வாழ்வில் துன்பம் குறுக்கிடுவது இயல்பு. மனஉறுதியுடன் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர தற்கொலை செய்ய கூடாது. ""உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். இறைவன் உங்கள் மீது அளப்பரிய கருணை கொண்டவனாக இருக்கிறான் என்கிறது குர்ஆன். நபிகள் நாயகம் தற்கொலை குறித்து ""எந்தப் பொருளைக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்கிறாரோ மறுமையில் அந்த பொருளால் அவர் வேதனைக்கு ஆளாவார். இரும்பைக் கொண்டு தற்கொலை செய்தால், நரகத்தில் இரும்பால் வயிற்றில் குத்திக் கொள்ள நேரிடும். விஷம் அருந்தினால் மறுமையில் விஷத்தால் துன்பம் உண்டாகும். நிரந்தரமாக இந்த வேதனை இருந்து கொண்டே இருக்கும் என்கிறார். தீயில் சுட்ட தங்கம் ஆபரணமாவது போல துன்பம் என்னும் நெருப்பால் பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகள் ஆபரணங்களாக நம்மை வந்தடைகின்றன. துன்பத்தில் இருந்து நல்ல பண்புகளைப் பெறுபவனே புத்திசாலி.