பதிவு செய்த நாள்
18
செப்
2018
10:09
சபரிமலை : புரட்டாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, தரிசனம் செய்தனர். கேரளாவில், சமீபத்தில் பெய்த பலத்த மழையால், 55 நாட்களாக, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மழை குறைந்து, நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளதால், புரட்டாசி மாத பூஜைகளுக்காக, நேற்று முன்தினம் மாலை முதல், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, நடைதிறந்து விளக்கேற்றினார். தந்திரி கண்டரரு ராஜீவரரு, அபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை, உச்சபூஜைகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடந்தது. 21-ம் தேதி வரை, தொடர்ந்து பூஜைகள் நடக்கும். அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். பம்பையில், திருவேணி பாலம் அருகே பக்தர்கள் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கணபதி கோவிலின் பின்புறம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் அனைத்து வசதிகளும் வழக்கம்போல் உள்ளன; அங்கு எந்த பாதிப்பும் இல்லை.