பதிவு செய்த நாள்
22
செப்
2018
10:09
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருமலையில் நடந்த, வருடாந்திர பிரம்மோற்ஸவம், தீர்த்த வாரியுடன் நேற்று (செப்., 21ல்) நிறைவடைந்தது. திருமலை, ஏழுமலையான் கோவிலில், இம்மாதம், 13ல், கொடியேற்றதுடன் துவங்கிய வருடாந்திர பிரம்மோற்சவம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன், நேற்று (செப்.,21ல்) நிறைவு அடைந்தது.
இதற்காக, ஸ்ரீதேவி, பூதேவி மலையப்பஸ்வாமி சமேத உற்சவமூர்த்திகள் மற்றும் சக்கரத் தாழ்வார், ஏழுமலையான் கோவிலிலிருந்து, திருக்குளக்கரைக்கு, தங்க பல்லக்கில் அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்குள்ள மண்டபத்தில் அவர்களுக்கு, ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இதன்பின், சக்கரத்தாழ்வாரை, அர்ச்சகர்கள் திருக்குளத்திற்கு எடுத்துச் சென்று, தீர்த்தவாரி நடத்தினர்.
அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருக்குளத்தில் புனித நீராடினர். அதற்கு பின், உற்சவ மூர்த்திகள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.மாலையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பஸ்வாமி, தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர். இதன்பின், பிரம்மோற்ஸ வம் நிறைவடைந்ததற்கு அடையாளமாக, கொடிமரத்தில் ஏற்றியிருந்த கருடகொடி இறக்கப் பட்டது. திருமலையில், வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடந்த எட்டு நாட்களில், 21 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், புரட்டாசி மாதத்தில் வரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும், வி.ஐ.பி தரிசனத்தை, தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.