க. உடனே மேடைக்கு அழைத்து வரப்பட்டாள். ""உன் பேர் என்ன தாயி?” அன்புடன் கேட்டார் சிவாச்சாரியார்.
""நிருபமா. சிக்ஸ்த் ஸ்டாண்டர்டு சி செக் ஷன்”
""கடவுளின் அருள் உனக்குப் பூரணமாகக் கிட்டட்டும். உன் கேள்வி என்னம்மா?”
""கடவுள். .. அதுதான் சாமி என் கேள்வியே. கடவுள் என்று யாருமே கிடையாது. மனுஷங்க கற்பிச்சிக்கிட்ட உருவங்களைத்தான் கோயில்ல வழிபடுறோம். இல்லாத கடவுளுக்காக நாம எதுக்கு சாமி நம்ம பொன்னான நேரத்தை வீணாக்கணும்? கடவுளைக் காட்டுங்க நம்பறேன்.”
அரங்கமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தலைமையாசிரியை நிருபமாவைச் சைகையாலேயே அதட்டினார். பள்ளியின் நிர்வாகி சிவாச்சாரியாரிடம் பணிவாகச் சொன்னார். ""சாமி நீங்க இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. விட்ருங்க.”
""விட்டா இந்தக் குழந்தைக்குக் கடைசி வரைக்கும் உண்மை தெரியாமப் போயிரும். பார்ப்போம்.”
""நான் யாரு கடவுளக் காட்ட? அந்த உமா மகேஸ்வரி - எங்க ஊர்ப் பச்சைப்புடவைக்காரி - இந்தக் குழந்தைக்குத் தன்னைக் காட்டிக்கணும்னு நெனச்சா இந்தக் குழந்தை இந்த மேடையிலேயே கடவுளப் பாக்கும்.”
நிர்வாகிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
""எனக்கு ஒரு நல்ல பிரம்பு வேணும். ஏற்பாடு பண்ண முடியுமா?” ஐந்தாவது நிமிடம் சுவாமிஜியிடம் ஒரு பிரம்பு தரப்பட்டது. சுவாமிஜி ஒலிபெருக்கியில் முழங்கினார்.
""இந்தக் கூட்டத்தில் உமா மிஸ் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.”
முப்பது வயதுப் பெண் ஆசிரியை ஒருத்தி வியர்க்க விறுவிறுக்க மேடைக்கு ஓடி வந்தாள்.
அந்த ஆசிரியையை அடிப்பது போல் பிரம்பை ஓங்கினார் சுவாமிஜி. பள்ளியின் தாளாளர் சுவாமிஜியிடம் ஓடி வந்தார்.
""சாமி நெறைய டிவி சேனல் ஆளுங்க எல்லாம் கேமராவோட வந்திருக்காங்க. நடக்கறத எல்லாம் அப்டியே படம் பிடிச்சிக்கிட்டு இருக்காங்க.”
""பிடிக்கட்டுமே. அதனால நமக்கு என்ன வந்தது.? ஒரு வேளை கடவுள் நேர்ல வந்தா டிவி பாக்கறவங்க எல்லாரும் பாக்கலாமே!” சுவாமிஜியின் குரலில் மிதமிஞ்சிய குறும்பு.
""உமா மிஸ், நிருபமா உங்க மாணவியா?”
""ஆமாம் சாமி.”
""நீங்கதான் நிருபமாவுக்குக் கடவுள் இல்லைன்னு சொல்லிக் கொடுத்தீங்களா?”
""ஐயையோ சத்தியமா இல்ல சாமி. அவ மனச மாத்தணும்னு நான் படாதபாடு படுறேன். என்னால முடியல சாமி. நிருபமாவோட அப்பாவும், அம்மாவும் நாத்திகவாதிகள். நிருபமா இதுவரைக்கும் எந்தக் கோயிலுக்கும் போனதுல்ல எந்த சாமியையும் கும்பிட்டதில்ல. அதான். . .
நிருபமா பார்க்காதபோது ஆசிரியைக்கு சுவாமிஜி சைகை காட்டினார். ஆசிரியை புரிந்து கொண்டாள். அவளும் நடிக்க ஆரம்பித்தாள்.
""உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன் சாமி. என்னை அடிக்காதீங்க. ஏற்கனவே நான் ரொம்ப பலவீனமா இருக்கேன். நேத்து சரியாத் தூங்கல. இன்னிக்கு மத்தியானம் நான் சாப்பிடல. லேசாக் காய்ச்சல் வேற இருக்கு. தலைசுத்தலும் இருக்கு. இப்போ அடிச்சீங்கன்னா நான் மயங்கி விழுந்துருவேன் சாமி. எனக்கு ஒரு மாசம் அவகாசம் கொடுங்க. இந்தக் குழந்தைய எப்படியாவது திருத்திடறேன். உங்க கால்ல விழுந்து கும்பிடறேன் சாமி. என்னை அடிக்காதீங்க. என்னால தாங்கமுடியாது. கொஞ்சம் கருணை காட்டுங்க சாமி, ப்ளீஸ்.”
""கருணையெல்லாம் காட்டமுடியாது. கைய நீட்டினீங்கன்னா கையில மட்டும்தான் அடி விழும். இல்லை, உங்க முகத்துலேயே அடிப்பேன்.”
சிவாச்சாரியார் ஆசிரியையை அடிக்கப் பிரம்பை ஓங்கினார். காலில் ஏதோ குறுகுறு உணர்வு ஏற்பட குனிந்து பார்த்தார். நிருபமா அவர் காலில் விழுந்திருந்தாள்.
""நீ எதுக்கும்மா என் கால்ல விழற? எந்திரி.”
நிருபமா எழுந்து நின்று தன் கையை சிவாச்சாரியார் முன் நீட்டினாள்.
""சாமி, உமா மிஸ்ஸை அடிக்காதீங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். தப்பு என்மேலதான் சாமி. அவங்க எவ்வளவோ சொன்னாங்க. நான் தான் கேக்கல. என்னை நல்லா அடிங்க சாமி. பாவம் அவங்கள ஒண்ணும் செய்யாதீங்க. ப்ளீஸ்..”
சுவாமிஜி கையில் இருந்த பிரம்பைக் கடாசினார். நிருபமாவை அள்ளி எடுத்துக்கொண்டார். அவளுடைய நெற்றியில் முத்தமிட்டார். பின் அவள் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்தார்.
""நிருபமா, நீ கேட்டமாதிரியே கடவுள உனக்குக் காமிச்சிட்டேன்.”
""என்ன சொல்றீங்க சாமி?
""உமா மிஸ் அடிவாங்கப் போறாங்கன்னு தெரிஞ்சவுடன் அவங்களுக்காக என்கிட்ட வேண்டிக்கிட்ட. அவங்களுக்குப் பதிலா அந்த வலிய நீ தாங்கிக்கவும் தயாரா இருந்த. நீ அவங்க மேல வச்சிருக்கற அந்த அன்பு தாம்மா கடவுள். நாம கோயில்ல பாக்கறது எல்லாம் இந்த அன்பின் உருவம் தான். அரக்கனை அழிக்க சிங்கத்து மேல வந்த அந்த துர்காதேவிதான் இப்போ டீச்சருக்காக நீ சிந்தின கண்ணீரா அவதாரம் எடுத்திருக்கா. நீ உங்க உமா மிஸ் மேல வச்சிருக்கற அந்த அன்புதாம்மா உண்மையான கடவுள். அன்பே சிவம். அன்பு கனிந்த கனிவே சக்தி.”
நிருபமா ஆச்சரியம் கலந்த மரியாதையுடன் சிவாச்சாரியாரைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
""அன்பு தான் கடவுள்னு தெரிஞ்சிக்கிட்டப்பறம் கடவுள் இல்லைன்னு சொல்றது முட்டாள்தனம். ""சூரியன்னு ஒண்ணும் இல்லை. அங்க இருக்கறது ஒரு நெருப்பு உருண்டைதான் ன்னு சொல்றது மாதிரியான முட்டாள்தனம். அது நெருப்பு உருண்டை தான். ஆனா அதுக்கு நாம சூரியன்னு பேர் கொடுத்திருக்கோம். உனக்கு எப்படி நிருபமான்னு பேரு வச்சிருக்காங்களோ அதே மாதிரி அந்த நெருப்புருண்டைக்கு சூரியன்னு பேரு வச்சிருக்கோம். உங்கம்மா உன்மேல வச்சிருக்கற அன்பு, நீ அவங்க மேல வச்சிருக்கற அன்பு. நீ இந்த உமா மிஸ் மேல வச்சிருக்கற அன்பு, அவங்க உன் மேலே வச்சிருக்கற அன்பு எல்லாமே கடவுள்தான். நம்ம வசதிக்காக அந்த அன்புக்கு மீனாட்சி, பரமசிவன், வெங்கடாஜலபதி, கள்ளழகர்னு பேரு கொடுத்திருக்கோம் அவ்வளவுதான்.”
நிருபமாவும், உமா மிஸ்ஸும் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் சிவாச்சாரியாரின் கால்களில் விழுந்தனர். அரங்கத்தில் இருந்த ஆயிரம் பேரும் எழுந்து நின்று தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்குக் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.
நிற்பது நடுத்தெரு என்பதையும் பார்க்காமல் பழம் விற்பவளின் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
""இந்தப் பாவிக்கும் காட்சி தருகிறீர்களே தாயே!” அழுகையினூடே சொன்னேன்.
நிமிர்ந்து பார்த்தால் அந்த இடம் காலியாக இருந்தது. என் இதயம் அவள் அருளால் நிரம்பியிருந்தது.