300 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் கொண்டாடும் இந்துக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2018 02:09
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில், மொஹரம் பண்டிகையொட்டி, அல்லாவுக்கு விழா எடுத்து இந்துக்கள் வெகு சிறப்பாக அல்லா திருவிழாவை கொண்டாடினர்.
தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதுார் கிராமத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக அல்லாவுக்கு விழா எடுத்து இந்துக்கள் கொண்டாடிவருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மொஹரம் திருநாளான இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மெஹராம் விழாவிற்கு பத்து நாளாக அல்லா சாமி என்றழைக்கப்படும் “உள்ளங்கை” உருவத்தை வெளியே எடுத்து வைத்து அதற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று இரவு ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. பின்னர் நள்ளிரவு தொடங்கி அல்லா என்றழைக்கப்படும் உள்ளங்கை திருவுருவத்தை வீதிவுலாவாக இன்று(21ம் தேதி)அதிகாலை வரை எடுத்துச் சென்றனர். அப்போது பெண்கள் வீடுகளில் புதிய மண் கலையத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர். பின்னர் அல்லா கோவில் முன் தீமிதி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற கோரி தீயில் இறங்கி அல்லாவை வழிபட்டனர். இதை போல் கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்திலும் அல்லா திருவிழாவை கொண்டாடினர்.