முயலாமை, இல்லாமை, இயலாமை இவற்றை விட கொடியது பொறாமை. இந்த ஆமை ஒருவனது மனதிற்குள் நுழைந்தால் நிம்மதி அடியோடு போய்விடும். அப்படித்தான் ஒருவர் வாழ்விலும் நடந்தது. அவனுடைய எதிர்வீட்டுக்காரர் வசதியுடன் வாழ்வதாக எண்ணி பொறாமைப்பட்டான். அவனுக்கு ஒரு மடங்காக கிடைக்கும் ஒரு பொருள், எதிர்வீட்டுக் காரருக்கு இரு மடங்காக கிடைத்துக் கொண்டிருந்தது. வருவது வரட்டும், போவது போகட்டும் என சந்தோஷமாக இருக்க தெரியவில்லை. தனக்கு ஒரு மடங்காக கிடைக்கும் நன்மை, அவனுக்கு இரு மடங்காக கிடைக்கிறதல்லவா... இதே போல ஒரு மடங்கு தீமை கிடைத்தால், அதுவும் அவனுக்கு இரு மடங்காகத் தானே கிடைக்கும் என நினைத்தான். நன்மை, தீமை கணக்கை பார்த்தவனுக்கு, தன்னுடைய அறிவு எத்தனை மடங்கு வேலை செய்கிறது என பார்க்கத் தெரியவில்லையே... தன்னுடைய ஒரு கண் குருடாக வேண்டும் என கடவுளிடம் வேண்டினான். பொறாமையின் தீமையை உணர்த்த இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது என கடவுள் நினைத்து அப்படியே செய்தார். மறுநாளே ஒரு கண்ணில் பார்வை போனது. ஒரு கண் போன வலியை கூட அவன் பொருட்படுத்தாமல், எதிர்வீட்டுக்காரருக்கு இரு கண்களும் பறிபோகும் என காத்திருந்தான். ஆனால் அவருக்கு கண்கள் இருந்ததோடு பார்வையிலும் தெளிவு இருந்தது. அதைக் கண்ட பொறாமைக்காரன் புழு போல துடித்தான். கடவுளிடம் மன்றாடினான். ""கடவுளே! ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? சிரித்தபடி கடவுள் ""மகனே... உனக்கு மட்டுமில்லை; பொறாமை கொண்ட யாருக்கும் இதுவே நடக்கும். உன் பொறாமையிலிருந்தே நன்மை, தீமையின் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள். மனதில் நல்லது நினைத்தால் அது மற்றவருக்கும் நன்மை தரும்; மற்றவருக்கு நீ கெடுதல் நினைத்தால் மற்றவரது தீமையும் உனக்கே திரும்பும். அதனால் மனதில் எப்போதும் நன்மையின் கதவு மட்டும் திறந்திருக்கட்டும். எல்லாம் நல்லதாக அமையும் என்றார்.